சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக மாநிலம் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் உள்ள சசிகலா வரும் ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகிறார். அவர் விடுதலையாகி வருவதற்கான பணிகளையும் அமமுகவினர் மேற்கொண்டு வந்த நிலையில், அவர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையடுத்து சசிகலா விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் பல்வேறு கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை, வழிபாடு செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அண்ணா திராவிட கழகத்தினர் ஜெயம்கொண்டநாதர் திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.அதே நேரம் அமமுகவினர் ராஜகோபாலசுவாமி கோவிலில் ராஜகோபாலசுவாமி மற்றும் செங்க மலத்தாயார் சுவாமிக்கு சிறப்பு பூஜை வழிபாடு செய்து, பொதுமக்களுக்கு அண்ணதானம் வழங்கினர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை,வத்தலக்குண்டு,ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச்சேர்ந்தநிர்வாகிகள், தொண்டர்கள் பெரும் திரளாக சென்று சசிகலா பெயரில் சிறப்பு பூஜை செய்து குணமடைய வேண்டி பிரார்த்தனை செய்தனர்.
இதேபோல் சசிகலா பூரண உடல்நலத்துடன் குறிப்பிட்ட தேதியில் விடுதலையாகவும், அதிமுக பொதுச் செயலாளராக மீண்டும் தலைமை ஏற்கவும், தமிழகத்தின் முதலமைச்சராக வர வேண்டியும்,திருச்சியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும், சசிகலா பேரவைத் தலைவருமான ஒத்தக்கடை செந்தில், திருச்சி ரயில்வே சந்திப்பு எதிரில் உள்ளவழிவிடு வேல்முருகன் கோயிலில், நாக்கில் அலகு குத்தி மவுன விரதம் மேற்கொண்டார்.இதனை அறிந்த போலீசார் அவரை கட்டாயப்படுத்தி அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.