Skip to main content

கோயம்பேட்டில் உள்ள அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் ஊர் திரும்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் : சிவசங்கர்

Published on 02/05/2020 | Edited on 02/05/2020

 

S. S. Sivasankar


கோயம்பேடு மார்க்கெட்டில் பணிபுரியும், அரியலூர் மாவட்ட தொழிலாளர்கள் ஊர் திரும்ப தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அரியலூர் மாவட்ட தி.மு.க செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று பெருமளவில் பரவி வருகிறது. அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் பணியாற்றுகின்றனர். அங்கு கரோனா பரவி வரும் சூழலில் அனைவரும் ஊருக்குத் திரும்பி வர விரும்புகின்றனர். பலர் காய்கறி வரும் லாரிகளில் வந்து கொண்டும் இருக்கிறார்கள். 
 

வெளி மாநிலத் தொழிலார்கள் ஊர் திரும்ப ஏற்பாடு செய்வது போல, கோயம்பேட்டில் இருக்கும் அரியலூர், பெரம்பலூர் மாவட்ட தொழிலாளர்களைத் தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பேருந்து வசதிகளை ஏற்பாடு செய்து தந்திட தமிழக அரசை வலியுறுத்துகிறேன்.


கோயம்பேட்டில் இருந்து ஊர் திரும்பியவர்களில் செந்துறை ஒன்றியம் நமங்குணம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவருக்கு, நேற்று கரோனா தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டது. இன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 நபர்களுக்குப் புதிதாகத் தொற்று பாதித்துள்ளதாகத் தகவல் வருகிறது.
 

மாவட்ட நிர்வாகம் சிறப்பாகச் செயல்பட்டு மாவட்டத்திற்குள் தொற்று பரவாமல் தடுத்திருந்த நிலையில், அரசு கோயம்பேட்டிலிருந்து ஊர் திரும்பும் தொழிலாளர்களைக் கண்காணிக்கத் தவறி விட்டது. இப்போது அரியலூர் மாவட்டம் முழுதும் பல கிராமங்களில் கரோனா தொற்று உள்ளவர்கள் இருக்கிற சூழல் வந்து விட்டது. இந்தத் தவறு முழுதும் அரசையே சேரும்.
 

வந்தவர்களையும் ரத்த மாதிரி எடுத்துக் கொண்டு வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். ஊரில் இருந்த மூன்று நாட்களில் அவர்கள் எத்தனை பேரைச் சந்தித்தார்கள் என்று தெரியவில்லை. எத்தனை பேருக்கு தொற்று பரவி இருக்கிறது என்றும் தெரியவில்லை. மாவட்டம் முழுதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு விட்டது.
 

http://onelink.to/nknapp

 

தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் குடும்பங்கள் அந்த கிராமங்களிலேயே இருக்கிறார்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு வீட்டிலேயே உள்ளதால் உணவுக்குச் சிரமப்படுகிறார்கள். கழிவறை வசதி இல்லாத வீட்டைச் சேர்ந்தவர்கள், ஏரி குளத்திற்குச் செல்லும் நிலை. அவர்களைக் கண்டு ஊரிலுள்ள மற்றவர்கள் பயப்படும் நிலை. இதனால் தேவையில்லாத சண்டை, சச்சரவுகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. 
 

 

எனவே இவர்களைக் கழிவறை வசதி உள்ள பள்ளிகளில் தங்க வைத்து, உணவளித்து உதவிட வேண்டும். அப்போது தான் தொற்று பரவாமல் தடுக்கலாம். வரும் முன் காக்கும் பணியை அரசு செய்திருக்க வேண்டும். ஆனால், அரசு தவற விட்டுவிட்டது. இதற்கு மேல் தொற்று பரவிடாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கைகளை எடுத்திட அரியலூர் மாவட்ட தி.மு.கழகத்தின் சார்பாக வலியுறுத்துகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“திருமாவளவன் பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காகப் போராடுகிறார்” - அமைச்சர் சிவசங்கர்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இந்தியா கூட்டணியின் திமுக தலைமையில் சிதம்பரம் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பானை சின்னத்தில் போட்டியிடுகிறார். இதனையொட்டி சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிக்குட்பட்ட  அரியலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகள் அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான செயல்வீரர்கள் கூட்டம் அரியலூரில் திங்கள் கிழமை இரவு நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு அரியலூர் மாவட்ட திமுக செயலாளரும், போக்குவரத்துத் துறை அமைச்சருமான சிவசங்கர் தலைமை தாங்கி பேசுகையில், ‘நம்மை திசை திருப்ப பல்வேறு பொய்ச்செய்திகள் வரும். நாம் திசை திரும்பாமல் தேர்தல் பணியாற்ற‌ வேண்டும். சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் திருமாவளவன் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் வெற்றி. பிற்படுத்தப்பட்டோரின் இட ஒதுக்கீட்டை பாஜக பறிக்க முயன்றபோது தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோரின் உரிமைக்காக போராடுகிறார். திருமாவளவன் நாடாளுமன்றத்தில் சமூகநீதியின் குரலாக இருக்கிறார். தனது வாழ்வை சமூகத்திற்கு அர்ப்பணித்தவர். அவரின் உடல்நலத்தை பாதுகாக்கும் அளவிற்காகவாவது ஓய்வு கொடுங்கள். இந்த கூட்டணி ஒருங்கிணைந்த கூட்டணியாக இருக்கவும், தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு துணையாக இருப்பவர் திருமாவளவன்” எனப் பேசினார்.

Minister Sivasankar said that Thirumavalavan is giving voice to social justice

இதனைத் தொடர்ந்து பேசிய சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியின் வேட்பாளர் திருமாவளவன், “27 ஆம் தேதி நான் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு வேட்புமனு தாக்கல் செய்ய‌ இருக்கிறேன். குறுகிய கால இடைவெளியில் நாம் சிறப்பாக செயல்பட்டு தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்க வேண்டும். வரும் 22 நாட்கள் திமுக தலைமையில் தேர்தல் பிரச்சாரப் பணிகளை நமது கட்சியினர் மேற்கொள்ள வேண்டும். தேர்தல் பணியில் ஈடுபடாமல் என்னை பார்க்க கட்சியினர் வந்தால் ஏமாற்றுகின்றனர் என்று பொருள். விசிக கட்சியினர் அனைவரும் வாக்கு சேகரிக்கும் பணியாளர்கள் தான். எனவே தங்களுக்கு கூட்டணி அளிக்கும் பணியை சரியாக செயல்படுத்த வேண்டும்.

எதிர் அணியினர் திட்டமிட்டு நம்மை சீண்டுவார்கள். நாம் இந்த சூதில் இரையாகி விடக்கூடாது. நாம் நேர்மறையான செய்திகளை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். திமுகவின் சாதனைகளை பரப்பலாம். ஏன் பாஜகவை எதிர்க்க வேண்டும் என்பதை மக்களிடம் தெரிவிக்க வேண்டும். என்னை வெற்றி பெற வைக்கிறோமா இல்லையா என்பதல்ல கேள்வி. இந்தியாவை யார் ஆள வேண்டுமென்பதே கேள்வி. தமிழ்நாட்டை போல கேரளா, டெல்லி, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார் எனப் பல்வேறு மாநிலங்களிலும் இந்தியா கூட்டணியினர் பணியாற்றி வருகிறார்கள்.

தமிழ்நாட்டில் அதிமுகவால் ஒன்றும் செய்ய முடியாது என்றால் பாஜகவால் எதுவும் செய்ய முடியாது. இந்தியா கூட்டணியின் கட்சியினர் தங்களின் மாநிலங்களில் வெற்றி பெற்றால் பாஜகவை தூக்கி ஏறிய முடியும். இதை முதலில் கணித்து வியூகத்தை வகுத்தவர் மு.க. ஸ்டாலின். எனவே தான் விசிக தொடர்ந்து திமுகவுடன் பயணிக்கிறது. திமுக கூட்டணியில் தொடர்வதற்கு காரணம், திமுக - விசிக உறவு என்பதை கொள்கை சார்ந்த கூட்டணி என்று கலைஞர் கருணாநிதி கூறியுள்ளார். விசிகவிற்கு மட்டும்தான் கலைஞர் இப்படி ஒரு நற்சான்றிதழ் வழங்கியுள்ளார். இந்த கூட்டணி 2018 காவிரி போராட்டத்தில் உருவானது. அன்றிலிருந்து இன்று வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

2009ம் ஆண்டு என்னை திமுக கூட்டணியில் இருந்து வெளியேற்ற பல மணி நேரம் பேசினார்கள். நான் அப்போது தனி ஒருவனாக சிக்கினேன். ஆனால் கலைஞரை சந்தித்து கூட்டணியை உறுதி செய்தேன். எவ்வளவு எதிர்ப்பு இருந்தபோதும் இந்த கூட்டணி 28 தொகுதிகளை வென்றது. திமுக தோல்விக்கு காரணம் திருமாவளவன் - கிருஷ்ணசாமி என்று பத்திரிகைகள் எழுதின. ஆனால் கலைஞர் அதற்கு பதிலளித்து பேசுகையில் விசிக வாக்குகளால் தான் கடலூரில் 5/9 தொகுதிகளை வென்றோம் என்று தெரிவித்தார். இதனை திமுக தலைவர் உள்ளிட்ட அனைவரும் நன்கு அறிவர்.

நானும் மு.க. ஸ்டாலினும் சமூகநீதிக்காக கை கோர்த்து இருக்கிறோம். பாஜகவிற்கு எதிரான ஒரு அணியை கட்டமைத்ததில் விசிகவின் பங்கு கணிசமானது. இந்த நாட்டை காப்பாற்ற நாம் அனைவரும் இணைந்து செயலாற்ற வேண்டும்” என்றார். இதனைத் தொடர்ந்து கூட்டணிக் கட்சியினர் மற்றும் திமுகவினர் பேசினர். கூட்டத்தில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர்.

Next Story

“ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது” - போக்குவரத்துத் துறை எச்சரிக்கை

Published on 13/02/2024 | Edited on 13/02/2024
Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து முதற்கட்டமாக அரசு விரைவு பேருந்துகள் (SETC) இயக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து ஜனவரி 24 ஆம் தேதி முதல் தனியார் சொகுசு பேருந்துகள் (OMNI BUS) இயக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக திண்டிவனம் மற்றும் செங்கல்பட்டு வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் 710 அரசுப் பேருந்துகளும் (TNSTC) கடந்த 30 ஆம் தேதி (30.01.2024) முதல் கிளாம்பாக்கத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் கடந்த ஜனவரி 24 ஆம் தேதி முதல் கிளாம்பாக்கத்திலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டும் என்ற உத்தரவை எதிர்த்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், ‘இந்த வழக்கு முடியும் வரை கோயம்பேட்டிலிருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும்’ எனத் தெரிவித்திருந்தனர். இது தொடர்பான மனு விசாரணைக்கு வந்த போது, “கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே ஆம்னி பேருந்து பணிமனைகளை ஏற்கெனவே மக்கள் பயன்படுத்தியுள்ளனர். அதனால், மறு உத்தரவு வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்கலாம். போரூர், சூரப்பட்டு சுங்கச் சாவடிகளிலும் பயணிகளை ஏற்றி இறக்கிக் கொள்ளலாம்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பயணிகளை ஏற்றி இறக்காமல் தென் மாவட்டத்திற்கு செல்லும் எந்த ஆம்னி பேருந்தையும் இயக்கக் கூடாது. ஆன்லைன், மொபைல் ஆப்களில் போரூர், சூரப்பட்டு தவிர பயணிகளை ஏற்றி இறக்க வேறு இடங்களைக் குறிப்பிடக் கூடாது” என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து கோயம்பேட்டில் இருந்து கடந்த 10 ஆம் தேதி (10.02.2024) இரவு முதல் மீண்டும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

Dont pick up or drop passengers at omni bus depots  Transport Department

இந்நிலையில் போக்குவரத்துத் துறை சார்பில் வெளியிட்ப்பட்டுள்ள உத்தரவில், “சென்னை கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்து பணிமனைகளில் இருந்து பயணிகளை ஏற்றி இறக்கக் கூடாது. பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பயணிகளை ஏற்றி, இறக்க உயர்நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை. கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை முழு பயன்பாட்டுக்கு கொண்டு வந்த பின்னரே நடைமுறை சிக்கல்களை குறித்து அறிய இயலும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகளில் மட்டுமே பயணிகளை ஏற்றி, இறக்கும் இடங்களாக குறிப்பிட வேண்டும்.

ஆம்னி பேருந்துகள் தங்களது பேருந்து பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் செயலிகளில் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களை தெளிவாகக் குறிப்பிட வேண்டும். சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் தவறான புரிதலால் தேவையற்ற குழப்பம் ஏற்படுவதை அனுமதிக்க இயலாது. தவறான கண்ணோட்டத்துடன் செயல்படும் ஆம்னி பேருந்துகள் மீது மோட்டார் வாகன சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.