Skip to main content

“ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.க.” பிரச்சார கூட்டத்தில் ஓ.பி.எஸ். பேச்சு!

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க. கட்சி வேட்பாளர் ஜோதிமுத்துவை ஆதரித்து திண்டுக்கல் வெள்ளை விநாயகர் கோவில் அருகே தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழுத் தலைவரும், வனத்துறை அமைச்சருமான திண்டுக்கல் சி.சீனிவாசன் தலைமை தாங்கினார். மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் மேயருமான வி.மருதராஜ் வரவேற்று பேசினார். முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன், மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் ஆர்.வி.என்.கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது, “தமிழகத்துக்கு நல்லாட்சி கொடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, அவர் ஆட்சியின்போது தாலிக்கு தங்கம், திருமண உதவித்தொகை என பெண்களுக்காக பல்வேறு நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தினார். 

 

paneerselvam

 

விவசாயத்தில் தமிழகம் தொடர்ந்து 4 ஆண்டுகள் முதலிடத்தில் இருந்துள்ளது. உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் தமிழகத்துக்கு ரூ. 3 லட்சம் கோடி முதலீடு கிடைத்துள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். இதன் மூலம் மக்களின் ஆதரவை அ.தி.மு.க. பெற்றுள்ளது. எனவே மு.க.ஸ்டாலினின் முதலமைச்சர் ஆகும் ஆசை பலிக்காது. தற்போது பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும். அ.தி.மு.க. 1½ கோடி தொண்டர்களை கொண்டது. இங்கு எத்தனை பூகம்பம், புயல் ஏற்பட்டாலும் நம்மையும், நம் தொண்டர்களையும் யாராலும் அசைக்க முடியாது. 


தேர்தல் பிரச்சாரத்தின்போது எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தமிழகத்துக்கு தீ வைத்துவிட்டார்கள் என்று மு.க.ஸ்டாலின் கூறுகிறார். ஆனால் வன்முறை ஆட்சி செய்து மக்கள் மனதில் தீ வைத்தது தி.மு.கதான். மேலும் தமிழகத்தில் மின்தட்டுப்பாடு, சாதி, மத கலவரம் ஆகியவை ஏற்பட காரணமும் தி.மு.கதான். தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்க காரணமாக இருந்தது தி.மு.கதான். அந்த தடையை தகர்த்தெறிந்து தமிழர்களின் உணர்ச்சிக்கு மதிப்பளித்தவர் பிரதமர் மோடி. எனவே மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான ஆட்சியே நீடிக்கும். திண்டுக்கல் தொகுதியில் அவரின் கரத்தை வலுப்படுத்த பா.ம.க. வேட்பாளர் ஜோதிமுத்துவுக்கு மாம்பழ சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்” என்றார்.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.