அதிமுகவின் பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் ஆசியோடு கடந்த 2014ஆம் ஆண்டு ராஜ்யசபா உறுப்பினரானார் சசிகலா புஷ்பா. திமுக எம்பி திருச்சி சிவாவோடு இணைந்து இருப்பது போன்ற புகைப்படங்கள் வெளியானபோது சசிகலா புஷ்பா பரபரப்பாக பேசப்பட்டார். அந்த புகைப்படங்கள் மார்பிங் என சொல்லப்பட்டது.இதையடுத்து போயஸ்கார்டனுக்கு சசிகலா புஸ்பாவை வரவழைத்த ஜெயலலிதா, அவருக்கு செம்ம டோஸ் கொடுத்தார்.

bjp

இந்த சூழலில், தன்னை அழைத்து பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி வலியுறுத்தினார்கள் என்று மாநிலங்களவையில் பேசி மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் சசிகலா புஸ்பா. இதையடுத்து சசிகலா புஸ்பாவை கட்சியில் இருந்து நீக்கினார் ஜெயலலிதா. ஆனால் அவரது ராஜ்யசபா உறுப்பினர் பதவி பறிக்கப்படவில்லை. இதையடுத்து பாஜக தலைவர்களோடு நட்புடன் பழகிய சசிகலா, மத்திய அரசு கொண்டு வந்த அனைத்து அரசியல் நடவடிக்கைகளுக்கும் ஆதரவாக செயல்பட்டார்.

Advertisment

இதனால் சசிகலா புஸ்பா விரைவில் பாஜகவில் இணைவார் என்கிற செய்தி கடந்த இரண்டு வருடங்களாக எதிரொலித்துக்கொண்டிருந்தது. இந்த நிலையில் திடீரென இன்று டெல்லியில் பாஜகவில் தன்னை இணைத்துக்கொண்டார். பாஜகவின் தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைய இருந்தார். ஆனால் அவருக்கு பல்வேறு முக்கிய நிகழ்வுகள் இருந்ததால், தமிழக பாஜகவின் மேலிட பொறுப்பாளர் முரளிதரராவ் மற்றும் முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்டார் சசிகலா.

ராஜ்யசபா உறுப்பினர் பதவி இன்னும் இரண்டு மாத காலம் இருப்பதால், சசிகலா புஷ்பா மீது கட்சித் தாவல் சட்டத்தின்படி அதிமுக தலைமை நடவடிக்கை எடுக்குமா? என்று அதிமுகவில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.