Skip to main content

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து கருத்துத் தெரிவிக்கத் தடை கோரி வாதம்! – உயர் நீதிமன்றம் மறுப்பு!

Published on 23/07/2020 | Edited on 23/07/2020

 

chennai high court

 

மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதத்திற்குச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.  

 

சென்னை மற்றும் கோவை மாநகராட்சி டெண்டர்களில் முறைகேடு செய்ததாக, அமைச்சர் எஸ்.பி வேலுமணிக்கு எதிரான புகார் மீது,  நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்புப் புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிடக் கோரி, அறப்போர் இயக்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

 

இந்த வழக்கு கடந்த  பிப்ரவரி மாதம் நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அமைச்சர் மீதான புகார் குறித்து, ஊழல் மற்றும் கண்காணிப்புத் துறை நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுக்கான எந்த முகாந்திரமும் இல்லாததால், விசாரணையைக் கைவிட முடிவு செய்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்தது.


இதற்குக் கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதிகள், நீதிமன்ற உத்தரவு இல்லாமல், அமைச்சர் மீதான வழக்கைக் கைவிட தமிழக அரசு எப்படி முடிவு எடுத்தது என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தனர்.


இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், அமைச்சர் மீதான தங்களுடைய புகார்கள் தொடர்பாக, கூடுதல் ஆவணங்கள் தாக்கல்செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்.


அப்போது, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வழக்கு நிலுவையில் உள்ளவரை,  அமைச்சர் குறித்து  பத்திரிகை, ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில், அறப்போர் இயக்கம் கருத்துத் தெரிவிக்கத் தடை விதிக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

 

http://onelink.to/nknapp

 

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், தற்போதைய நிலையில், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனத் தெரிவித்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் இரண்டாம் வாரத்திற்குத் தள்ளி வைத்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்