Skip to main content

சலசலப்பை ஏற்படுத்திய பேச்சு..! விளக்கம் அளித்த செந்தில் பாலாஜி

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Senthil Balaji's speech at karur

 

தமிழக சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற அனைத்து கட்சிகளும், வேட்பாளர் அறிவிப்பு, பிரச்சாரம் என தங்களது தேர்தல் பணிகளை முழுவிச்சில் செய்துவருகின்றனர். இதில் 125க்கும் மேலான தொகுதிகளில் அதிமுகவும் திமுகவும் நேரடியாக மோதுகின்றன. அதன்படி கரூர் தொகுதியில் திமுக சார்பில் செந்தில் பாலாஜியும், அதிமுக சார்பில் எம்.ஆர். விஜயபாஸ்கரும் போட்டியிடுகின்றனர். இருவரும் கரூர் தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றனர். 

 

இந்நிலையில் நேற்று (17.03.2021) கரூர் பகுதியில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, திமுக தேர்தல் பணிமனை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் பேசியபோது, ‘ஸ்டாலின் பதவி ஏற்றுக்கொண்டவுடன் மாட்டுவண்டிகள் மூலம் மணல் அள்ள இருக்கும் தடைகள் அகலும். இதைத் தடுக்கும் அதிகாரிகள் மாற்றப்படுவார்கள்’ என்று பொருள்படும் வகையில் பேசியிருந்தார். இது சமூகவலைதளங்களில் திமுகவின் அராஜக போக்கு என பெரிய அளவில் வைரலானது. 

 

அதற்கு விளக்கம் அளித்துள்ள செந்தில்பாலாஜி, “எங்களைச் சுற்றியுள்ள நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் மாட்டுவண்டியில் மணல் எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. எங்கள் கரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் குடும்பங்கள் மாட்டுவண்டி மணல் வியாபாரத்தை நம்பி இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. நிறுத்தினால், தமிழகம் முழுவதும் நிறுத்த வேண்டும். அல்லது அனுமதி கொடுத்தால், தமிழ்நாடு முழுக்க அனைத்து மாவட்டங்களுக்கும் அனுமதி அளிக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில் மட்டும் ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், அதற்கு காரணம் இன்றைய கரூர் தொகுதி அதிமுக வேட்பாளர். அவர் ஒரு எம்.சாண்ட் குவாரி வைத்திருக்கிறார். 

 

மாட்டுவண்டி உரிமையாளர்கள் மதுரை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். நீதிமன்றமும் இந்த மனு மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சொல்லியுள்ளது. அரசாங்கமும் விரைந்து நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்திருந்தது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எங்கள் வாக்குறுதி என்பது நாமக்கல், திருச்சி போன்று கரூர் மாவட்டத்திலும் மணல் குவாரிகள் முறைப்படுத்தப்பட்டு, மாட்டுவண்டி உரிமையாளர்களுக்குப் பொதுப்பணித்துறை மூலமாக அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும். கமல்ஹாசன், என்ன பேசுகிறோம் என தெரிந்து பேச வேண்டும். அவர் கட்சி வேட்பாளர் இங்குவந்து ‘நாங்கள் மணல் அள்ள அனுமதிக்க மாட்டோம். முறைப்படுத்த மாட்டோம்’ என பேச சொல்லுங்கள். விரைவில் திமுக ஆட்சி அமையும். அதன்பிறகு முறைப்படி இவர்களுக்கு மாட்டுவண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்கப்படும்” என்று தெரிவித்தார்.  


 

சார்ந்த செய்திகள்

Next Story

பெண் நடனக் கலைஞருக்கு பாலியல் சித்ரவதை;3 பேர் மீது வழக்கு

Published on 22/03/2024 | Edited on 22/03/2024
of female dancer; case against 3 people

பெண் நடனக் கலைஞரை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததோடு அரசியல் பிரமுகர்களுக்குப் பாலியல் ரீதியாக இணங்குமாறு கொடுமைப்படுத்தியதாக மூன்று பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அவருடைய தாயுடன் திருவிழாக்களில் நடனமாடும் தொழில் செய்து வந்தார். பல்வேறு குழுக்கள் இணைந்து நடனமாடி வந்த நிலையில், அண்மையில் கரூரைச் சேர்ந்த மதி என்பவருடைய நடனக் குழுவில் 22 வயதான அந்த பெண் இணைந்துள்ளார்.

பல்வேறு இடங்களில் திருவிழாக்களில் நடனமாடி வந்த நிலையில், அப்பெண்ணை பாலியல் ரீதியாக மதி வன்கொடுமை செய்துள்ளார். மேலும் அரசியல் கட்சியினர் சிலருக்கும் பாலியல் ரீதியாக இணங்குமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுத்ததால் தனி அறையில் மூன்று நாட்களாக அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பெண்ணின் தாய் மகளைப் பார்க்க வந்தபொழுது சக நடனக் கலைஞர்கள் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அப்பெண்ணின் தாயார் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், அவர் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தியது உறுதியானது. அவரை மீட்ட போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவத்தில் மதி உட்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மூவரையும் தேடி வருகின்றனர்.

Next Story

இரத்தத்தில் கடிதம்! சிக்கலில் ஜோதிமணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
Karur parliament constituency congress conflict  jothimani

நாடு முழுவதுமுள்ள கட்சிகள், பாராளுமன்றத் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை மும்முரமாக செய்துவருகின்றன. பெரும்பாலான கட்சிகள் தங்களுடைய வேட்பாளர்கள் பட்டியலை தயார் செய்து வைத்துள்ளன. யாருக்கு எந்த தொகுதி, எங்கெல்லாம் வேட்பாளர்களை மாற்ற வேண்டும், எப்படித் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் கூட வரையறை செய்துவிட்டன.

இந்நிலையில், கரூர் பாராளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள கோஷ்டி மோதல், அகில இந்திய காங்கிரஸ் தலைமைவரை பரபரப்பை எகிற வைத்துள்ளது. இந்த பாராளுமன்றத் தொகுதியில், வேடசந்தூர், அரவக்குறிச்சி, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை போன்ற சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 1984 வரை இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி வென்று வந்த இத்தொகுதியில், அதன்பின்னர், தி.மு.க., அ.தி.மு.க., தமிழ் மாநில காங்கிரஸ் என மாறி மாறி வென்ற நிலையில், மீண்டும் 2019ல் காங்கிரஸ் கட்சி இத்தொகுதியில் வென்றுள்ளது.

கடந்த 2019ல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ஜோதிமணி, 6 லட்சத்து 95 லட்சம் வாக்குகள் பெற்றார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தம்பிதுரையை 4 லட்சம் வாக்கு கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்நிலையில், வரவுள்ள தேர்தலில் ஜோதிமணிக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு வழங்கக்கூடாது என்று எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கடந்த தேர்தலில் வெற்றிபெறச் செய்த கட்சிக்காரர்களுக்கு எவ்வித மதிப்பும் மரியாதையும் இவர் கொடுப்பதில்லை. இவரால் கட்சியிலிருந்து வெளியேறிய பல நிர்வாகிகள் அ.தி.மு.க.வில் இணைந்துவிட்டனர். அவருடைய செயல்பாடுகள்தான் இப்படி இருக்கிறது என்றால், அவருடைய பேச்சும் சரியாக இல்லை. மாநில காங்கிரஸ் தலைவர் அழகிரி நடத்திய வீடியோ கான்ஃபரன்ஸ் கூட்டத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அதோடு, ராகுல்காந்திக்கு இணையான தலைவராகத் தன்னை நினைத்துக் கொண்டு செயல்படுகிறார். கூட்டணிக் கட்சிக்கான தர்மத்தை மதிக்காமல் கரூர் கலெக்டர் அலுவலகத்தில் தி.மு.க.வுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக போராட்டம் நடத்தியது என பல்வேறு குற்றச்சாட்டுகளை அவருக்கு எதிராக முன்வைக்கின்றனர்.

வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மீண்டும் போட்டியிட ஜோதிமணிக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என்று கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சியினர் போர்க்கொடி தூக்கியுள்ள நிலையில், மாநில தலைவர் அழகிரிக்கு, க.பரமத்தி வட்டார காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் செந்தில்குமார், இரத்தத்தில் எழுதிய கடிதத்தை மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் பாங்க் சுப்பிரமணியத்திடம் கொடுத்துள்ளார்.