Skip to main content

தொண்டர்கள் வயிறு எரிந்தால் நாசமாக போவார்கள்..! - பெண் எம்எல்ஏ ஆவேசம்!

Published on 12/04/2021 | Edited on 12/04/2021

 

dddd

 

‘கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கேட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்துகொண்டதாலும், கழக கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும், அவப்பெயர் உண்டாகும் விதத்திலும், நடைபெற்று முடிந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கழகத்தின் அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்தும், எதிர்க்கட்சியினருக்கு ஆதரவாகவும் தேர்தல் பணியாற்றிய காரணத்தாலும்,


 
கடலூர் கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த மகளிரணி துணைச் செயலாளர் சத்யா பன்னீர்செல்வம் எம்எல்ஏ, பண்ருட்டி நகர்மன்ற முன்னாள் தலைவர் பி.பன்னீர்செல்வம், பண்ருட்டி வடக்கு ஒன்றியச் செயலாளர் பெருமாள், அண்ணாகிராமம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் மார்ட்டின் லூயிஸ், நெல்லிக்குப்பம் நகரச் செயலாளர் சவுந்தர், வீரபெருமாநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தவைர் ராம்குமார் ஆகியோர் இன்று (12.04.2021) முதல் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார்கள். கழக உடன்பிறப்புகள் யாரும் இவர்களுடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறோம்’ என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்திருந்தனர்.

 

dddd

 

இந்தநிலையில், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ சத்யா பன்னீர்செல்வம், அவரது கணவர் பண்ருட்டி முன்னாள் நகர்மன்ற தலைவர் பன்னீர்செல்வம் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழகம் முழுவதும் ஒரு தவறும் செய்யாத எங்களைப் போன்ற உண்மையான அதிமுக விசுவாசிகளை இழந்துகொண்டே போனால் கட்சியின் நிலை?. தேர்தலில் அதிமுக வேட்பாளர் அறிவிப்பிற்குப் பிறகு நாங்கள் அரசியல் மற்றும் பொது வாழ்க்கையிலிருந்து விலகி அறிக்கை வெளியிட்டுவிட்டோம். 

 

அதன்பிறகு வேட்பாளர் அறிவிப்பில் இருந்து தேர்தல் முடியும் வரை பண்ருட்டி சட்டமன்ற தொகுதியிலேயே இல்லை. இறை சுற்றுலா மேற்கொண்டிருந்தோம். நாங்கள் ஊரிலே இல்லாத நிலையில் கட்சிக்கு எதிராகவோ, எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவாகவோ எப்படி தேர்தல் பணியாற்ற இயலும்.

 

dddd

 

இந்நிலையில், எங்கள் மீது அபாண்டமான, பொய்யான குற்றசாட்டை சுமத்தி நால்வரை நீக்குவதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்து இருப்பது மிகுந்த மன வேதனை அளித்துள்ளது. கடலூர் அமைச்சர் சம்பத் சொல்படி வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோர் கொடுத்த தவறான தகவலின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

 

உளவுத்துறையைக் கையில் வைத்திருக்கும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி காவல்துறை அறிக்கையைக் கேட்டுப் பெற்று இருந்தாலே உண்மை தெரியும். உண்மையான விசுவாசிகளின் மனதை புண்படுத்தியுள்ளார்கள். இதற்கு காலம்தான் பதில் சொல்லும். 

 

இந்த அறிவிப்பை அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும் ஏற்க மாட்டார்கள். உண்மையாகவே கட்சி விரோத செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் அரசியல் சூன்யகாரர்களான கடலூர் அமைச்சர் சம்பத், வேட்பாளர் சொரத்தூர் ராஜேந்திரன், கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் சிதம்பரம் பாண்டியன் ஆகியோரை நான் வணங்கும் ஈசனும், ஜெயலலிதாவின் ஆன்மாவும் ஒருபோதும் மன்னிக்காது. விசுவாசமான, உண்மையான, தொண்டர்கள் வயிறு எரிந்தால் இந்த படுபாதகர்கள் விரைவில் நாசமாக போவார்கள்.” இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.