Skip to main content

121 தொகுதிகளிலும் வெற்றி பெற்று வலிமையைக் காட்டுவோம்! - ராமதாஸ் 

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

dddd

 

121 தொகுதிகளிலும் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதி செய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கட்சியினருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 

அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது, ''என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே!

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. வேட்புமனுத் தாக்கல்  தொடங்க இன்னும் 10 நாட்கள் உள்ளன. மனுத்தாக்கல் முடிவடைந்து, பரிசீலிக்கப்பட்ட மனுக்களைத் திரும்பப் பெற்று, இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படுவதற்கு இன்னும் 20 நாட்கள் ஆகும். அதற்குப்  பிறகு தான் தேர்தல் பரப்புரை தீவிரமடையத் தொடங்கும். இவையெல்லாம் சாதாரணமான நாட்களில், சராசரியான அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே பொருந்தக்கூடிய விஷயங்கள் ஆகும்.

 

ஆனால், நமக்கு இது சாதாரண காலமும் அல்ல... நாம் சராசரியான அரசியல் கட்சியும் அல்ல...!

 

நம்மை நம்பியவர்களுக்கும், நல்லவை செய்தவர்களுக்கும் நன்றிக்கடன் செலுத்துவதில் நம்மை விஞ்ச இந்த உலகத்தில் வேறு எவரும் இல்லை. அவ்வாறு நன்றிக்கடன் செலுத்துவதற்கான நேரமும், கடமையும் இப்போது நமக்கு வந்திருக்கிறது. அந்தக் கடமையை நிறைவேற்ற இன்றே நாம் தயாராவோம்.

 

தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குத் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரி 40 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் போராடி வருகிறோம். பத்தாண்டுகள் தொடர் போராட்டம்,  ஒருவார கால தொடர் சாலைமறியல் போராட்டத்தில் 21 உயிர்களை இழந்த தியாகம் ஆகியவற்றுக்குப் பிறகு 1989-ஆம் ஆண்டில் அப்போதைய முதலமைச்சர் கலைஞர், என்னை அழைத்து வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து பேச்சு நடத்தினார். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 50% இட ஒதுக்கீட்டை 6 தொகுப்புகளாகப் பிரிக்க வேண்டும்; அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை வன்னியர்களுக்கு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால், எனது கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளித்த கலைஞர், வன்னியர்களுடன் 107 சாதிகளைச் சேர்த்து மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பு என்ற பிரிவை உருவாக்கி அதற்கு 20% மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கி பெருந்துரோகம் செய்தார். அந்த துரோகத்தால் வன்னியர்களுக்கு கல்வி & வேலைவாய்ப்பில் 20% பிரதிநிதித்துவம் கிடைப்பதற்குப் பதிலாக, 5 விழுக்காட்டுக்கும் குறைவான பிரதிநிதித்துவமே கிடைத்தது. வன்னியர்கள் ஏமாற்றப்பட்டனர்.

 

அப்போது இழைக்கப்பட்ட துரோகத்தை தகர்த்து வன்னியர்களுக்கு உண்மையான சமூகநீதி கிடைக்க நாம் கடந்த 32 ஆண்டுகளாகப் போராடி வருகிறோம். நமது போராட்டத்திற்கு இப்போது தான் முதற்கட்ட வெற்றி கிடைத்திருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் வன்னியர்களுக்கு 10.50% உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, தமிழக ஆளுனரின் ஒப்புதல் பெறப்பட்டு, அரசாணையாக தமிழக அரசிதழில் வெளியிடப்பட்டிருப்பது தான் அந்த முதற்கட்ட வெற்றி ஆகும். இது அரசு ஆவணங்களில் மட்டும் வைத்துப் பாதுகாப்பதற்கான அரசாணை அல்ல.

 

மாறாக, வன்னியர்களின் வாழ்க்கை நிலையைத் தலைகீழாக மாற்றப்போகும் அரசாணை ஆகும். கடந்த பல நூற்றாண்டுகளாகக் கல்வியும், வேலைவாய்ப்பும் கிடைக்காமல் சமூகத்தின் அடித்தட்டில் கிடந்த வன்னிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தப் போகும் ஆவணம் இதுவாகும். மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளாக இருந்தாலும், தமிழக அரசு மற்றும் பொதுத்துறை வேலைவாய்ப்புகளாக இருந்தாலும் வன்னியர்களின் பிரதிநிதித்துவம் 3 விழுக்காட்டைக் கூட தாண்டவில்லை. அதனால் தான் எம்.பி.சி என்ற புதிய இட ஒதுக்கீட்டுப் பிரிவு உருவாக்கப்பட்டு, 32 ஆண்டுகள் ஆனாலும் கூட, வன்னியர்களால் வாழ்க்கைத் தரத்தில் உயர முடியவில்லை. இந்த நிலையிலிருந்து வன்னியர்களை மீட்டு, கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் மேம்பட்ட நிலைக்குக் கொண்டு வந்துவிட முடியாதா? என ஏங்கிக் கொண்டிருந்த நிலையில் தான் 10.50% இடப்பங்கீடு என்ற அருமருந்து கிடைத்திருக்கிறது.

 

இதன் மூலம் கல்வியிலும், வேலைவாய்ப்பிலும் வன்னியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட பிரதிநிதித்துவம் கிடைக்கும். மருத்துவப் படிப்பில் 5,000 இடங்கள் இருந்தால், அதில் 525 இடங்கள் வன்னியர்களுக்கு நிச்சயமாகக் கிடைக்கும். ஆண்டுக்கு 20 ஆயிரம் பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டால், வன்னியர்கள் 2,100 பேருக்கு அரசு வேலை கண்டிப்பாக கிடைக்கும். இதன் மூலம் அடுத்த சில ஆண்டுகளில் வன்னிய மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் படிப்பார்கள்; அதிக எண்ணிக்கையில் வேலைக்குச் செல்வார்கள். அதன்பயனாக அவர்களின் குடும்பங்கள் முன்னேறும். படிப்படியாக வன்னியர்களின் வாழ்க்கைத் தரம் நிச்சயமாக உயரும். அவர்களும் உள்ளடக்கிய சமூகத்தின் அங்கமாக மாறுவார்கள்.

 

வன்னியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்காகக் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நான் போராடி வருகிறேன் என்றாலும் கூட, அந்த இட ஒதுக்கீட்டை இப்போது வழங்கியது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு தான். நமது சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கு 10.50% இடப்பங்கீட்டின் மூலம் அடித்தளம் அமைத்துள்ள அதிமுகவுக்கு நாம் என்ன நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்? என்பது தான் நம் முன் உள்ள வினா ஆகும். அதிமுகவை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவது தான் அந்தக் கட்சிக்கு பாட்டாளி சொந்தங்கள் செலுத்தும் நன்றிக்கடனாக இருக்கும்.

 

சென்னையில் தொடங்கி வட தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், மேற்கு தமிழகத்தின் அனைத்துத் தொகுதிகள், காவிரிப் பாசன மாவட்டங்களின் பெரும்பான்மையான தொகுதிகள் எனத் தமிழ்நாட்டில் 121 தொகுதிகளில் வெற்றியைத் தீர்மானிக்கும் இடத்தில் இருப்பவர்கள் பாட்டாளிகள் தான். எனவே, ஏற்கனவே நான் குறிப்பிட்டவாறு, ‘‘வன்னியர்களுக்கு 10.50% இட ஒதுக்கீடு வழங்கினார்கள். அதனால் அவர்கள் வென்றார்கள்’’ என்று கூறும் அளவுக்கு இந்தத் தேர்தலில் பாட்டாளி சொந்தங்கள் களப்பணி ஆற்ற வேண்டும். மற்ற கட்சிகளுக்கு வேண்டுமானால் தேர்தல் பணி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான பிறகு தொடங்கலாம். ஆனால், நம்மைப் பொறுத்தவரை நாம் வலிமையாக உள்ள 121 சட்டப்பேரவைத் தொகுதிகளையும் வென்றெடுத்துத் தர வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு உள்ளது. அதனால் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பரப்புரையை நாம் இன்றே தொடங்க வேண்டும்.

 

வீடு வீடாக, கிராமம் கிராமமாக, ஒன்றியம் ஒன்றியமாக, தொகுதி தொகுதியாகச் சென்று 10.50% இட ஒதுக்கீடு வழங்கிய அதிமுக அரசுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று இன்று முதலே பாட்டாளி மக்கள் கட்சியினர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். கடுமையான நெருக்கடிகளுக்கு இடையிலும் அதிமுக இட ஒதுக்கீடு அளித்தது குறித்தும், அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து 10.50% இடப் பங்கீட்டை ஒழித்துக் கட்ட திமுகவும், அதன் தலைமை குடும்பத்தினரும் சதி செய்வது குறித்தும் மக்களிடம் எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அமைதியான முறையில் இரு சக்கர ஊர்தி பேரணி நடத்தி, அதன் மூலமாகவும் பரப்புரை செய்யலாம்.

 

cnc

 

சகோதர சமுதாயங்களைச் சேர்ந்தவர்களையும் பாட்டாளிகள் சந்திக்க வேண்டும். அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி கிடைக்க வேண்டும் என்பது தான் பாமகவின் கொள்கை என்றும், அதன்படி, சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு மற்ற சமுதாயங்களின் இட ஒதுக்கீட்டுக்காகவும் மருத்துவர் அய்யா அவர்கள் போராடவிருக்கிறார் என்ற தகவலையும் அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

 

கும்மிடிப்பூண்டி தொடங்கி, கன்னியாகுமரி வரை அனைத்து 234 தொகுதிகளிலும் அதிமுக அணியே  வெற்றி பெற வேண்டும். அந்த தொகுதிகளில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியினர் தங்களின் பங்களிப்பைச் செலுத்த வேண்டும். நமது கோட்டையாகத் திகழும் 121 தொகுதிகளில் நமது முயற்சியால், உழைப்பால், பங்களிப்பால் அதிமுக தலைமையிலான கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற வேண்டும். இந்த 121 தொகுதிகளிலும் அதிமுக சார்பில் எந்தக் கட்சி வேண்டுமானாலும் போட்டி இடலாம்; யார் வேண்டுமானாலும் வேட்பாளராக களமிறக்கப் படலாம்; அவர் எப்போது வேண்டுமானாலும் தேர்தல் பணிகளைத் தொடங்கலாம். அதைப்பற்றியெல்லாம் பாட்டாளி மக்கள் கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை. அவர்கள் இன்று முதலே களத்தில் இறங்கி அதிமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்காக உழைக்க வேண்டும்; வெற்றியை உறுதிசெய்ய வேண்டும். இன்றே களமிறங்குங்கள்!'' எனக் கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.