Skip to main content

‘அதிமுகவை காப்பாற்ற யாரும் இல்லையா?’ - தோல்விக் குமுறலுக்கு சாத்தூரே சாம்பிள்!

Published on 15/10/2021 | Edited on 15/10/2021

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

“பத்து வருஷத்துக்கு முன்னால சாத்தூர் தொகுதில அதிமுகவுக்கு விழுந்த வாக்கு சதவீதம் 58.32. அப்ப திமுகவுக்கு கிடைச்சது 39.07 சதவீத வாக்குகள்தான். கடந்த சட்டமன்றத் தேர்தல்ல.. இந்தத் தொகுதில திமுக கூட்டணில இருந்த மதிமுக பெற்ற வாக்கு சதவீதம் 38.68. அதிமுக 32.85 சதவீத வாக்குகளைப் பெற்றது. இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல, மாவட்ட பஞ்சாயத்து வார்டுல திமுக 76.83 சதவீத வாக்குகளும், அதிமுக 15.54 சதவீதம் வாக்குகளும் வாங்கியிருக்கு. அதாவது, தோல்வியுற்ற அதிமுக வேட்பாளர் விஜயலட்சுமியைக் காட்டிலும் ஐந்து மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கிறார் திமுக வேட்பாளர் பகவதி திருவேங்கடசாமி. உள்ளாட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறுவது வழக்கம்தான். அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றிபெற்றுள்ளது.

 

அதே நேரத்தில், தோல்வி என்றாலும் கவுரவமான தோல்வியாகத்தானே இருந்திருக்க வேண்டும். இந்த அளவுக்கு மோசமாகவா இருக்க வேண்டும்? அதிமுகவுக்கு ஏன் இந்த வீழ்ச்சி? அதிமுக தொண்டர்கள் கடும் எரிச்சலில் இருக்காங்க. சாத்தூர் ஒரு சாம்பிள்தான்!”  எனப் புள்ளிவிவரங்களோடு பேச ஆரம்பித்தார், அந்த அதிமுக நிர்வாகி. “விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல தேவையில்லாத பிரச்சனை ஓடிட்டிருக்கு. விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜேந்திரபாலாஜிக்கும் சாத்தூர் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மனுக்கும் மொதல்ல பிரச்சனையாச்சு. ராஜவர்மன் கட்சிய விட்டுப் போனாரு.

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

அப்பத்தான் முன்னாள் சபாநாயகர் காளிமுத்தண்ணன் தம்பி ரவிச்சந்திரனை கிழக்கு மாவட்டச் செயலாளராக்கி, சாத்தூர்ல போட்டியிட சீட்டும் வாங்கித் தந்தாரு ராஜேந்திரபாலாஜி. சாத்தூர்ல தோற்றுப்போன சோகத்துல இருந்த ரவிச்சந்திரனுக்கு, திரும்பவும் ராஜவர்மனை ராஜேந்திரபாலாஜி கட்சிக்குள்ள கொண்டுவந்தது அறவே பிடிக்கல. என்னைக் கேட்காம ராஜவர்மனை எப்படி கட்சில சேர்க்கலாம்கிற கோபம் தலைக்கேறிருச்சு. இதப்பத்தி ராஜேந்திரபாலாஜிகிட்ட நிர்வாகிகள் சொன்னப்ப..  ‘முன்னாள் எம்.எல்.ஏ. ஒருத்தரு திரும்பவும் கட்சிக்கு வர்றாருன்னா அது கட்சிக்குப் பலம்தானே? தலைமை சொல்லித்தானே ராஜவர்மனை திரும்பவும் கட்சில சேர்த்திருக்கோம். கிழக்கு மாவட்டத்துல கட்சி வேலை எம்புட்டோ இருக்கு. அதைப் பார்க்காம, என்னைக் கேட்கலைன்னு உங்க மாவட்டச் செயலாளர் குற்றம் சொல்லிட்டிருந்தா நல்லவா இருக்கு’ன்னு அவரோட நியாயத்தச் சொன்னாரு. 

 

ரவிச்சந்திரனுக்கோ ஆத்திரம் குறைஞ்சபாடில்ல. மாவட்டச் செயலாளரான என்னைக் கேட்காம எப்படி கட்சில சேர்க்கலாம்னு,  அவரோட ஆட்கள கூட்டிக்கிட்டு, ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். வரைக்கும் போயி புலம்பிட்டு வந்தாரு. இவரோட பேச்சு தலைமைகிட்ட எடுபடல. ரவிச்சந்திரனை, ராஜேந்திரபாலாஜிக்கும் ராஜவர்மனுக்கும் எதிரான நிலைய எடுக்க வச்சது, இங்கே ஒன்றியச் செயலாளரா இருக்கிற சண்முகக்கனிதான். ஏன்னா.. அரசியல்ல ராஜவர்மனோட வளர்ச்சி, சண்முகக்கனிக்கு பிடிக்காமப் போனதுதான். நிஜத்தை சொல்லணும்னா.. இந்த ரவிச்சந்திரனோ, சண்முகக்கனியோ கட்சி மட்டத்துல, தொண்டர்கள்கிட்ட சொல்லிக்கிற அளவுக்கு செல்வாக்கு இல்லாதவங்க. ஆனாலும்.. ஊராட்சித் தேர்தல் நடக்கிற இந்த நேரத்துல, ஒரு ஸ்டண்ட் அடிச்சுப் பார்த்துடணும்னு திட்டம் போட்டாங்க. 

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

இங்கே ஏ.ராமலிங்கபுரம் அதிமுக கிளைச்செயலாளரா இருக்கிற வீரோவுரெட்டி, ராஜேந்திரபாலாஜிகிட்ட அப்பப்ப செலவுக்குப் பணம் வாங்குறவரு. அவரோட பிள்ளைங்க படிப்புச் செலவுக்குக் கூட ராஜேந்திரபாலாஜி நெறய பணம் கொடுத்திருக்காரு. ஆயிரம் ரெண்டாயிரத்துக்கு கை நீட்டுற அவர வச்சு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அண்ணன் கண்ணு முன்னால ராஜேந்திரபாலாஜிய டென்ஷன் ஆக்கணுங்கிறதுதான் திட்டம். ஊராட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு இந்த வழியா எடப்பாடி பழனிசாமி அண்ணன் வந்தப்ப, அவரு இருந்த காருலதான் ராஜேந்திரபாலாஜியும் இருந்தாரு. இந்த வீரோவுரெட்டி என்ன பண்ணுனாருன்னா.. அவங்க வந்த காருகிட்ட போயி, கே.டி.ஆர். ஒழிகன்னு சத்தமா கத்தினாரு. எடப்பாடி அண்ணன் பக்கத்துல இருக்கிறப்ப, தன்கிட்ட பணம் வாங்குற வீரோவுரெட்டி போட்ட ஒழிக கோஷத்தக் கேட்டு கோபத்துல காரைவிட்டு இறங்கி திட்டினாரு ராஜேந்திரபாலாஜி. அவரு திரும்பவும் காருல ஏறி கிளம்பின பிறகு, வீரோவுரெட்டிய கட்சிக்காரங்க அடிச்சதும் விலக்கிவிட்டதும், காருல ஏற்றி அப்புறம் இறக்கிவிட்டதும், போலீஸ் கண்ணு முன்னாலதான் நடந்துச்சு. அந்தக் களேபரத்துல, சாத்தூர் அதிமுக நகரச்செயலாளர் இளங்கோவை ரவிச்சந்திரன், சண்முகக்கனி தரப்பு தாக்கியதும் நடந்துச்சு. ஆனாலும், ராஜேந்திரபாலாஜி மேலயும் தாக்குதல், கொலை மிரட்டல் விடுத்தல், அவதூறாகப் பேசுதல், ஆள்கடத்தல் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாச்சு. உள்ளாட்சித் தேர்தல் முடிஞ்ச பிறகுதான், ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீனே கிடைச்சது.

 

Sathur- admk rajendrabalaji and rajavarman issue

 

சரி, ரவிச்சந்திரன் தரப்பு தூண்டிவிட்டு ராஜேந்திரபாலாஜி மேல கேஸ் போடவச்ச வீரோவுரெட்டியோட நிலைமை இப்ப என்ன தெரியுமா? எட்டு வருஷத்துக்கு முன்னால வேலை வாங்கித் தர்றேன்னு திமுக கிளைச்செயலாளர்கிட்ட பணம் வாங்கிருக்காரு. வேலை வாங்கித் தரவுமில்லை. பணத்தையும் திரும்பக் கொடுக்கல. மோசடி புகார்ல இப்ப தலைமறைவா இருக்காரு வீரோவுரெட்டி.   

 

கட்சி நிர்வாகிகளுக்குள் நடக்கிற ‘ஈகோ ஃபைட்’ இங்கே விருதுநகர் கிழக்கு மாவட்டத்துல, அதிமுகங்கிற கட்சியே இல்லாத மாதிரி பண்ணிருச்சு. ராஜவர்மனை கட்சில சேர்த்தா சேர்த்துட்டுப் போகட்டும்னு ரவிச்சந்திரன் நினைச்சிருந்தா, உள்ளாட்சி தேர்தல்ல இத்தனை மோசமான தோல்வி ஏற்பட்டிருக்காது. கட்சிய பலப்படுத்த முடியலைன்னாலும், பலவீனப்படுத்திட்டாங்க. ராஜேந்திரபாலாஜி, ராஜவர்மன், இளங்கோ மாதிரியான கட்சி முக்கியஸ்தர்களைப் பகைச்சுக்கிட்டு, உள்ளாட்சித் தேர்தல்ல என்ன ஓட்டு வாங்க முடியும்? சாதாரண தொண்டனும் தெரிஞ்சு வச்சிருக்கிற இந்த விஷயத்தைக்கூட தெரிஞ்சிக்காம இருக்கிறவங்க கையிலதான் இந்த மாவட்டம் இருக்கு.

 

ad

 

சாத்தூர் கட்சி ஆபீஸ்ல ராஜேந்திரபாலாஜி படம் இருக்கவே கூடாதுன்னு, கழற்றி வீசும்படி செஞ்சாரு. கட்சித் தொண்டன் ஒருத்தன் ரவிச்சந்திரனைப் பார்த்துக் கேட்கிறான், ‘ராஜேந்திரபாலாஜி செய்தி மந்திரியா இருக்கிறப்ப, உங்க மருமகனுக்கு ஏ.பி.ஆர்.ஓ. வேலை போட்டுக் கொடுத்தாருல்ல. அதை ரிசைன் பண்ணச் சொல்ல வேண்டியதுதானே? உயர்கல்வி அமைச்சரா பழனியப்பன் இருந்தப்ப, உங்க வீட்டுக்காரம்மாவுக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கிறதுக்கு சிபாரி பண்ணுனது ராஜேந்திரபாலாஜிதானே? அவங்கள ராஜினாமா பண்ணச் சொல்லுவீங்களா? ராஜேந்திரபாலாஜியை ராஜவர்மன் பேசாத பேச்சா? அவரே ராஜவர்மனை ஏத்துக்கிட்டாரு. ரவிச்சந்திரன் முரண்டுபிடிச்சு என்ன பிரயோஜனம்? கட்சிதான் காணாமப் போய்க்கிட்டிருக்கு.’ என்று ரொம்பவே நொந்துகொண்டார். 

 

அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் குமுறலுக்கு விளக்கம்பெற,  விருதுநகர் அதிமுக கிழக்கு மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரனைத் தொடர்பு கொண்டோம். நமது அழைப்பை ஏற்காமல், தொடர்ந்து நம்மைத் தவிர்த்தபடியே இருந்தார். 

 

தமிழ்நாட்டில் மாவட்டத்துக்கு மாவட்டம்.. தொகுதிக்குத் தொகுதி.. இதே ரீதியிலான விவகாரங்கள் உள்ளன. உயர்மட்டத் தலைவர்களிடமும் இத்தகைய பிரச்சனைகள் அவ்வப்போது தலைதூக்குகின்றன. ‘இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? கட்சியைக் காப்பாற்ற யாருமில்லையா?’ எனத் தொண்டர்களும் குமுறவே செய்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.