Skip to main content

தந்தை மகன் உயிரிழந்த விவகாரம்: மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது: கே.எஸ்.அழகிரி

Published on 24/06/2020 | Edited on 24/06/2020
K. S. Alagiri

 

சாத்தன்குளம் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரத்தை, மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களிலும், மதுரையிலும் பொது ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு பொது ஊரடங்கு அமலில் இல்லாத தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சாத்தன்குளம் பழைய பேருந்து நிலையம் அருகில் மொபைல் கடை மூலம் தொழில் செய்து வருகிற ஜெயராஜை காவல்துறை துணை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் கடையை திறந்து வைத்ததற்காக 19.6.2020 அன்று மாலை 7 மணிக்கு காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று இருக்கிறார். இதுகுறித்து கேள்விப்பட்ட அவரது மகன் பென்னிக்ஸ் காவல்நிலையத்திற்கு சென்று எவ்வித குற்றமும் இழைக்காத தனது தந்தையை காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் இருவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியது நியாயமா என்று கேட்டு இருக்கிறார்.  

அதைத் தொடர்ந்து அவரது மகனையும் கடுமையாக தாக்கியிருக்கிறார்கள். பிறகு அவர்கள் இருவரையும் போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்று கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பிறகு அங்கேயும் நள்ளிரவு 1.30 மணி வரை கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதால் பென்னிக்ஸ் 22.06.2020 அன்று இரவு இறந்துவிட்டார். தந்தை ஜெயராஜ் காலை 8 மணிக்கு இறந்துவிட்டார். அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த மரணங்கள் குறித்து, இதற்கு நீதி கேட்கிற வகையில் சாத்தன்குளம் பகுதியில் தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சியினரும் கடையடைப்பு நடத்தி மறியல் போராட்டம் செய்து வருகின்றனர். 

கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்ட தந்தையையும், மகனையும் கடுமையாக தாக்கி கொலை செய்ததாகக்கூறி, மறைந்த ஜெயராஜின் மனைவி செல்வராணி காவல்துறை உயரதிகாரிகளிடம் புகார் அனுப்பியிருக்கிறார். எந்த தவறையும் செய்யாத நிரபராதிகள் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்தப் படுகொலைக்கு காவல்துறைதான் முழு பொறுப்பாகும். காவல்துறை ஆய்வாளர் மற்றும் காவல்துறை துணை ஆய்வாளர் ஆகியோர் மீது  கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு உடனடியாக கைது செய்யப்படவேண்டும்.

ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அடைத்து வைக்கப்பட்டபோது கடுமையாக தாக்குதலின் காரணமாக இறந்திருப்பதினால் சம்மந்தப்பட்ட காவல்துறையினர் மீது தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் இந்த வழக்கை மாநில காவல்துறை விசாரித்தால் நிச்சயம் நீதி கிடைக்காது. எனவே, காவல்துறையினர் சம்மந்தப்பட்ட இந்த வழக்கை மத்திய புலனாய்வுத்துறை விசாரித்து குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்கள்; ரோபோக்களைக் கொண்டு சோதனை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 seized at home; Testing with robots

மேற்கு வங்கத்தில் வீடு ஒன்றிலிருந்து ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்தப் பகுதியில் ரோபோக்களைக் கொண்டு ஆயுதங்களை பறிமுதல் செய்ய பாதுகாப்புப் படையினர் அதிகப்படியாக குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் 18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் சந்தோஷ்காளி விவகாரம் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேற்கு வங்கத்தில் சந்தோஷ்காளி பகுதியில் ஆயுதங்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக சிபிஐ போலீசாருக்கு தகவல் வந்தது. தேர்தல் வன்முறையில் பயன்படுத்துவதற்காக ஆயுதங்கள் குவிக்கப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுந்த நிலையில் சிபிஐ  போலீசார் சந்தோஷ்காளி பகுதியில் சோதனை நடத்த முடிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து வீடு ஒன்றில் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மேலும் அங்கு அதிகப்படியான ஆயுதங்கள் இருக்க வாய்ப்பு இருப்பதாக சிபிஐக்கு சந்தேகம் எழுந்தது. மனிதர்களால் ஆய்வு செய்தால் குண்டு வெடிப்பு உள்ளிட்ட அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் தேசிய பாதுகாப்புப் படையினர் வரவழைக்கப்பட்டனர். தேசிய பாதுகாப்புப் படையின் சார்பாக ரோபோ கருவிகள் மூலமாக வெடிகுண்டு மற்றும் ஆயுதங்கள் அங்கிருந்து பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகப்படியாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அங்கு திரிணாமுல் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகி ஷாஜகான் என்பவர் சந்தோஷ்காளி பகுதியில் ஆதரவாளர்களைத் திரட்டி ஆயுதங்களை வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.