Skip to main content

சாத்தான்குளம் காவல் மரண வழக்கை சி.பி.ஐ. விசாரிக்கும்! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!!

Published on 29/06/2020 | Edited on 29/06/2020

 

salem

 

சாத்தான்குளத்தில் நடந்த தந்தை, மகன் காவல் மரண வழக்கு விசாரணையை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

சேலம் மாவட்டம் தலைவாசலில் நடந்து வரும் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக்கல்லூரிக்கான கட்டுமானப் பணிகளை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 28) நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியது.

 

சேலம் மாவட்டம் தலைவாசலில், ஆசியாவிலேயே மிகப்பெரிய அளவில் கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா மற்றும் கால்நடை மருத்துவப் பல்கலைக்கழகம் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக, 1022 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்துக்காக, தற்போது 1102 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு உள்ளது. எதிர்காலத்தில் இந்தப் பூங்கா மேலும் விரிவுபடுத்தப்படும். 

 

தற்போது நிர்வாக அலுவலக கட்டடம், கல்வி சார் கட்டடங்கள், நூலக கட்டடம், விடுதிகள், விருந்தினர் மாளிகை, உணவகம், கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட 20 கட்டடப் பணிகள் 3.72 லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட உள்ளது. கால்நடை பண்ணை வளாகம், பால் பதப்படுத்தும் வளாகம், மீன் வள வளாகம், முதுகலை படிப்பு வளாகம், நீடித்த மற்றும் திறன் மேம்பாட்டு வளாகம், ஆராய்ச்சி, இறைச்சி உற்பத்தி, தீவன ஆராய்ச்சி மண்டலம், சர்வதேச விருந்தினர் இல்லங்கள் இவற்றில் அடங்கும். 

 

இந்தப் பூங்கா அமைவதன் மூலம் நாட்டின மாடுகள், நாட்டுக்கோழி இனங்கள், நாட்டு நாய் இனங்கள் அழிந்து விடாமல் பாதுகாக்கப்படும். இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

 

இதையடுத்து அவர் செய்தியாளர்களின் வினாக்களுக்கு பதில் அளித்ததாவது: 

 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் செல்போன் கடையை மூடுவது சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்னையில், இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கோவில்பட்டி கிளைச்சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டனர். இருவரும் கோவில்பட்டி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தனர். 

 

இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. தமிழக அரசே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளது. இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வரும்போது, அரசு இதுகுறித்து தெரிவித்து, நீதிமன்ற அனுமதி பெற்று சி.பி.ஐ.-யிடம் வழக்கை ஒப்படைக்கும்.

 

ஏற்கனவே காவல்துறைக்கு போதிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்களிடம் அன்பாக நடந்து கொள்ள வேண்டும். பிரச்னை என்றால் வழக்கு தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே நேரத்தில் தேவை இல்லாமல் மக்களுக்கு தொந்தரவு கொடுக்ககூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

 

கரோனா வைரஸ் தொற்று என்பது, தமிழகத்தில் மட்டுமின்றி உலகளவில் இருக்கிறது. உலகையே அச்சுறுத்தி, உலுக்கிக் கொண்டிருக்கிற கொடிய நோய் வைரஸ் நோய். இதுகுறித்து ஒவ்வொரு மருத்துவ நிபுணர்களும் வெவ்வேறு விதமாகச் சொல்கிறார்கள். எப்படிப் பரவுகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை. இது புதிய நோய். இப்போதுதான் உலகத்துக்கு வந்திருக்கிறது. தமிழகத்திற்கும் பரவி இருக்கிறது. இதைத் தடுப்பதற்கு, தமிழக அரசு கடுமையாக முயற்சி எடுத்துள்ளது.

 

கடந்த மூன்று மாத காலமாக மருத்துவர்கள், செவிலியர்கள், உள்ளாட்சித்துறை, வருவாய்த்துறை, கூட்டுறவுத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அலுவலர்கள் நோய்த்தடுப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். 

 

இந்தியாவிலேயே அதிகளவில் கரோனா மருத்துவப் பரிசோதனை செய்த மாநிலம் தமிழ்நாடு. புதிய நோயாக இருப்பதால், இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. அப்படி மருந்து இருந்திருந்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கொடுத்து குணப்படுத்தி இருக்கலாம். 

 

இந்த நோயால் உலகமே உறைந்து போயிருக்கிறது. அப்படியான சூழ்நிலையில், தமிழகத்தில் உலக சுகாதார அமைப்பு, மத்திய சுகாதாரத்துறை, ஐ.சி.எம்.ஆர்., மருத்துவ வல்லுநர்கள் கொடுக்கின்ற ஆலோசனைகளைப் பெற்று நம்முடைய மருத்துவர்கள், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சரியான நடவடிக்கை எடுக்கப்பட்டதால்தான் தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு உள்ளது.

 

மற்ற மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும், இறந்தவர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். அரசு எந்திரம், நோய்த்தடுப்புப் பணிகளில் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுதான் எங்களின் தலையாய கடமை. 

 

தினந்தோறும் ஸ்டாலின் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார். அரசியல் ரீதியாகத்தான் அறிக்கை விடுகிறார். நோய் சம்பந்தமாக ஏதாவது சொல்லி இருக்கிறாரா? தினமும் அரசை பற்றியும், முதல்வரை பற்றியும் குறை சொல்லிக்கொண்டிருக்கிறார். அவர் வீட்டிலேயேதான் அமர்ந்து இருக்கிறார். ஏதோ ஓரிரு நாள் போய் நிவாரணம் வழங்குவதுபோல் காட்டிக்கொண்டார். 

 

நாங்கள், எங்களால் முடிந்தவரை முயற்சி எடுத்து வருகிறோம். கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் வல்லரசு நாடுகளே திணறிக்கொண்டு இருக்கிறது. ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, எல்லோருக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் கொடுக்கப்பட்டது. விலையில்லா அரிசி, பருப்பு, சர்க்கரை ஆகியவையும் வழங்கப்பட்டது. சென்னையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அங்கே எல்லா குடும்பத்துக்கும் ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டது. 

 

http://onelink.to/nknapp

 

திங்கள்கிழமை தினம் மருத்துவ வல்லுநர்கள் கூட்டம் இருக்கிறது. அடுத்தக்கட்டமாக ஊரடங்கு தொடர்பாக என்ன முடிவெடுப்பது என்பது குறித்து அக்கூட்டத்தில் நடக்கும் ஆலோசனைகளை வைத்து அரசு முடிவு செய்யும். 

 

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார். 

 

முன்னதாக, சேலத்தை அடுத்த மேட்டுப்பட்டியில் 19.17 கோடி ரூபாய் மதிப்பிலான சேலம் - ஆத்தூர் கூட்டுக்குடிநீர் திட்டத்துக்கான புனரமைப்புப் பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு?

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. அதிகபட்சமாக, முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் 84.71 சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது. தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.

சேலம் மாவட்டத்தைப் பொருத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் நான்கு நாடாளுமன்ற தொகுதிகள் இடம்பெறுகின்றன. மாவட்டம் முழுவதும் 14 லட்சத்து 56 ஆயிரத்து 299 ஆண்கள், 14 லட்சத்து 71 ஆயிரத்து524 பெண்கள், இதரர் 299 என மொத்தம் 29 லட்சத்து 28 ஆயிரத்து 122 வாக்காளர்கள் உள்ளனர். சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஆளும் திமுக சார்பில் டி.எம்.செல்வகணபதி, அதிமுக தரப்பில் ஓமலூரைச் சேர்ந்த விக்னேஷ், பாஜக கூட்டணியில் உள்ள பாமக சார்பில் அண்ணாதுரை, நாம் தமிழர்கட்சி தரப்பில் மருத்துவர் மனோஜ்குமார் ஆகியோர் உட்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுகின்றனர்.

எனினும், திமுக, அதிமுக இடையேதான் நேரடி போட்டி நிலவுகிறது. ஆளும் கட்சி என்பதால் கூட்டணியை இறுதி செய்தது முதல் வேட்பாளர் பட்டியல் வெளியீடு, பரப்புரை என அனைத்திலும் ஜெட் வேகத்தில் செயல்பட்டது. அதிமுக தரப்பில் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் பரப்புரையைத் தொடங்கினாலும் ஏப்ரல் முதல் வாரத்திற்குப் பிறகு அக்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் வியூகத்தால் சேலம் தொகுதியில் தேர்தல் களத்தின் நிலைமையே மாறிப்போனது.

பழுத்த அரசியல் அனுபவம், முன்னாள் அமைச்சர், எம்.பி., உள்ளிட்ட அடையாளங்களுடன் களமிறங்கிய திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி முன்பு, தேர்தல் களத்திற்கு புது முகமான அதிமுக வேட்பாளர் விக்னேஷ் எளிதில் வீழ்ந்து விடுவார் என்ற பேச்சு நிலவியது. ஆனால், அதிமுகவுக்கு சாதகமாக உள்ள எடப்பாடி, ஓமலூர், வீரபாண்டி, சேலம் தெற்கு உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளில் அக்கட்சியின் தேர்தல் வியூகம் மற்றும் பாமகவினருடன் செய்து கொண்ட மறைமுக டீலிங்குகளால் சேலம் தேர்தல் களத்தில் வெப்பம் கூடியதுடன், ஆளுங்கட்சி வேட்பாளரின்வெற்றி அத்தனை சுலபமானதல்ல என்ற நிலையும் ஏற்பட்டது.

78.13 percent voting in Salem parliamentary constituency

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் ஓமலூர், எடப்பாடி, சேலம் மேற்கு, சேலம் வடக்கு, சேலம் தெற்கு,வீரபாண்டி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் இடம் பெறுகின்றன. இவற்றில் மொத்தம் 828152 ஆண்வாக்காளர்கள், 830307 பெண் வாக்காளர்கள், இதரர் 222 என மொத்தம் 16 லட்சத்து 58 ஆயிரத்து 681வாக்காளர்கள் உள்ளனர். தொகுதி முழுவதும் மொத்தம் 1766 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடந்தது. தொகுதியில் 130 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனஅறிவிக்கப்பட்டு இருந்தாலும், எந்தவித சலசலப்புகளுமின்றி தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வாக்குச்சாவடிகளிலும் உள்ளூர் காவல்துறையினருடன் சிஆர்பிஎப் வீரர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை வாக்குப்பதிவு விவரங்கள் தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. சேலம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் காலை 9 மணி நிலவரப்படி 10.77 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. நேரம் செல்லச்செல்ல வாக்குப்பதிவு விகிதம் அதிகரித்தது. காலை 11 மணி நிலவரப்படி 28.57 சதவீத வாக்குகளும், பகல் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும் பதிவாகின.

சேலம் மாவட்டத்தில் 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவான நிலையிலும் கூட வாக்காளர்கள் ஆர்வமாக வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தனர். இளைஞர்கள், இளம்பெண்கள் ஏராளமானோர் ஆர்வத்துடன்  வாக்களித்தனர். மதியம் ஒரு மணி நிலவரப்படி 46.89 சதவீத வாக்குகளும், மாலை 3 மணி நிலவரப்படி 60.05 வாக்குகளும், மாலை 5 மணி நிலவரப்படி 72.2 சதவீத வாக்குகளும் பதிவாகின. வாக்குப்பதிவு நேரம் இறுதிக்கட்டத்தை எட்ட எட்ட வாக்காளர்கள் தொடர்ந்து ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்த வண்ணம் இருந்தனர். காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைதான் வாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. மாலை 6 மணியையொட்டி வாக்குச்சாவடிகளுக்கு வந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. டோக்கன் பெற்றவர்கள் மட்டும் மாலை 6 மணிக்கு மேலும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இறுதி நிலவரப்படி, சேலம் நாடாளுமன்ற தொகுதியில் 78.13 சதவீதம் வாக்குகள் பதிவானதாக மாவட்ட ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான பிருந்தாதேவி அறிவித்தார். இதன்படி, மொத்த வாக்காளர்களில் 655470 ஆண் வாக்காளர்களும், 640428 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 96 பேரும் என மொத்தம் 12 லட்சத்து 95 ஆயிரத்து 994 பேர் வாக்களித்துள்ளனர்.

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் சட்டமன்ற தொகுதிவாரியாக இறுதிக்கட்ட வாக்குப்பதிவு விகித விவரம்: ஓமலூர் - 82.84, எடப்பாடி- 84.71, சேலம் மேற்கு - 70.72,சேலம் வடக்கு - 70.72, சேலம் தெற்கு - 75.46, வீரபாண்டி - 84.46.

இதில்,  ஓமலூர், எடப்பாடி, வீரபாண்டி ஆகியசட்டமன்ற தொகுதிகளில் வாக்குப்பதிவு விகிதம் சராசரியாக 84 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதும், அதிகபட்சமாக எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் 84.71 சதவீதம் பேர் வாக்களித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

“40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும்” - மா.செ. ராஜேந்திரன் நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

தமிழகம், புதுவையில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வெள்ளிக்கிழமை (ஏப்.19) தேர்தல் நடந்தது.சேலம் நாடாளுமன்றத் தொகுதியைப் பொருத்தவரை திமுக சார்பில் சேலம் மேற்கு மா.செ.,டி.எம்.செல்வகணபதி போட்டியிடுகிறார். எம்எல்ஏவும், மத்திய மா.செ.வுமான ராஜேந்திரன், சேலம் சி.எஸ்.ஐ பாலிடெக்னிக் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் அவருடையமனைவி, மகளுடன் வந்து வாக்களித்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''தமிழக அரசின் சாதனைத் திட்டங்களான விடியல் பேருந்து பயணத் திட்டம், மகளிர் உரிமைத் தொகை, புதுமைப் பெண் திட்டம், தமிழ்ப் புதல்வன்திட்டம் உள்ளிட்ட நலத்திட்டங்களே திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித்தரும். பெண்களை முன்னிறுத்தி தமிழக அரசு பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. பெண்களுக்குஆதரவு தரும் தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் இருக்கிறார்.  இந்த தேர்தலில் நிச்சயமாக தமிழகம்,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெறும். அதிமுகவுக்கு இரண்டாம்கிடைக்க வாய்ப்பு உள்ளது,'' என்றார்.

Rajendran Hope DMK alliance will definitely win in all 40 constituencies

திமுக நிர்வாகிகள் ஷா நவாஸ், கே.டி.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இது ஒருபுறம் இருக்க, சேலம் தொகுதி திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி, சேலம் சாரதாபாலமந்திர் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வாக்களித்தார். பின்னர் அவர் கூறுகையில், ''திமுக ஆட்சியின் நலத்திட்டங்கள்தான் இந்த தேர்தலில் கதாநாயகன். பெண்களுக்கான பல நலத்திட்டங்களை செயல்படுத்தி வருவதால் அவர்களின் ஆதரவு திமுகவுக்குகிடைத்துள்ளது. நாடும் நமதே; நாற்பதும் நமதே,'' என்றார்.