Skip to main content

கோபம் வருமா வராதா? எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது? ரஜினியை போட்டுதாக்கும் சீமான்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

நக்கீரன் இணையதளத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சிறப்பு பேட்டி அளித்தார்.
 

தொடர்ந்து நீர் மேலாண்மை பற்றி உங்கள் கட்சி பேசுகிறது. சமீபத்தில் பேசிய ரஜினி, நதிநீர் இணைப்பு பாஜக தேர்தல் அறிக்கையில் இருக்கிறது. பாஜக ஆட்சி மீண்டும் ஆட்சி அமைத்தால் அதனை சாத்தியப்படுத்த வேண்டும் என்று பேசியிருக்கிறார். இதுபற்றி உங்கள் கருத்து என்ன?

 

rajini



இது ஒரு ஏமாற்று. ஏரி, குளம், ஊரணி, கிணறு நாம் உருவாக்கியது. ஆறுகளை நாம் உருவாக்கவில்லை. அதனை உருவாக்கியது அருவி. அது தனக்காக பாதை கண்டு ஓடியது. எங்கு மேடு, எங்கு பள்ளம் என அதற்கு ஏற்ப ஓடியது. அதனை இணைப்பது என்பது முட்டாள்கள் கூடி முடிவெடுப்பது போன்ற செயல். 





 

ஆறுகளை அதன் போக்கில் ஓடவிட்டு, தேவையென்றால் அதன் பக்கத்தில் சேமித்துக்கொள்லாமே தவிர, அதன் போக்கை திருப்பக்கூடாது. உடலில் ரத்த நாளங்கள் போல, பூமியின் ரத்த நாளங்கள் ஆறுகள். அதனை இங்கு திருப்புவேன் அங்கு திருப்புவேன் என்பதா? ஒரு சாதாரண ரோடு போடுவதற்கே பல காடுகளை அழிக்கிறோம், மலைகளை அழிக்கிறோம். அதனை எதிர்த்தே போராடிக்கொண்டிருக்கிறோம். ஆறுகளை திசை திருப்புகிறேன் என்றால் எவ்வளவு லட்சக்கணக்கான காடுகள், மலைகள், விவசாய நிலங்கள், உயிரிழனங்களை அழிக்கணும். ஒரு அறிவும் இல்லாமல் நதிகளை இணைக்கிறோம் என்று சொல்லுகிறார்கள்.

 

நதிகள் எங்கு இணையாமல் இருக்கிறது. மனங்கள்தான் இணைய மறுக்கிறது. காவேரி ஒரே நதியா. மூன்று நதியா. ஒரே நதிதான். ஏன் எனக்கு தண்ணீர் வரவில்லை. உங்களுக்கு நதிநீர் சிக்கல் இருக்கிறது. நீங்கள் முதல் அமைச்சராக வேண்டும் என்று ஆசைப்படும்போது காவிரி பற்றி என்ன சொல்கிறீர்கள் என்றால் பதில் இல்லை. ஆகையால் நதிகளை இணையுங்கள் என்கிறார். காவிரியோட எந்த நதியை இணைப்பார்கள். அவரை சொல்ல சொல்லுங்கள். காவிரி இணைய மறுத்ததா? தர மறுக்கிறான். 150 டிஎம்சி தண்ணீர் தர மறுப்பவனை இணையலாம் என்றால் துண்டாக போய்விடமாட்டானா? எங்களை அடித்து விரட்டிக்கொண்டிருப்பவனிடம் நதிகளை இணைக்கலாம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வானா? எங்களுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டால் நதிகள் இணைப்புக்கு பேச்சே இருக்காது. 

 

seeman


 

ஓயாம இதையே பேசிக்கொண்டிருப்பது. நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் கொடுப்பதாக சொன்னார். இது சாத்தியமில்லை என்று அப்பவே சொன்னோம். ஒரு புகழ் பெற்ற கலைஞன், புரிந்து பேச வேண்டும். சம்மந்தம் இல்லாமல் பேசக்கூடாது. நாங்கள் எவ்வளவு நீர் மேலாண்மை குறித்து கொடுத்துள்ளோம். எவ்வளவு ஆக சிறந்த திட்டங்களை கொடுத்திருக்கிறோம். அதைப்பற்றியெல்லாம் பேசாமல் பாஜகவை பற்றி மட்டும் பேசுவது என்ன இது. அது தேவையில்லாததுதானே உங்களுக்கு. 



நீங்க ஷீட்டிங் போறீங்கன்னா, ஷீட்டிங்தான் போகணும். நடிக்கப்போறீங்கன்னா, நடிக்கத்தான் போகணும். நதிநீரை இணைக்கணுமுன்னா இணைத்துக்காட்டுங்கள் பார்ப்போம். மக்களை ஏமாற்றும் வேலை. என்னை முட்டாள் என்று நினைத்து பேசிக்கொண்டிருக்கக்கூடாது. அப்போ கோபம் வருமா வராதா. எத்தனை நாளைக்கு சகித்துக்கொள்வது. ஒரு கோடி கொடுப்பதாக சொன்னீர்கள். எங்கு கொடுத்தீர்கள். ஒரு கோடியை வைத்து ஒரு கிலோ மீட்டர் நதியை இணைத்துவிடலாமா. இதையெல்லாம் ஒரு நகைச்சுவை நடிகர் கூட பேசக்கூடாத ஒன்னு. இதனை ஒரு உயர்ந்த இடத்தில் இருக்கும் நடிகர் இப்படி பேசிக்கொண்டு அலையலாமா? இயற்கையை நேசிப்பவன், இயற்கையை படிப்பவன் இதனை எப்படி பார்ப்பான். அப்படி பார்ப்பதுதான் விமர்சிக்கிறது என்று ஒன்றும் இல்லை.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

அதிமுக - நா.த.க.வினர் இடையே திடீர் மோதல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Sudden issue between ADMK and ntk

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இத்தகைய சூழலில் தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் அதிமுக - நாம் தமிழர் கட்சியினர் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. பாலக்கோடு காவல் நிலையம் அருகே நாம் தமிழர் கட்சியினருக்கு காலை 11 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதே போன்று அதிமுகவினருக்கு காலை 12 மணியளவில் பிரச்சாரம் மேற்கொள்ள நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் 12 மணிக்கு முன்பாகவே அதிமுகவினர் பாலக்கோடு காவல் நிலையம் அருகே வந்து பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.

அப்போது அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாக அதிமுகவினர் பிரச்சாரம் செய்ததால் நாம் தமிழர் கட்சியினர் எதிர்த்துள்ளனர். இதனால் இரு கட்சியினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது. மேலும் நாம் தமிழர் கட்சியினர் வந்த வாகனத்தை அதிமுகவினர் உடைத்ததால் அப்பகுதியில் பெரும்  பரபரப்பு ஏற்பட்டது. இது தொடர்பாக பாலக்கோடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.