Selvaperunthagai says Congress will support whatever decision DMK takes

Advertisment

தி.மு.க தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதையொட்டி, காஞ்சிபுரத்தில் தி.மு.கவின் பவள விழா பொதுக்கூட்டம் இன்று (28-09-24) நடைபெற்றது. திமுக பொதுச்செயலாளரும் அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெற்ற இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்களான, வைகோ, கி.வீரமணி, தொல்.திருமாவளவன், செல்வப்பெருந்தகை, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா உள்ளிட்டவர்கள் பங்கேற்று பேசினர்.

அந்த வகையில், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது, “இந்தியாவுக்கே தமிழ்நாடு தற்போது வழிகாட்டியாக உள்ளது. தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று சிலர் மனப்பால் குடித்து கொண்டிருக்கின்றனர். விண்ணும் மண்ணும் இருக்கும்வரை தி.மு.க என்றும் நிலைத்திருக்கும். கொள்கை நலனுக்காக தி.மு.க கூட்டணியில் இணைந்தேன். முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மெய் காப்பாளனாக இருப்பேன்” என்று பேசினார்.

அதனை தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “தி.மு.கவுடன் எப்போதும் காங்கிரஸ் பேரியக்கம் தோளோடு தோள் நிற்கும். தி.மு.க எடுக்கும் எந்த முடிவிற்கும் காங்கிரஸ் துணையாக இருக்கும். எவ்வளவு சோதனை வந்தாலும், தி.மு.க மீண்டு வரும். இந்தியாவில் மாநில கட்சிகளில் முதன்மையானதாக தி.மு.க இருக்கிறது” என்று தெரிவித்தார்.