Skip to main content

பாஜக கூட்டணிக்கு சசிகலா எதிர்ப்பு! திகைப்பில் எடப்பாடி!

Published on 06/02/2019 | Edited on 06/02/2019
sasikala



நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வதற்காக தமிழகத்திலுள்ள பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் எப்படிப்பட்ட கூட்டணியை உருவாக்கப் போகிறது? என்கிற எதிர்பார்ப்பு இரு கட்சிகளின் தொண்டர்களிடமும் எதிரொலித்தபடி இருக்கிறது. 
 

அதற்கேற்ப இரு கட்சிகளும் தங்கள் தலைமையில் மெகா கூட்டணி அமைப்பதில் தனித்தனியாக வேகம் காட்டி வருகின்றன. இதற்காக, பல ரகசியப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இருப்பினும், பல கூட்டணி கணக்குகள் கடைசி நேரத்தில் எதிர்பாராத திருப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் பேச்சுவார்த்தைகள் நகர்ந்து கொண்டிருக்கிறது. 


இந்தநிலையில், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், ஊழல் கட்சி என அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறது அகில இந்திய பாஜக தலைமை! மத்திய ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் பெரியண்ணன் பாணியில் அதிமுகவை மிரட்டி கூட்டணிக்கு பணிய வைத்திருக்கும் பாஜக தலைமை, தங்களுக்கான தொகுதிகளை தாங்களே எடுத்துக்கொள்ளும் அரசியலை அதிமுகவில் புகுத்தி வருகிறது. 
 

eps



பாஜகவுடன் கூட்டணி வைக்க எடப்பாடி உள்ளிட்ட மூத்த அமைச்சர்களுக்கு விருப்பம் இல்லை. ஆனால், பாஜக முன்வைக்கும் மிரட்டல்களும் கோப்புகளும் கூட்டணிக்கு அவர்களை சம்மதிக்க வைத்திருக்கிறது. இந்த நிலையில்தான், பாஜக கூட்டணிக்கு கட்சியின் சம்மதத்தைப் பெறுவதற்காகவும், கூட்டணி குறித்த அபிப்பிராயத்தில் சுருதிபேதம் வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் தான், அதிமுக மா.செ.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் கூட்டத்தை வரும் 8-ந்தேதி எடப்பாடியும் பன்னீரும் கூட்டியுள்ளனர். இதில் பல்வேறு பிரச்சனைகள் விவாதிக்கப்பட்டு இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 
 

இந்த நிலையில், "சசிகலாவிடமிருந்து வந்த ஒரு தகவலால் அதிர்ச்சியடைந்திருக்கிறார் எடப்பாடி!" என்கிற தகவல் அதிமுக தரப்பில் பரவி வருகிறது. இதுகுறித்து விசாரித்த போது, "எடப்பாடி தலைமையில் அதிமுகவும் ஆட்சியும் இருந்தாலும் எடப்பாடிக்கு எஜமானர் இப்போதும் சசிகலாதான். அதனால், சசிகலாவிடமிருந்து எடப்பாடிக்கு அவ்வப்போது உத்தரவுகள் வந்துகொண்டுதான் இருக்கிறது. இது ரகசியமாகவே வைத்துக் கொள்ளப்படும். கடந்த சில மாதங்களாகத்தான்  உத்தரவுகள் வரவில்லை. இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி அமைக்க எடப்பாடி சம்மதித்துள்ளார் என்கிற தகவல் அறிந்து டென்சனாகியிருக்கிறார் சசிகலா. எடப்பாடியின் முடிவை இளவரசியிடம் பகிர்ந்துகொண்ட சசிகலா, 'தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட ஜெயிக்கக் கூடாதுங்கிறது என்னோட சபதம்! ஆனா, அந்த பாஜகவின் வெற்றிக்கு கம்பளம் விரிக்கிறார் எடப்பாடி. அதற்காகத்தான், அதிமுக-பாஜக கூட்டணிக்கு சம்மதிக்கிறார்கள்' என கோபம் காட்டியிருக்கிறார். இந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைக்கக்கூடாது என தம்பிதுரை மூலமாக எடப்பாடிக்கு தகவலை பாஸ் பண்ணியிருக்கிறார் சசிகலா. இந்த தகவல்தான் தற்போது எடப்பாடியை திகைக்க வைத்துள்ளது. சசிகலாவின் தீவிர விசுவாசியான தம்பிதுரை, சசியின் விருப்பத்தை தெரிந்து கொண்டதால் தான் பாஜக கூட்டணிக்கு எதிரான கருத்துக்களை பொதுவெளியில் பகிரங்கமாக சொல்லி வருகிறார். மா.செ.க்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் பாஜக கூட்டணிக்கு எதிரான குரலை வலிமைப்படுத்த மா.செ.க்களிடம் ரகசியமாக பேசி வருகிறார் தம்பிதுரை. இப்படிப்பட்ட சூழலில், சசிகலாவின் ரகசிய  கட்டளைக்கு எடப்பாடி பணிவாரா ? அல்லது சசிகலாவின் உத்தரவை உதாசீனப்படுத்துவாரா? என்பது மா.செ.க்களின் ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகே தெரியும் " என்கிறார்கள்  அதிமுக சீனியர்கள்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.