Skip to main content

27% இட ஒதுக்கீடு வேண்டும்! மத்திய அமைச்சருக்கு அன்புமணி கடிதம்

Published on 01/11/2019 | Edited on 01/11/2019

 

இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தனுக்கு அன்புமணி இராமதாஸ் எழுதிய கடிதம்:
 

தேசிய அளவில் முதுநிலை பல்மருத்துவப் படிப்பு, முதுநிலை மருத்துவப் படிப்பு ஆகியவற்றுக்கான நீட் தேர்வுகள் முறையே 20.12.2019, 05.01.2020 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளன. இத்தேர்வுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிக்கைகள் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இடஒதுக்கீடு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களுக்கு மட்டும் தான் பொருந்தும் என்றும், அகில இந்திய தொகுப்பு இடங்களுக்கு பொருந்தாது என்று கூறப்பட்டுள்ளது. அதேநேரத்தில், உயர்சாதி ஏழைகளுக்கான  10% இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவதற்காக, எந்தெந்த கல்வி நிறுவனங்களில் எல்லாம் கூடுதல் இடங்கள் உருவாக்கப் பட்டுள்ளனவோ, அங்கெல்லாம் அவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

anbumani ramadoss


இந்தியாவில் மொத்தம் 6228 முதுநிலை பல்மருத்துவ இடங்கள் உள்ளன. இவற்றில் 1352 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ளன. இவற்றில் 50% இடங்கள், அதாவது 676 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும். அதேபோல், நாடெங்கும் மொத்தம் 23,729 மருத்துவ மேற்படிப்பு  இடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 18,000 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு சொந்தமானவை என்பதால், அவற்றில் 50%, அதாவது சுமார் 9000 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும்.
 

மத்திய சுகாதாரத்துறை நிறுவனங்களின் இந்த விசித்திரமான நிலைப்பாடு காரணமாக பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 2430 மருத்துவ மேற்படிப்பு இடங்களும், 183 பல்மருத்துவ மேற்படிப்பு  இடங்களும் பறிக்கப்படுகின்றன. இளநிலை மருத்துவப்படிப்பு (MBBS), இளநிலை பல்மருத்துவப் படிப்பு (BDS) ஆகியவற்றுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் இதே அநீதி இழைக்கப்படுகிறது. இதனால் இளநிலை மருத்துவப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள சுமார் 4,500 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 1,215 இடங்களும், இளநிலை பல்மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்டுள்ள 425 இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைக்க வேண்டிய 115 இடங்களும் பறிக்கப் பட்டு பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப் பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டைப் போராடிப் பெற்றுக் கொடுத்த கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான். அவ்வாறு பெறப்பட்ட இடஒதுக்கீடு இவ்வாறு சிதைக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.


 

2006-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, 2009-ஆம் ஆண்டு முதல் முழுமையான அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி (The Central Educational Institutions (Reservation in Admission) Act, 2006) மத்திய கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களிலும் பட்டியல் இனத்தவருக்கு 15%, பழங்குடியினருக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதைப் போன்று பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். ஆனால்,  மத்திய கல்வி நிறுவனங்கள் (மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு) சட்டத்தின்படி மத்திய அரசு உயர்கல்வி நிறுவனங்களில் மட்டும்தான் இடஒதுக்கீடு வழங்க முடியும் என்று கூறி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு இடஒதுக்கீடு வழங்க இயலாது என்று மத்திய அரசு கூறுவதை ஏற்க முடியாது.
 

மத்திய கல்வி நிறுவனங்கள் சட்டத்தின் 4வது பிரிவின்படி, மத்திய அரசுக்குச் சொந்தமான 8 கல்வி நிறுவனங்களுக்கு மட்டும்தான் இந்த இடஒதுக்கீட்டுச் சட்டம் பொருந்தாது என்று தெளிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில், North-Eastern Indira Gandhi Regional Institute of Health and Medical Science, Shillong மட்டும் தான் மருத்துவக் கல்வி நிறுவனம் ஆகும். இதைத் தவிர, இந்தியாவில் உள்ள எந்த மருத்துவக் கல்வி நிறுவனத்திலும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க தடை இல்லை.
 

அதுமட்டுமின்றி, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களையும், மத்திய கல்வி நிறுவனங்களில் உள்ள இடங்களையும் தனித்தனியாக பிரித்துப் பார்க்கக் கூடாது. மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 15% இளநிலை மருத்துவ இடங்களும், 50% முதுநிலை மருத்துவப் படிபு இடங்களும் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு வழங்கப்பட்ட உடனேயே அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இடங்களாக மாறிவிடுகின்றன. எனவே, அவற்றுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது தவிர்க்க முடியாதது ஆகும். அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பட்டியலினத்தனவர்கள், பழங்குடியினர், உயர் வகுப்பு ஏழைகள் என அனைத்துத் தரப்பினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்படும் நிலையில், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மட்டும் இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பது நியாயமாகாது.


 

மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த திருத்தங்களின்படி, மாநில அரசுகளுக்கு சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவ மற்றும் பல் மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 50% இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு பெறப்படுகிறது. இதனால், மாநில அரசுகளால் உள்ளூர் மாணவர்களுக்கு உரிய அளவில் வாய்ப்பு வழங்க முடியவில்லை. உதாரணமாக, தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1758 மருத்துவ மேற்படிப்பு இடங்களில் 879 இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன. இந்த இடங்கள் தமிழக அரசின் கட்டுப்பாட்டிலேயே இருந்தால், அவற்றில் 50%, அதாவது 440 இடங்கள் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு கிடைத்திருக்கும். ஆனால், அந்த இடங்கள் அகில இந்திய தொகுப்புக்கு ஒதுக்கப்பட்ட ஒரே காரணத்திற்காக இடஒதுக்கீட்டை மறுப்பது எந்த வகையிலும் நியாயமல்ல என்பதை தாங்கள் உணர்வீர்கள்.
 

எனவே, மத்திய சுகாதாரத்துறை அமைச்சராகிய தாங்கள், இந்த விசயத்தில் தலையிட்டு இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகள், பல் மருத்துவப் படிப்புகள் ஆகியவற்றுக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இடஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால், பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மத்திய அரசுக்கு நன்றி உடையவர்களாக இருப்பர். இதுகுறித்து தங்களிடமிருந்து சாதகமான பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு எம்.எல்.ஏ.க்கள் கடிதம்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
MLAs letter to Chief Electoral Officer Satyapratha Sahu

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 69.72 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக கடந்த 21 ஆம் தேதி (21.04.2024) அறிவித்திருந்தது. அதில் அதிகபட்சமாக தருமபுரி தொகுதியில் 81.20 சதவீத வாக்குகளும், குறைந்தபட்சமாக மத்திய சென்னை தொகுதியில் 53.96 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாகச் சோதனை செய்தனர். இதன் ஒருபகுதியாக அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள், பெயர்பலகைகள், எம்.எல்.ஏ. மற்றும் எம்.பி.க்களின் அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன.

இந்நிலையில் எம்.எல்.ஏ. அலுவலகங்களை திறக்க அனுமதி கோரி தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுவிற்கு எம்.எல்ஏ.க்கள் கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில், “தேர்தல் முடிந்து ஒரு வாரம் ஆகிவிட்டதால் மக்கள் பணியாற்ற எம்.எல்.ஏ அலுவலகங்களை திறக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர். இது குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விரைவில் முடிவெடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.