Skip to main content

அதிமுக கொடி யாருக்கு; மோதிக்கொண்ட ஓபிஎஸ் - இபிஎஸ் அணியினர்

Published on 20/05/2023 | Edited on 20/05/2023

 

salem admk flag issue between ops eps team 
கோப்பு படம்

 

சேலத்தில் நேற்று 4 இடங்களில் ஓபிஎஸ் அணியினர் சார்பாக நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் ஓபிஎஸ் அணியின் முக்கியத் தலைவர்களான வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் மற்றும் ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் கலந்துகொள்ள இருப்பதாக  அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக ஓபிஎஸ் அணியின் சேலம் மாவட்டச் செயலாளர் தினேஷ் தலைமையில் அதிமுக கொடிகளை நிர்வாகிகள் கட்டி இருந்தனர்.

 

இந்நிலையில், சேலத்தில் உள்ள திருமண மண்டபத்தின் முன்பும் ஏராளமான கொடிகள் கட்டப்பட்டிருந்தன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இபிஎஸ் அணியின் அதிமுக மாநகர் மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம், பாலசுப்பிரமணியம் எம்எல்ஏ ஆகியோர் தலைமையில் அப்பகுதியில் திரண்ட நிர்வாகிகள், அங்கிருந்த அதிமுக கொடிகளை கட்டிக் கொண்டிருந்த தினேஷிடம், ‘நாங்கள் தான் உண்மையான அதிமுக என்று தேர்தல் ஆணையமே அங்கீகரித்துள்ளது. கட்சிக்கு எவ்வித  தொடர்பும் இல்லாத நீங்கள் எப்படி அதிமுகவின் கொடியை கட்டலாம்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.

 

இதற்கிடையில் அங்கிருந்த சிலர் கொடிகளைப் பிடுங்கி வீசினர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் உருவாகும் நிலை ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பையும் சமாதானம் செய்தனர். இதைத் தொடர்ந்து அதிமுக மாவட்டச் செயலாளர் வெங்கடாசலம் போலீசில் புகார் ஒன்றையும் அளித்தார். அதில் கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் எங்கள் கட்சிக் கொடிகளை பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்திருந்தார். இதையடுத்து சாலைகளில் இருந்த அதிமுக கொடிகள் அகற்றப்பட்டன.

 

எடப்பாடி பழனிசாமியின் சொந்தத் தொகுதியான எடப்பாடியில் ஓபிஎஸ் அணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதனால் கூட்டம் நடைபெறும் இடத்தில் அதிமுகவின் பேனர்கள், போஸ்டர்கள்  மற்றும் கொடிகள் கட்டி இருப்பதை  கண்ட இபிஎஸ் அணியினர் அங்கு வைக்கப்பட்டு இருந்த பிளக்ஸ் மற்றும் போஸ்டர்களை கிழித்தனர். சாலைகளில் கட்டப்பட்டு இருந்த அதிமுக கொடிகளையும் அகற்றினர். இந்த பரபரப்பான சூழ்நிலையில் நேற்று மாலை ஓபிஸ் அணியினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வைத்தியலிங்கம், புகழேந்தி, மனோஜ் பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

 

அப்போது இபிஎஸ் அணியை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் கூட்டம் நடைபெற்ற திருமண மண்டபத்தில் நுழைந்து அதிமுக கொடியை அங்கிருந்து அகற்றினர். பின்னர் இபிஎஸ் அணியை சேர்ந்தவர்கள் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட  29 பேரை கைது செய்து திருமண மண்டபத்தில் அடைத்தனர். கூட்டம் முடிந்த நிலையில் இபிஎஸ் அணியைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் அதிமுக கட்சிக் கொடியை நீங்கள் எப்படி பயன்படுத்தலாம் என ஓபிஎஸ் அணியினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருவர் கைகலப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புக்கு இருந்த போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்து அங்கிருந்து கலைந்து போகச் செய்தனர். இச்சம்பவம் சேலம் அதிமுகவினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விஏஓ தற்கொலை; தலைமறைவான இருவருக்கு போலீசார் வலை

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 VAO case; Police net for two fugitives

திருப்பூரில் விஏஓ ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்கொலை தொடர்பாக அவர் எழுதி வைத்துள்ள கடிதத்தின் அடிப்படையில் போலீசார் இருவரை தேடி வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை கணக்கம்பாளையம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வந்தவர் கருப்பசாமி. சொந்த ஊரான பொள்ளாச்சிக்கு கடந்த 22ஆம் தேதி சென்ற விஏஓ கருப்பசாமி, தென்னை மரத்திற்கு வைக்கும் மருந்தை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தில் இருந்த உறவினர்கள் உடனடியாக கருப்பசாமியை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், செல்லும் வழியிலேயே விஏஓ கருப்பசாமி உயிரிழந்தார்.

இந்த நிலையில் விஏஓ கருப்பசாமி தனது கைப்பட எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்று உறவினர்களிடம் சிக்கியது. அந்த கடிதத்தில் தன்னுடைய தற்கொலைக்கான காரணம் குறித்தும் தன்னுடைய இந்த முடிவுக்கு மணியன் என்பவரும், கிராம நிர்வாக உதவியாளரான சித்ரா என்பவரும் தான் காரணம் என எழுதப்பட்டிருந்தது. கடிதத்தை சான்றாக வைத்த அவருடைய உறவினர்கள் சம்பந்தப்பட்ட இருவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உடுமலை கோட்டாட்சியரிடம் புகார் அளித்தனர். அதேபோல் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தின் முன்பாக  40-க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் தற்கொலைக்கு தூண்டியவர்களை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஏற்கனவே கருப்புசாமி எழுதிவைத்து கையெழுத்திட்ட கடிதங்களையும் தற்கொலைக்கு முன்னதாக கருப்பசாமி எழுதிய கடிதம் ஆகியவற்றை ஒப்பிட்டு பார்த்த போலீசார் அதை உறுதி செய்தனர். முன்னதாக சந்தேக மரணம் என பதிவு செய்யப்பட்ட வழக்கு தற்கொலைக்கு தூண்டுதல் என்ற வழக்கிற்கு கீழ் மாற்றப்பட்டது. வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கிராம நிர்வாக உதவியாளர் சித்ரா மற்றும் மணியன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. உடுமலை வட்டாட்சியர் சுந்தரம், சித்ராவை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். தொடர்ந்து சித்ரா தலைமறைவானதால் அவருடைய வீட்டில் பணியிடை நீக்கத்திற்கான நோட்டீஸ் ஒட்டப்பட்டது. தற்பொழுது விஏஓ தற்கொலை தொடர்பாக கிராம உதவியாளர் சித்ராவையும் மணியன் என்பவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story

பெண் மீதான தாக்குதல் வீடியோ; இளைஞரை கைது செய்த போலீசார்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Video of assault on woman; The police arrested the youth

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாக கூறப்படுகிறது.

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமர வைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் பெண்ணை தாக்கிய ரோஷன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். அப்பெண் அவரது மனைவி என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.