Skip to main content

தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலை. கைவிட வேண்டும்... -ராமதாஸ் கண்டனம்

Published on 14/09/2020 | Edited on 14/09/2020
ramadoss

 

 

சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் பாடவேளைகளை குறைக்கக்கூடாது என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்புகளுக்கான தமிழ் மொழி பாடவேளைகளின் எண்ணிக்கை வாரத்திற்கு 6 என்ற எண்ணிக்கையிலிருந்து 4 ஆக குறைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் தமிழர்களின் தாய்மொழிக்கு ஒரு நாளைக்கு ஒரு பாடவேளை கூட இல்லாத நிலை ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

 

சென்னைப் பல்கலைக்கழகம் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்ட 2020-21 ஆம் ஆண்டு கல்வியாண்டுக்கான இளநிலை படிப்புகளுக்கான உத்தேசப் பாடத்திட்டத்தில்தான் இந்த தகவல் இடம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் பட்டப்படிப்புக்கான பாடத்திட்டங்களைப் பொறுத்தவரை கலை மற்றும் அறிவியல் பாடங்களுக்கு ஒரு மொழித்தாள், ஓர் ஆங்கிலத் தாள், ஒரு முதன்மைத் தாள், ஒரு விருப்பப் பாடத்தாள் என ஒவ்வொரு பருவத்திற்கும் 4 தாள்கள் இருக்கும். முதல் இரு ஆண்டுகளுக்கான 4 பருவங்களுக்கு மட்டும் இந்த நடைமுறை இருக்கும். மூன்றாவது ஆண்டின் இரு பருவங்களிலும் முதன்மைப் பாடத்தாள்கள் மட்டும்தான் இருக்கும். ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் வீதம் வாரத்துக்கு மொத்தம் 30 பாடவேளைகள் நடத்தப்படும்; அவற்றில் 6 பாடவேளைகள் மொழிப்பாடத்திற்கு, அதாவது தமிழ்ப் பாடத்திற்கு ஒதுக்கப்படும். இதுதான் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் நடைமுறையாகும்.

 

ஆனால், சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள உத்தேசப் பாடத்திட்டத்தில் தமிழ் மொழிக்கான பாடவேளைகள் வாரத்திற்கு ஆறிலிருந்து நான்காக குறைக்கப்பட்டிருக்கின்றன. அதற்கான காரணம்  எதுவும் அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்படவில்லை. எனினும், பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களிடம்  விசாரித்த போது, உயர்கல்வித்துறை செயலாளரின் யோசனைப்படி இந்த மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக   தெரிய வருகிறது. ஆங்கிலப் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி மிகவும் குறைவாக இருப்பதாலும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்காணல்களில் பங்கேற்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேச முடியாமல்  தடுமாறுவதாலும் மாணவர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்துவதற்காக நான்கு பாடவேளைகள் ஒதுக்கப்பட இருப்பதாகவும், அதற்காகத்தான் தமிழுக்கான பாடவேளைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும்  கூறப்படுகிறது. தமிழ் பாடவேளை குறைக்கப்படுவதற்கு இதுதான் காரணமெனில் அதை ஏற்க முடியாது.

 

மாணவர்களின் ஆங்கில மொழித்திறன் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அனைத்துப் பாடங்களும் தமிழ் வழியில் நடத்தப்பட வேண்டும்; அதே நேரத்தில், ஆங்கிலேயர்களுக்கு இணையாக நமது மாணவர்கள் ஆங்கிலத்தில் பேசும் அளவுக்கு மொழித்திறனை  வளர்க்க வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை ஆகும். வேலைவாய்ப்புக்கான நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடலில் மாணவர்கள் ஆங்கிலம் தெரியாமல் தடுமாறுவது உண்மை தான். அந்த நிலையை மாற்றுவதற்காக மொழித்திறன் மேம்படுத்தப்பட வேண்டியது கட்டாயம் ஆகும்.

 

ஆனால், அதற்கான தமிழ்ப் பாடவேளைகளை தியாகம் செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. முதலாம் வகுப்பிலிருந்து தமிழ்ப்பாடம் கற்பிக்கப்படுகிறது என்றாலும் கூட, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் தான் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதைகள், புதினங்கள் போன்றவை பாடத்திட்டங்களாக வைக்கப்பட்டுள்ளன. அவை மாணவர்களிடம் சமூகப் பொறுப்பை ஏற்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தமிழ் இலக்கியங்கள் மாணவர்களை நல்வழிப்படுத்தவும், பல்வேறு வகையான அறங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன. இவற்றுக்கெல்லாம் மேலாக கல்லூரி பருவத்தில் மாணவர்களுக்கு ஏற்படும் கல்வி சார்ந்த, சமூகம் சார்ந்த, எதிர்காலம் சார்ந்த பதற்றம் மற்றும் மன உளைச்சல்களைப் போக்குவதற்கான அருமருந்தாக திகழ்பவை தமிழ் இலக்கியங்கள் தான். அதனால்தான்  எனது முகநூல் பக்கத்தில் சிலப்பதிகாரத்தை உரையுடன் பதிவிட்டு வருகிறேன். பல்கலைக்கழகங்களிலும், கல்லூரிகளில் கற்பிக்கப்படும் தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டும் பார்க்கக்கூடாது; அது ஒரு வாழ்க்கை பாடம். அதனால் தமிழ்ப்பாடவேளை குறைப்பை அனுமதிக்கவே முடியாது.

 

ஆங்கில மொழித்திறனை அதிகரிப்பதற்கான முயற்சியை பா.ம.க. ஆதரிக்கிறது. அதற்காக தினமும்  ஒரு பாடவேளையை கூடுதலாக ஏற்படுத்திக் கொள்ளலாம்.  தேவைப்பட்டால் விடுமுறை நாட்களிலும்  கூட சிறப்பு வகுப்புகளை நடத்த எந்த தடையும் இல்லை. இப்போது ஒரு நாளைக்கு 5 பாடவேளைகள் மட்டுமே நடத்தப்படுகின்றன. அதுமட்டுமின்றி நடப்பு கல்வியாண்டு முதல் கல்லூரிகள் ஒருவேளை மட்டும்தான் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தினமும் ஒரு பாடவேளையை அதிகரிப்பதில் எந்த சிக்கலும் இல்லை. அவ்வாறு செய்வதன் மூலம் ஆங்கில மொழித்திறன் மேம்பாட்டுக்கு வாரத்திற்கு 6 பாடவேளைகள் கிடைக்கும். எனவே, அதை செயல்படுத்துவதன் மூலம் தமிழ் பாடவேளைகளை குறைக்கும் முடிவை சென்னைப் பல்கலை. கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.