Skip to main content

தென்மாவட்ட அதிமுகவினரைக் கவர சசிகலாவின் அஸ்திரம்! நடுக்கத்தில் ஓ.பி.எஸ் & இ.பி.எஸ்.  

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

Sasikala's next political move

 

சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நான்கு ஆண்டுகள் தண்டனை அனுபவித்துவிட்டுத் திரும்பினார் சசிகலா.  கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி காலை பெங்களூருவிலிருந்து சென்னைக்குப் புறப்பட்டார் சசிகலா. சிறையிலிருந்து வெளிவரும் சசிகலா அதிமுக கொடியைப் பயன்படுத்தக்கூடாது என அதிமுகவின் எடப்பாடி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அதையும் மீறி அவர் அதிமுக கொடியுடனான காரிலேயே புறப்பட்டார். பெங்களூருவில் ஆரம்பித்து சென்னை வரை அவரது ஆதரவாளர்கள் பெரும் வரவேற்பைத் தந்தனர். 

 

இதில், வாணியம்பாடியில் செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, ''தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன், அதிமுக அலுவலகத்துக்குச் செல்வீர்களா என நிறையப் பேர் கேட்கின்றனர். பொறுத்திருந்து பாருங்கள், என்ன நடக்கப்போகிறது என்று. அதிமுகவைக் கைப்பற்றுவீர்களா? எனச் சிலர் கேட்கின்றனர். மிக விரைவில் உங்களையும் (செய்தியாளர்கள்) மக்களையும் நேரில் சந்திப்பேன். அப்போது சொல்கிறேன், அதுவரை பொறுத்திருங்கள். அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும். எத்தனையோ முறை அதிமுக சோதனைகளைச் சந்தித்திருக்கிறது. அப்போதெல்லாம் ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து வந்துள்ளது கட்சி. ஜெயலலிதா வழி வந்த பிள்ளைகளாகிய நாம் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்பதே என் விருப்பமாகும்” என்று தெரிவித்தார். 

 

இப்படி வெளிவந்ததுமே சசிகலா தனது அரசியல் நுழைவு குறித்தான கருத்தைத் தெரிவித்துவிட்டே வந்தார். இதிலேயே அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கலக்கம் அடைந்தார். சென்னை வந்த சசிகலா, தி.நகர் இல்லத்தில் தங்கியிருந்தார். அங்கு அவர் செய்தியாளர்களைச் சந்திப்பார் அதிமுக குறித்துப் பேசுவார் என ஒரு தரப்பினரும், அவ்வளவுதான் இனி சசிகலா அரசியலுக்கு வருவதெல்லாம் கடினம் என மற்றொரு தரப்பினரும் தங்கள் தரப்பு நியாயங்களைப் பேசிவந்தனர். 

 

பிப்ரவரி 24ஆம் தேதி வரை தொடர்ந்து வந்த இந்தப் பேச்சுக்கள் எல்லாம் ஜெயலலிதா பிறந்தநாள் அன்று (பிப்.24) முடிவுக்கு வந்தது. சென்னை திரும்பி தி.நகர் வீட்டிலிருந்த சசிகலா, ஜெயலலிதா பிறந்தநாள் அன்று அவருக்கு மரியாதை செலுத்திவிட்டு, தனது மௌனத்தைக் கலைத்து, “உண்மை தொண்டர்கள் இந்த ஆட்சி நீடிக்கப் பாடுபட வேண்டும்” எனப் பேசினார் சசிகலா. இதனால் மீண்டும் சசிகலா குறித்தான அரசியல் பேச்சுகள் காற்றில் கலக்க ஆரம்பித்தன. 

 

சசிகலாவின் அரசியல் குறித்தான பேச்சுகள் உலா வந்துகொண்டிருந்தபோதே, தமிழ்நாட்டுக்கான தேர்தல் குறித்து அறிவிப்பு வெளியாகி, தேர்தல் நடந்து திமுக ஆளுங்கட்சியாகவும், அதிமுக எதிர்க்கட்சியாகவும் சட்டமன்றத்திற்குள் நுழைந்தன. சட்டமன்றத் தேர்தல் தோல்வியைக் காரணம் காட்டி சசிகலா, இரட்டை இலையை தன் தலைமைக்குக் கீழ் கொண்டுவருவார் என மீண்டும் சசிகலா பால்டிக்ஸ் பறக்கத்துவங்கின. 

 

ஆனால், பொதுவெளியில் மௌனம் காத்த சசிகலா, அதன்பிறகு தனது ஆதரவாளர்களுடன் தொலைப்பேசி மூலம் பேசி ஆடியோக்களை ரிலீஸ் செய்து தன் பற்றியான அரசியல் பேச்சுகளை ‘ஹாட் டாப்பிக்’காகவே வைத்திருந்தார். அதேசமயம் அதிமுகவின் அவைத்தலைவர் மதுசூதனின் உடல் நிலை மிக மோசமாக, மருத்துவமனையிலிருந்த அவரை நேரில் சென்று நலம் விசாரித்தார். அதன்பின் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பி.எஸ்.-ன் துணைவியார் மறைவுக்கு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஓ.பி.எஸ்.க்கு ஆறுதல் கூறினார். இதுவெல்லாம் அதிமுக மத்தியிலும், மற்றக் கட்சியினர் மத்தியிலும் சசிகலாவைக் கள அரசியலில் நிறுத்திவைத்துக்கொண்டே இருந்தது. 

 

சசிகலா பற்றியான பேச்சுகள் தொடர்ந்து எழுந்தாலும், சசிகலா நேரடியாக அரசியல் குறித்துப் பேசாததால் அவரது ஆதரவாளர்கள் மத்தியிலுமே ஒருவித அமைதி நிலவியது. ஆதரவாளர்களின் ஆராவாரம் குறைவதற்குள் மீண்டும் அடுத்த தீப்பொறியைக் கிளப்பினார் சசிகலா. கடந்த 17ஆம் தேதி அதிமுக தனது பொன் விழா ஆண்டை கொண்டாடியது. இதற்கு முன்னதாகவே திட்டமிட்ட சசிகலா, ‘பொன்விழா ஆண்டில் ஜெயலலிதா நினைவிடம் சென்று அஞ்சலி செலுத்துவது. பின் எம்.ஜி.ஆர். இல்லத்திற்குச் சென்று மரியாதை செய்வது’ என பக்காவாக ஸ்கெச் போட்டு ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்தார். இதில், அதிமுகவின் துவக்க நாளான 17ஆம் தேதிக்கு முன்னதாகவே அதாவது 16ஆம் தேதியே ஜெயலலிதா நினைவிடத்திற்குச் செல்ல திட்டமிட்டு அதன்படியே சென்றார். மேலும், 17ஆம் தேதி எம்.ஜி.ஆருக்கு மரியாதை செலுத்தினார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக, சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபோது பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி வாணியம்பாடியில் பேசிய, ‘அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயல்பட வேண்டும்’ எனும் அதே கருத்தை மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

 

அதேபோல், தி.நகரில் உள்ள ஜானகி, எம்.ஜி.ஆர். இல்லத்தில், ‘அதிமுகவின் பொதுச்செயலாளர் சசிகலா’ என கல்வெட்டைத் திறந்து வைத்து மீண்டும் எடப்பாடியைப் பதட்ட நிலையில் அமர்த்தினார் சசிகலா.

 

பொன்விழாவில் எடப்பாடியின் பிரஷரை எகிற வைத்த சசிகலா, அடுத்ததாக வரும் அக்.30ஆம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கரின் ஜெயந்தி நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவிருக்கிறார். இதற்காக அவரது ஆதரவாளர்கள் தீவிரமான ஏற்பாடுகளைச் செய்துவருகிறார்களாம். முத்துராமலிங்கருக்கு மரியாதை செலுத்தும் சசிகலா, அங்குப் பத்திரிகையாளர்களைச் சந்திப்பார் அப்போதும் அரசியல் குறித்த அடுத்த அறிவிப்போ, தகவலோ வெளிவரும் என்றும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். அதேபோல், இந்நிகழ்ச்சியின் மூலமாகவும், பயணத்தின் மூலமாகவும் தென் மாவட்ட அதிமுகவினரை சசிகலா கவருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.