Skip to main content

“எடப்பாடியின் ஆட்டத்தை சசிகலா முடித்து வைப்பார்..” - மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு!

Published on 19/01/2021 | Edited on 19/01/2021

 

"Sasikala will end Edappadi.." MK Stalin's speech!


பெங்களூரு சிறையில் இருந்து வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலை ஆகிறார். அவர் வெளியே வந்ததும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்துவிடும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். 

 

சேலம் மாவட்டம், எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் அருகே உள்ள குரும்பப்பட்டியில் தி.மு.க. சார்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன.18) மாலையில் நடந்தது. அக்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டார். 

 

கூட்டத்திற்கு வந்திருந்த பெண்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பலர், தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்யப்படவில்லை என்றும், பொதுக்கழிப்பறை, சுகாதார வசதிகள் இல்லை என்றும் கூறினர். 

 

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டுவந்த சுழல்நிதி நிறுத்தப்பட்டதால், பெண்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. நெசவாளர்களின் துயர் துடைக்க தி.மு.க. வெற்றி பெற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

 

இதையடுத்து பேசிய மு.க.ஸ்டாலின், “இங்கே பேசிய பெண்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். அவற்றில் பல பணிகள், உள்ளாட்சித்துறை மூலமாக நிறைவேற்றப்பட வேண்டியவை. ஆனால், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி ஊழல்மணியாக திகழ்ந்து வருகிறார். தி.மு.க. ஆட்சியில் சமையல் காஸ் சிலிண்டர், பருப்பு, சர்க்கரை, உளுந்தம் பருப்பு, கடலை பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுக்குள் இருந்தன. இப்போது அவை கடுமையாக விலை உயர்ந்துள்ளன. 

 

இதுபோன்ற விஷயங்களை சுட்டிக்காட்டினால், இந்த தொகுதி எம்.எல்.ஏ.வான முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கோபம் வருகிறது. இதனால் அவர் பரப்புரை மேற்கொள்ளும் இடங்களில் எல்லாம் தி.மு.க.வை விமர்சனம் செய்து வருகிறார். இவர் எப்படி முதல்வர் ஆனார்? என்பது அனைவருக்கும் தெரியும். துரோகம் என்பதற்கு  இவர்தான் உதாரணம். வரும் 27ஆம் தேதி சசிகலா சிறையில் இருந்து வெளியே வருகிறார். அவர் வெளியே வந்தவுடன் எடப்பாடி பழனிசாமியின் ஆட்டம் முடிந்து விடும்.  சசிகலாவால் முதல்வரான இவர், அவருக்கே துரோகம் செய்தார்.

 

ஜெயலலிதா ஆட்சி என்று பேசிக்கொள்ளும் இவர்கள், அவரின் மரணம் குறித்து இதுவரை எந்த உண்மையையும் வெளியே கொண்டுவரவில்லை. சாதாரண மனிதருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் என்ன வியாதி, எப்படி இறந்தார் என்று கேட்பது இயல்பு. ஆனால், முதல்வரான ஜெயலலிதாவின் இறப்பு குறித்து இதுவரை உண்மை தெரியவில்லை. 

 

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து அவருக்குத் துணை முதல்வர் பதவி கொடுத்து, நீதி விசாரணை நடத்தப்படும் என்று அறிவித்து கமிஷன் அமைத்தனர். ஆனால், 4 ஆண்டுகள் ஆகியும் இதுவரை இதற்கு விடை தரவில்லை. இதைப்பற்றி எல்லாம் முதல்வருக்கு எந்த அக்கறையும் இல்லை. அவரின் ஒரே நோக்கம் கொள்ளையடிப்பதுதான்.

 

கரோனா காலத்தில்கூட கொள்ளையடித்த கும்பல் இந்தக் கும்பல். முகக்கவசம், விளக்கமாறில் கூட கொள்ளையடித்த கும்பல். இந்தக் கும்பலை விரட்டியடிக்க மக்கள் தயாராகி விட்டனர். அந்த முடிவில்தான் நீங்கள் அனைவரும் வந்து இருக்கிறீர்கள். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மக்களின் கோரிக்கை நிறைவேற்றித் தரப்படும்” என மு.க.ஸ்டாலின் பேசினார்.

 

சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் செல்வகணபதி, ராஜேந்திரன் எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். முன்னதாக, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்தில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டம் முடிந்து சேலம் வருகை தந்த அவருக்கு, மாவட்ட எல்லையான தீவட்டிப்பட்டியில் தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். சேலம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.