Skip to main content

121 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையைக் காட்டுவோம்! - ராமதாஸ் 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

121 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, ''என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேட்புமனுத் தாக்கல்  தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளன. மனுத்தாக்கல் முடிவடைந்து, பரிசீலிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும். அதற்குப்  பிறகு தான் தேர்தல் பரப்புரை தீவிரமடையத் தொடங்கும். இவையெல்லாம் சாதாரணமான நாட்களில், சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விஷயங்கள் ஆகும்.

 

ஆனால், நமக்கு இது சாதாரண காலமும் அல்ல... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...!

 

நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரமும், கடமையும் இப்போது நமக்கு வந்திருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற இன்றே நாம் தயாராவோம்.

 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகிறோம். பத்தாண்டுகள் தொடர் போராட்டம்,  ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 உயிர்களை இழந்த தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாகப் பிரிக்க வேண்டும்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், எனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கலைஞர், வன்னியர்களுடன் 107 சாதிகளைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற பிரிவை உருவாக்கி அதற்கு 20% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கி பெருந்துரோகம் செய்தார். அந்த துரோகத்தால் வன்னியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 20% பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குப் பதிலாக, 5 விழுக்காட்டுக்கும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைத்தது. வன்னியர்கள் ஏமாற்றப்பட்டனர்.

 

அப்போது இழைக்கப்பட்ட துரோகத்தை தகர்த்து வன்னியர்களுக்கு உண்மையான சமூகநீதி கிடைக்க நாம் கடந்த 32 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நமது போராட்டத்திற்கு இப்போது தான் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணையாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தான் அந்த முதற்கட்ட வெற்றி ஆகும். இது அரசு ஆவணங்களில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கான அரசாணை அல்ல.

 

மாறாக, வன்னியர்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாக மாற்றப்போகும் அரசாணை ஆகும். கடந்த பல நூற்றாண்டுகளாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த வன்னிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் ஆவணம் இதுவாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளாக இருந்தாலும், தமிழக அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 3 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதனால் தான் எம்.பி.சி என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டு, 32 ஆண்டுகள் ஆனாலும் கூட, வன்னியர்களால் வாழ்க்கைத் தரத்தில் உயர முடியவில்லை. இந்த நிலையிலிருந்து வன்னியர்களை மீட்டு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியாதா? என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் 10.50% இடப்பங்கீடு என்ற அருமருந்து கிடைத்திருக்கிறது.

 

இதன் மூலம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் கிடைக்கும். மருத்துவப் படிப்பில் 5,000 இடங்கள் இருந்தால், அதில் 525 இடங்கள் வன்னியர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், வன்னியர்கள் 2,100 பேருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் வன்னிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பார்கள்; அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்வார்கள். அதன்பயனாக அவர்களின் குடும்பங்கள் முன்னேறும். படிப்படியாக வன்னியர்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். அவர்களும் உள்ளடக்கிய சமூகத்தின் அங்கமாக மாறுவார்கள்.

 

வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும் கூட, அந்த இட ஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50% இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அதிமுகவுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

 

சென்னையில் தொடங்கி வட தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், காவிரிப் பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் எனத் தமிழ்நாட்டில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் தான். எனவே, ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, ‘‘வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால் அவர்கள் வென்றார்கள்’’ என்று கூறும் அளவுக்கு இந்தத் தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் பணி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தொடங்கலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றெடுத்துத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும்.

 

வீடு வீடாக, கிராமம் கிராமமாக, ஒன்றியம் ஒன்றியமாக, தொகுதி தொகுதியாகச் சென்று 10.50% இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்று முதலே பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக இட ஒதுக்கீடு அளித்தது குறித்தும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 10.50% இடப் பங்கீட்டை ஒழித்துக் கட்ட திமுகவும், அதன் தலைமை குடும்பத்தினரும் சதி செய்வது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமைதியான முறையில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்தி, அதன் மூலமாகவும் பரப்புரை செய்யலாம்.

 

cnc

 

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களையும் பாட்டாளிகள் சந்திக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும், அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மற்ற சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் போராடவிருக்கிறார் என்ற தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

 

கும்மிடிப்பூண்டி தொடங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து 234 தொகுதிகளிலும் அதிமுக அணியே  வெற்றி பெற வேண்டும். அந்த தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். நமது கோட்டையாகத் திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டி இடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப் படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளைத் தொடங்கலாம். அதைப்பற்றியெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்று முதலே களத்தில் இறங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள்!'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.