Skip to main content

ஆர்.கே.நகர் ஓட்டுக்கு ரூ.89 கோடி லஞ்சம்: வழக்கு ரத்து செய்யப்பட்டது நீதிப் படுகொலை! ராமதாஸ்

Published on 04/12/2018 | Edited on 04/12/2018
Ramadoss



பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

 சென்னை இராதாகிருஷ்ணன் நகர் தொகுதி இடைத்தேர்தலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  உள்ளிட்ட அதிமுக தலைவர்கள் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி கையூட்டு கொடுத்தது   தொடர்பான வழக்கு விசாரணை நடத்தப்படாமலேயே தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக வெளியாகியுள்ள  செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழக அரசியலின் தலையெழுத்தையே மாற்றியமைக்கக் கூடிய வழக்குக்கு ஆட்சியாளர்களால் சந்தடி இல்லாமல் சாவுமணி அடிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கதாகும்.

 

Vijay-bhaskar


இராதாகிருஷ்ணன் நகர் தொகுதிக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு 5 நாட்கள் முன்பாக ஏப்ரல் 7-ஆம் தேதி சென்னையில் உள்ள அமைச்சர் விஜயபாஸ்கரின் இல்லம், அலுவலகம் உள்ளிட்ட 32 இடங்களில் வருமானவரித்துறை ஆய்வு நடத்தியது. அதில் இராதாகிருஷ்ணன் நகர் தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட தினகரனுக்கு வாக்களிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அமைச்சர்கள் செங்கோட்டையன்,  திண்டுக்கல் சீனுவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகிய எழுவர் மூலமாக வாக்காளர்களுக்கு ரூ.89.65 கோடி வழங்கப்பட்டதற்கான ஆதாரங்கள் சிக்கின. அதனடிப்படையில் ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு பின்னர் நடத்தப்பட்டது.
 

வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி சென்னை மாநகரக் காவல்துறையில், யாருடையப் பெயரையும் குறிப்பிடாமல் பதிவு செய்யப்பட்ட வழக்கு தான் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. அதிலும் தந்திரமாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மூலமாகவே இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்குக்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத நரசிம்மன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த மனுவின் அடிப்படையில் ஒற்றை நீதிபதி எம்.எஸ்.இரமேஷ் அமர்வில் முதல் தகவல் அறிக்கை ரத்து செய்யப்பட்டது. இதுவரை ரகசியமாக வைக்கப் பட்டிருந்த இந்த உண்மை, அந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றக்கோரிய மற்றொரு மனுவின் விசாரணையின் போது தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தி நீதிபதிகளையே அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
 

தமிழகத்தில் ஜனநாயகம் படுகொலை செய்யப்பட்டது தொடர்பான இந்த வழக்குக்கு யாருக்குமே தெரியாமல் மூடுவிழா நடத்தப்பட்டப்பட்டிருப்பது மன்னிக்க முடியாத நீதிப்படுகொலை ஆகும். அரசாங்க கோழி முட்டை அம்மிக்கல்லையும் உடைக்கும் என்பார்கள்.... அதேபோல், ஆட்சியாளர்கள் நினைத்தால் நீதி தேவதையின் இரு கண்களையும் நிரந்தரமாகவே மூடி, எந்த வழக்கையும் குழிதோண்டி புதைக்க முடியும் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த எடுத்துக் காட்டு ஆகும். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு  யார் தரப்பில் எத்தகைய விளக்கம் அளிக்கப்பட்டாலும் அதை ஏற்க முடியாது; ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

 

highcourt chennai


இவ்வழக்கு ரத்து செய்யப்பட்டதற்கு ஒரு தரப்பை மட்டும் குறைகூற முடியாது. காவல்துறை, நீதித்துறை, தேர்தல் ஆணையம், வருமானவரித்துறை உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் தான் பொறுப்பேற்க வேண்டும். பொதுவாக பெயர் குறிப்பிடப்படாமல் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது அதை ரத்து செய்யும்படி எவரும் கோர முடியாது. நரசிம்மன் என்பவர் முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்யக் கோரி மனுத்தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த வழக்குக்கும், அவருக்கும் என்ன தொடர்பு? என்ற வினாவை அரசு வழக்கறிஞர் எழுப்பியிருக்க வேண்டும்; அவர் எழுப்பாத பட்சத்தில் நீதிபதி வினவியிருக்க வேண்டும். ஆனால், இருவருமே அவ்வாறு செய்யாதது மிகவும் வியப்பளிக்கிறது.
 

வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கையூட்டு கொடுக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதுமே, அதனடிப்படையில் முதலமைச்சர் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுமா? என வைரக்கண்ணன் என்ற வழக்கறிஞர் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வினா எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய ஆணையிட்டிருப்பதாக கூறியிருந்தது. அதன்படி, முதல் தகவல் அறிக்கையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் 5 அமைச்சர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், மூன்றாவது நபர் ஒருவர் மனுத்தாக்கல் செய்து இந்த வழக்கை ரத்து செய்ய வைத்திருக்க முடியாது. இது தேர்தல் ஆணையத்தின் கடமை தவறுதலாகும்.

 

eps


 

தேர்தலில் வாக்காளர்களுக்கு கையூட்டு கொடுத்ததாக பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளுக்கும் இதே கதி தான் ஏற்படுகிறது. இந்நிலையை மாற்ற இத்தகைய வழக்குகளில் தேர்தல் ஆணையத்தையும் ஒரு தரப்பாக சேர்க்க வேண்டும் அல்லது வழக்கை கண்காணிக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்திற்கு வழங்க வேண்டும். இந்த இரண்டு ஏற்பாடுகளுமே செய்யப்படாததால் தான் ஓட்டுக்கு பணம் கொடுத்த அனைவருமே எந்த தண்டனையும் இல்லாமல் தப்பித்துக் கொள்கின்றனர். இப்போதும் இந்த ஓட்டையைப் பயன்படுத்தி தான் இவ்வழக்கில் தண்டிக்கப்பட்டிருக்க வேண்டிய முதல்வர் உள்ளிட்டோர் தப்பியுள்ளனர்.


விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை நடத்தி இந்த ஆதாரங்களைக் கைப்பற்றிய வருமானவரித்துறையே அவர் மீதி நிதிமுறைகேடு வழக்குத் தொடர்ந்து தண்டித்திருக்க முடியும். ஆனாலும், ஏதோ காரணத்தால் விஜயபாஸ்கர் மீது வருமானவரித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது நீதியைக் காக்காது.
 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு ரூ.89 கோடி கொடுத்தவர்கள் தண்டிக்கப்படாவிட்டால் ஜனநாயகத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவார்கள். எனவே, ஓட்டுக்கு பணம் கொடுத்தது தொடர்பான வழக்கில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்களை சேர்த்து அந்த வழக்கின் விசாரணையை மத்தியப் புலனாய்வுப் பிரிவிடம்(சி.பி.ஐ) அரசு ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும்... எஸ்.ஜோயல் பதிலடி

Published on 15/10/2019 | Edited on 16/10/2019

 

நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக ரூபி மனோகரன் போட்டியிடுகிறார். கூட்டணிக் கட்சியான திமுக அங்கு தீவிரப் பணியாற்றி வருகிறது. நாங்குநேரி களம் எப்படி உள்ளது என திமுக மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயலை தொடர்பு கொண்டோம்.

 

நாங்குநேரி வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
 

நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. 
 

காங்கிரஸ் வேட்பாளர் வெளியூர்காரர் என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்கிறாரே?
 

அதுபோன்ற எண்ணம் பொதுமக்களிடையே இல்லை. ஆளும் கட்சி மீது பொதுமக்களுக்கு கடும் அதிருப்தி உள்ளது. அதனை மறைக்க எடப்பாடி பழனிசாமி இதுபோன்று பேசி வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும் செல்வாக்கான தொகுதி நாங்குநேரி. திமுக தலைமையிலான கூட்டணியினர் ஒன்றிணைந்து பணியாற்றுவதால் ரூபி மனோகரனுக்கு செல்வாக்கு கூடியுள்ளது. 
 

joel



 

 

மு.க.ஸ்டாலினுக்கு தேர்தல் என்றாலே திண்ணை பிரசாரம் தான் ஞாபகத்துக்கு வருகிறது என்று எடப்பாடி பழனிசாமி பிரச்சாரத்தில் பேசுகிறாரே?
 

தேர்தலுக்காக வருபவர் இல்லை ஸ்டாலின். இளைஞரணித் தலைவராக அவர் இருந்தபோது தமிழ்நாட்டில் அவர் செல்லாத ஊர்களே கிடையாது. இளைஞரணியினர் அழைப்பை ஏற்று தமிழ்நாடு முழுவதும் சென்று திமுக கொடியை ஏற்றி வைத்துள்ளார். பட்டித் தொட்டி, கிராமங்கள் என எல்லா ஊர்களுக்கும் சென்ற இப்போதுள்ள ஒரே தலைவர் ஸ்டாலின்தான். எளிமையாக எல்லோருடனும் பேசுகிறார், பழகுகிறார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி பேசுகிறார்கள். 
 

திண்ணைப் பிரச்சாரம் எடப்பாடி பழனிசாமியால் பண்ண முடியாது. ஏனென்றால் அங்கு குறைகளை சொல்லுவார்கள். அதற்கு பதில் சொல்ல வேண்டும். அதற்கு எடப்பாடி பழனிசாமியால் பதில் சொல்ல முடியாது. திண்ணைப் பிரச்சாரம் செய்ய எடப்பாடி பழனிசாமிக்கு தகுதி கிடையாது. திண்ணைப் பிரச்சாரத்திற்கு அவர் வந்தால் மக்களே விரட்டிவிடுவார்கள்.
 

திண்ணைப் பிரச்சாரம் செய்வதற்கு ஸ்டாலினுக்கு முழு தகுதி உள்ளது. அங்கு கேட்கப்படும் கேள்விகளுக்கு உரிய பதில் அளிக்கவும், திமுக ஆட்சியில் என்ன செய்தோம், இனி என்ன செய்வோம் என்று சொல்லக்கூடிய தகுதி எங்கள் தலைவருக்குத்தான் உள்ளது. எடப்பாடி பழனிசாமி மட்டுமல்ல அதிமுகவில் உள்ள யாருக்கும் திண்ணைப் பிரச்சாரம் செய்யக்கூடிய தகுதி இல்லை. 


 

 

17315 வாக்குகள் வித்தியாசத்தில் கடந்த தேர்தலில் வசந்தகுமார் வெற்றி பெற்றார். ரூபி மனோகரன் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்?

 

குறைந்தபட்சம் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். அதில் எந்த சந்தேகமும் இல்லை.
 

திமுக இளைஞரணி பிரச்சாரம் எப்படி உள்ளது?
 

இளைஞரணியினர் ஏற்கனவே தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். உதயநிதி ஸ்டாலின் 17 மற்றும் 18ஆம் தேதி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார். அவர் வருவது திமுகவினருக்கு மேலும் உற்சாகத்தை கொடுக்கும்.

 


 

Next Story

‘நாளை முதல் விருப்ப மனு விநியோகம்’- அதிமுக

Published on 21/09/2019 | Edited on 21/09/2019

மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதனால், அந்த 3 மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்படும் என சில வாரங்களாகவே எதிர்பார்க்கப்பட்டது. கூடவே தமிழகத்தில் காலியாக உள்ள விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இரண்டு தொகுதிகளுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா இன்று அறிவித்துள்ளார்.
 

admk

 

 

இந்த இரண்டு தொகுதிகளுக்கும் அக்., 21 தேதி தேர்தல் நடத்தப்படுவதாகவும், வாக்கு எண்ணிக்கை அக்., 24 தேதி நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் 23 தேதி முதல் வேட்புமனுவை தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிட விருப்பமுடையோர் விருப்பமனுவை வாங்கி தாக்கல் செய்யலாம் என்று அறிவிப்பு வெளியகியுள்ளது. நாளை காலை பத்து மணியிலிருந்து அதிமுக அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரூ. 25ஆயிரம் பணம் செலுத்தி விருப்ப மனுவை வாங்கி, வருகின்ற 23ஆம் தேதிக்குள் மனுவை பூர்த்தி செய்து தலைமை அலுவலகத்தில் வழங்க வேண்டும் என்று அதிமுக தலைமை அறிவித்துள்ளது.