jaya - senthil balaji

டி.டி.வி. தினகரனின் அமமுகவில் உள்ள செந்தில் பாலாஜி, திமுகவில் இணைய உள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் செந்தில் பாலாஜி, திமுக கொள்கை பரப்பு செயலாளர் ஆ.ராசாவோடு விமானநிலையத்தில் இருப்பதைப்போன்ற புகைப்படம் இணையத்தில் பரவி வருகிறது. இதனால் அவர் திமுகவில் இணைவது உறுதியாகவிட்டது என்கின்றனர். செந்தில் பாலாஜி ஏற்கனவே திமுகவில் இருந்தவர்தான். அவர் அரசியல் பாதையை பார்ப்போம்.

Advertisment

கரூர் ராமேஸ்வரப்பட்டியைச் சேர்ந்தவர் செந்தில் பாலாஜி. இவரது இயற்பெயர் செந்தில்குமார். நியூமராலஜி பார்த்த அவர், தனது பெயரில் குமாரை நீக்கிவிட்டு, பாலாஜியை சேர்த்துக்கொண்டார்.

கல்லூரி படிக்கும்போதே அரசியலில் ஈடுபாட்டை காட்டிய செந்தில் பாலாஜி, முதல் முதலில் மதிமுகவில் இணைந்தார். ஒன்றிய கவுன்சிலராக இருந்த அவர், பின்னர் திமுகவில் இணைந்தார்.

2000 ஆவது ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். தொடக்கத்தில் மாணவரணி பொறுப்புகளும், அடுத்த சில ஆண்டுகளில் மாவட்டச் செயலாளர் பொறுப்புகளும் வழங்கப்பட்டது. 2006ஆம் ஆண்டில் கரூர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதல் முறையாக சட்டப்பேரவைக்குள் நுழைந்தார். அப்போதைய திமுக ஆட்சியை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்.

Advertisment

2011ஆம் ஆண்டு மீண்டும் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற அவருக்கு போக்குவரத்துத்துறை அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு வழங்கினார். நான்கு ஆண்டுகளாக அதிமுகவில் செல்வாக்காக வலம் வந்தார். 2015ஆம் ஆண்டு ஜூலை மாதம் அமைச்சர் பதவியையில் இருந்தும், மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்.

2016 மே தேர்தலில் கரூர் தொகுதியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டார். ஆனால் அரவக்குறிச்சியில் போட்டியிட அதிமுக வாய்ப்பு வழங்கியது. அரவக்குறிச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி - ஓ.பன்னீர்செல்வம் அணி, தினகரன் அணி என அதிமுக இரண்டானது. இதில் தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்டார். தினகரனுக்கு ஆதரவாக செயல்பட்ட 18 எம்எல்ஏக்கள் சபாநாயகரால் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். அதில் ஒருவர் செந்தில் பாலாஜி.