Skip to main content

"இன்னும் 11 மாதங்கள்தான்... கோவை மத்தியச் சிறையில் அமைச்சர் வேலுமணி அடைக்கப்படுவார்" -கே.என்.நேரு எச்சரிக்கை!

Published on 08/06/2020 | Edited on 08/06/2020

 

sp velumani k. n. nehru


"இன்னும் 11 மாதங்கள்தான். பத்திரிகையாளர்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்தியச் சிறைச்சாலையில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அடைக்கப்படுவார்" என தி.மு.க. முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.
 


அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவையில் சசிகலா உறவினர் இராவணனுக்கு” கால் கழுவி, சென்னையில் “திருமதி. சசிகலாவிற்கு சலாம்” போட்டு - அமைச்சர் பதவியை “காக்காய் பிடித்து” வாங்கிக் கொண்டு, இன்றைக்கு உள்ளாட்சித் துறையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் அமைச்சர் திரு. எஸ்.பி. வேலுமணி “குறை குடம் கூத்தாடும்” என்பது போல் ஒரு வெற்று அறிக்கை வெளியிட்டு, எங்கள் கழகத் தலைவரை விமர்சனம் செய்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“சிறைக்குச் செல்லும் நாள் நெருங்கி விட்டது” என்ற பீதியில் “சில்லறைப் புத்தியுடன்”, “சிறுமதியுடன்” அறிக்கை என்ற பெயரில் ஒரு “உளறலை”, “போக்கிரித்தனமான எண்ணவோட்டங்களை” வெளியிட்டிருப்பது அவரது அறியாமையைக் காட்டுகிறது. அடிக்கின்ற கொள்ளையில்- கரோனாவின் தாக்கத்தையே மறந்து விட்டு- பூனை கண்ணை மூடிக்கொண்டது போன்ற மனநிலையில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் திரு வேலுமணி! 

“விபத்தில்” கைப்பற்றிய அ.தி.மு.க.,வை தனது குடும்பக் கம்பெனியாக்கி- அ.தி.மு.க. அலுவலகத்தையும், அதன் பத்திரிகையையும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் திரு. வேலுமணிக்கு தி.மு.க. பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது?

அமைச்சர் பதவியைத் தனது சகோதரரின் கம்பெனிகளுக்கும், தனது உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்களுக்கும் “அள்ளிக் கொடுக்கும்” பதவியாக மாற்றி- இன்றைக்கு தமிழக அமைச்சரவையில் உள்ள மூத்த “கொள்ளையராக” - முதல் “கொள்ளையராக” வலம் வரும் திரு. வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவரின் கரோனா பேரிடர் காலத்து மக்கள் பணி குறித்துப் பேசிட என்ன அருகதை இருக்கிறது?

வீராப்புப் பேசுவது வீண் வம்பை விலைக்கு வாங்குவதற்குச் சமம் என்று திரு. வேலுமணியை எச்சரிக்க விரும்புகிறேன்.

அரசியலில் நேருக்கு நேர் கருத்துச் சொல்லி - ஜனநாயக ரீதியான வாதங்களை எடுத்து வைக்க தகுதியோ, தார்மீக உரிமையோ கொஞ்சம் கூட இல்லாதவர் திரு. வேலுமணி.

“பத்திரிகையாளர் அன்பழகன் குண்டர் சட்டத்தில் கைது”, “டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழின் மூத்த பெண் பத்திரிக்கையாளர் கோமல் கவுதம் மற்றும் உதவி ஆசிரியர் திரு. மயில்வாகனன் ஆகியோருக்கு மிரட்டல்”, “கோவை சிம்பிளிசிட்டி ஆன்லைன் செய்தித் தளத்தின் நிறுவனர் ஆண்ட்ரூ சாம் ராஜ பாண்டியன் கைது” என்று அடக்குமுறை வெறியாட்டம் போடும் அமைச்சர் திரு. வேலுமணி போலீசை துணைக்கு அழைக்கும் ஒரு நிரந்தரமான கோழை!
 

 


அப்படிப்பட்ட கோழை, கோட்டையில் அமர வாய்ப்புக் கிடைத்து விட்டது என்பதற்காக எங்கள் கழகத் தலைவரைப் பார்த்து சுட்டு விரல் நீட்டிப் பேச யோக்கியதை இல்லை; தகுதியும் இல்லை. “கே.சி.பி. எஞ்சினியர்ஸ் லிமிடெட்” "பி.செந்தில் அன்ட் கோ” “வரதன் இன்ஃப்ராஸ்டிரெக்சர்” “கன்ஸ்ட்ரானிக்ஸ் இந்தியா” “ஆலயம் பவுண்டேஷன்ஸ் லிமிடெட்” “கன்ஸ்ட்ரோமால் குட்ஸ் பிரைவேட் லிமிடெட்” “இன்விக்டா மெடிட்டெக் லிமிடெட்” “ஏஸ்டெக் மெஷினரி காம்பொனென்ட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட்” ஆகிய பினாமி கம்பெனிகளை வைத்து உள்ளாட்சித் துறையின் கீழ் வரும் அனைத்து மாநகராட்சிகளிலும் “கொள்ளையடித்து”, என்றைக்கு இருந்தாலும் ஊழல் வழக்கில் சிறைக் கம்பிகளை எண்ணப் போகின்ற திரு.வேலுமணிக்கு எங்கள் கழகத் தலைவர் கரோனா காலத்திலும் தமிழக மக்களுக்கு ஆற்றிய பணிகளைக் கொச்சைப்படுத்துவது “சாத்தான் வேதம் ஓதுவதற்கு” சமம்!

வரலாறு காணாத நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி - அ.தி.மு.க. அரசால் பசியாலும் பட்டினியாலும் கிடந்த மக்களைக் காப்பாற்றிட எடுத்த “ஒன்றிணைவோம் வா” நிகழ்ச்சியின் “அ” “ஆ” கூட தெரியாத திரு. வேலுமணிக்கு அந்த “மக்கள் இயக்கம்” பற்றிக் கேள்வி கேட்பது “குறுக்குப் புத்தி”யே தவிர வேறு ஒன்றுமில்லை.

தமிழகத்தின் தனிப்பெரும் தலைவராகத் திகழும் எங்கள் கழகத் தலைவரும், தனிப்பெரும் இயக்கமாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகமும் ஆற்றிய கரோனா பணிகள் மக்களின் மனதில் இடம்பெற்றிருக்கிறது. திரு. வேலுமணி போன்ற குறுகிய மனம் படைத்த அமைச்சர்களிடம் இடம் பிடிக்கத் தேவையில்லை.

தமிழகத்தில் “ஒப்பந்த ஊழல்” என்று எடுத்தால் அதில் முதலிடத்தில் இருப்பது அமைச்சர் திரு. வேலுமணி தான். உள்ளாட்சித் துறையில் “சென்னை மாநகராட்சி, கோவை மாநகராட்சி, திருப்பூர் மாநகராட்சி, சேலம் மாநகராட்சி என்று 349 ஒப்பந்தங்களில் நடைபெற்றுள்ள முறைகேடு” குறித்த விசாரணையில் சிக்கி - துர்நாற்றம் வீசிக் கொண்டிருக்கும் ஊழல்கடலில் மூழ்கியிருக்கும் திரு. வேலுமணிக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் எதிர்க்கட்சி பணிகள் குறித்தோ, கரோனா விழிப்புணர்வு பணிகள் குறித்தோ, எங்கள் கழகத் தலைவர் மற்றும் இயக்கத்தினர் தங்கள் உயிரையும் துச்சமென நினைத்து ஆற்றியுள்ள பணிகள் குறித்தோ பேசுவதற்கு எள் முனையளவும் தகுதி இல்லை.

ஒரே ஐ.பி. அட்ரஸில் இருந்து இந்த டெண்டர்களை போட்டு - ஊரைக் கொள்ளையடிக்கும் அமைச்சர் திரு. வேலுமணி “அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்தராத்திரியில் குடைப்பிடிக்கும்” என்பது போன்ற மனநிலையில் இருக்கலாம். ஆனால் அதற்கு அவர் நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டுமே தவிர - கழகத் தொண்டர்கள் உயிராகப் போற்றி மதித்து வரும் எங்கள் கழகத் தலைவர் பற்றி “அநாகரிக அறிக்கை” விடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். ஏன், வாயைப் பொத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கோவை இராவணன் இல்லையென்றால் - பிளாட்பாரத்தில் இருந்திருக்கக்கூடிய “பேர்வழிகளுக்கு” எங்கள் கழகத் தலைவர் பற்றி குறைகூறுவதற்கு எந்தத் தார்மீக உரிமையோ, தகுதியோ இல்லை என்பதை அமைச்சர் திரு.வேலுமணி போன்றவர்கள் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து உணர வேண்டும். ஒருவேளை சிந்தனைக் குறைவு என்றால் அதற்கு நல்ல ஒரு நரம்பியல் மருத்துவரை உடனடியாகப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஊழல் வழக்கு விசாரணையில் கோர்ட் நோட்டீஸை வாங்காமல் - ஓடி ஒளிந்த “பயந்தாங்கொல்லி” திரு. வேலுமணி - வீராப்பு அறிக்கை விடுவதற்கு ஏதாவது அருகதை இருக்கிறதா?

“தனி அதிகாரிகளை வைத்து 40 மாதங்களுக்கு மேல் உள்ளாட்சி அமைப்புகளைக் கொள்ளையடித்த திரு. வேலுமணிக்கு” திராவிட முன்னேற்றக் கழகம் பற்றி பேசுவதற்கு ஏதாவது யோக்கியதை இருக்கிறதா?

கரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னை மாநகராட்சி முற்றிலும் தோல்வியடைந்து நிற்கிறது. நாளுக்கு நாள் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. காவலர்களும், மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும் “கரோனா பணியில்” தங்களை ஈடுபடுத்திக் கொள்ள, மாநகராட்சி கமிஷனரை வைத்து அங்குள்ள பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்பதில் வேலுமணி கவனம் செலுத்தி வருவதைப் பார்த்து இந்த நாடே சிரிக்கிறது.

உள்ளாட்சி துறையில் “ஸ்பிரேயர், கிருமி நாசினி, முகக்கவசம்” வரை கொள்முதல் செய்வதில் நடக்கும் ஊழல்களைப் பார்த்து உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள பிரதிநிதிகள் எல்லாம் வேறு வழியாகச் சிரித்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

http://onelink.to/nknapp


சென்னை மாநகராட்சியில் கரோனா தடுப்பிற்காக ஒரு ஐ.பி.எஸ். அதிகாரிகள் குழு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு, சிறப்பு அதிகாரி, சிறப்பு ஒருங்கிணைப்பாளர், ஐந்து அமைச்சர்கள் குழு போடும் அளவிற்கு “நிர்வாகம்” தோல்வியடைந்து நிற்கிறது. தலைமைச் செயலாளரே மாநகராட்சி ஆணையரைக் கண்டித்துக் கடிதம் எழுதி விட்டார். திரு.வேலுமணிக்கு உண்மையிலேயே வெட்கம், மானம், சூடு, சொரணை இருந்தால் இந்நேரம் உள்ளாட்சித்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்து விட்டு கோவைக்குத் தலை தெறிக்க திரும்பி ஓடியிருக்க வேண்டும்.

அதைச் செய்யாமல் எங்கள் தலைவரைப் பார்த்து விமர்சிப்பது - அடித்த கொள்ளையும், அமைச்சர் பதவியும் இருக்கிறது என்ற ஒரே ஆணவத்தில்தானே!

இன்னும் 11 மாதங்கள்தான் திரு. வேலுமணி அவர்களே! “ஆகாயத்தில் எறிந்த கல் அங்கேயே நிற்காது”! பணமும் பதவியும் பின்னே வராது. அடித்தக் கொள்ளையும், சொத்தும் பின்னே வராது. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வரும் காவல்துறை அதிகாரிகளும் வர மாட்டார்கள். ஆனால் அன்றைய தினம் - நீங்கள் ஆடிய ஆட்டத்திற்கும், அராஜகத்தைக் கட்டவிழ்த்து விட்டதற்கும், அடக்குமுறையை எங்கள் கழகத் தொண்டர்கள் மீதும் பத்திரிகையாளர்கள் மீதும் ஏவி விட்டதற்கும் - ஒரு முடிவு பிறக்கும். அன்று நீங்கள், பத்திரிகையாளர்களும், எங்கள் கழகத் தொண்டர்களும் அடைக்கப்பட்ட கோவை மத்தியச் சிறைச்சாலையில் நிச்சயம் அடைக்கப்படுவீர்கள் என்று எச்சரிக்க விரும்புகிறேன். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.