Skip to main content

மீண்டும் சேலம் மத்திய மா.செ. ஆனார் ராஜேந்திரன்... மேற்கு, கிழக்கிலும் மாற்றமில்லை... பாரப்பட்டி சுரேஷ்குமாருக்கு புரமோஷன்

Published on 29/09/2022 | Edited on 29/09/2022

 

Salem DMK District secretaries

 

கடந்த சில மாதங்களாக திமுக 15வது அமைப்புத் தேர்தல் நடந்து வருகிறது. ஏற்கனவே, ஒன்றியம், பேரூர், நகரம் உள்ளிட்ட கிளைக்கழக நிர்வாகிகள் தேர்தல் படிப்படியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மாவட்ட அமைப்புகளுக்கான தேர்தலில் போட்டியிடுவோரிடம் இருந்து வேட்புமனுக்கள் செப். 22 முதல் 25ம் தேதி வரை தலைமை அலுவலகத்தில் பெறப்பட்டது. செப். 26, 27ம் தேதிகளில் வேட்புமனுக்கள் மீது பரிசீலனை நடந்தது. அதையடுத்து கட்சித் தலைமை அலுவலகம், புதிய நிர்வாகிகள் பட்டியலை புதன்கிழமை (செப். 28) அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

 

சேலம் மத்திய மாவட்டம்: 


சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளராக சேலம் வடக்கு எம்.எல்.ஏ. வழக்கறிஞர் ராஜேந்திரன் மீண்டும் அதே பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். கல்லூரி மாணவராக கழகத்திற்குள் அடியெடுத்து வைத்த ராஜேந்திரன், பெரிய அளவில் சலசலப்புகளின்றி கட்சியை வழிநடத்திச் செல்லக்கூடியவர் என்று பெயரெடுத்துள்ளார். மத்திய மாவட்ட அவைத்தலைவராக ஜி.கே.சுபாசு, துணைச் செயலாளர்களாக  ஜி.குமரவேல், திருநாவுக்கரசு, எஸ்.மஞ்சுளா, பொருளாளராக மு.கார்த்திகேயன் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சி.ராஜேந்திரன், கே.டி.மணி, கு.சீ.வெ.தாமரைக்கண்ணன், ஜெ.ஜெயக்குமார் ஆகியோர் தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாகவும், நாசர்கான் என்கிற அமான், அ.பூபதி, அ.ராஜேந்திரன், பெ.அசோகன், கன்னங்குறிச்சி குபேந்திரன், ப.குப்புசாமி, எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி.,யின் தம்பி எஸ்.ஆர்.அண்ணாமலை, கே.சத்யா ஆகியோர் பொதுக்குழு உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

சேலம் மேற்கு மாவட்டம்: 


சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வந்த டி.எம்.செல்வகணபதி, மீண்டும் செயலாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். தேர்தல் களப்பணிகளைச் சிறப்பாக செய்யக்கூடியவர் என்பதோடு, கோஷ்டி அரசியல் செய்யாதவர் என்பதாலும் கட்சித் தலைமையின் 'குட்புக்'கில் இடம் பிடித்துள்ளார். அதனால் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. 

 

Salem DMK District secretaries

 

மேற்கு மாவட்ட திமுக அவைத்தலைவராக பி.தங்கமுத்து, துணைச் செயலாளர்களாக அ.த.சம்பத்குமார், க.சுந்தரம், எஸ்.எலிசபத் ராணி, பொருளாளராக பி.பொன்னுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக பி.ஏ.முருகேசன், மு.ராமநாதன், எஸ்.பூவா ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக க.அன்பழகன், ஆர்.காசிவிஸ்வநாதன், எஸ்.பி.ரவிக்குமரன், மு.சவுந்திரராஜன், என்.பழனியப்பன், எஸ்.தங்கமணி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

Salem DMK District secretaries

 

சேலம் கிழக்கு மாவட்டம்: 


சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு இந்தமுறை கடும் போட்டி நிலவியது. பலத்த போட்டிக்கு இடையிலும் கிழக்கு மாவட்ட செயலாளராக மீண்டும் எஸ்.ஆர்.சிவலிங்கம் நியமிக்கப்பட்டு உள்ளார். 

 

Salem DMK District secretaries

 

மா.செ. பதவிக்கு குறி வைத்து காய் நகர்த்திய பாரப்பட்டி க.சுரேஷ்குமார், முதன்முதலாக மாவட்ட துணைச் செயலாளராக பதவி உயர்வு பெற்றுள்ளார். கு.சின்னதுரை, எஸ்.கோமதி ஆகியோரும் துணை செயலாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆர்.வி.ஸ்ரீராம், பொருளாளராக நியமிக்கப்பட்டு உள்ளனர். தலைமைச் செயற்குழு உறுப்பினர்களாக தும்பல் எ.கணேஷ், சங்கர் என்கிற சாமிநாதன், எம்.மனோகரன், ஜெ.ரேகாபிரியதர்ஷினி ஆகியோரும், பொதுக்குழு உறுப்பினர்களாக ஷேக் மொய்தீன், சோமசுந்தரம், ராஜா, முத்துலிங்கம், சந்திரமோகன், தமிழ்செல்வன், கோபால், டாக்டர் மலர்விழி ஆகியோரும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.