Advertisment

சமூகநீதியை படுகொலை செய்யும் தமிழக அரசு! -டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

ddd

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 69 சதவீதத்திற்கு கூடுதலாக இருக்கக் கூடாது ; 100 சதவீதத்தையும் அவர்களே அனுபவிக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்? என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிராக எடப்பாடி அரசுக்காக ஆஜரான வழக்கறிஞர் அரிமாசுந்தரம் வைத்துள்ள இத்தகைய வாதம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Advertisment

இது குறித்து கடுமையாக அறிக்கை வாசித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘’ தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெளியிடப்பட்டன. வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த செயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது. இந்த அநீதியை பலமுறை கண்டித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை சரி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

Advertisment

இந்த அநீதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. மேல்முறையீட்டிலும் அது உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர் வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தான் சமூகநீதிக்கு எதிராக மிக மோசமாக வாதிட்டார்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பொதுப்பிரிவிலும், அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு எம்.பி.சி பிரிவிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களே 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களைப் பெறுவர். இதை அனுமதிக்க முடியாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள சாதிகளுக்கான பிரதிநிதித்துவம் 69 விழுக்காட்டுக்குள் தான் வழங்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இட ஒதுக்கீடு வழங்கும் போது, தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதையும் கடந்து 100% இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நினைப்பது எந்த வகையில் நியாயம்? என தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமான வாதம். இதை விட மோசமாக சமூகநீதியை படுகொலை செய்ய முடியாது.

மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரத்தின் வாதங்களைப் பார்க்கும் போது, செண்பகம் துரைராஜன் வழக்கில் கம்யூனல் ஜி. அடிப்படையிலான 100% இடப்பங்கீட்டுக்கு எதிராக வாதிட்ட மறைந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி தான் மீண்டும் உயிர்பெற்று வந்து வாதிட்டாரோ? என்று நினைக்கத் தோன்றியது.

கல்வி - வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை கைதூக்கி விடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறையாகும். இது சலுகை அல்ல... உரிமை. இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர், தங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மட்டுமின்றி, பொதுப்போட்டி பிரிவிலும் போட்டியிட முடியும். அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு என்பது போராடி பெறப்பட்ட உரிமை ஆகும். 69% இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா தலைமையிலான அரசு தான் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து பாதுகாப்பு அளித்தது.

ஆனால், இவற்றை எல்லாம் மறைத்து விட்டு, 69% இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு போடப்பட்ட யாசகம் போன்றும், அந்த எல்லைக் கோட்டைக் கடந்து பொதுப்போட்டிக்கான 31% இட ஒதுக்கீட்டிற்குள் நுழையக்கூடாது என்பது போன்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரான அவரின் வயிற்றெரிச்சலையே காட்டுகிறது.

பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் திறமையுள்ள அனைவருக்கும் பொதுவானது. தகுதியும், திறமையும் இருந்தால் ஒரே கல்லூரியில் படித்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட அந்த இடங்களைப் பிடிக்கலாம். அவர்கள் உயர்சாதியினராகவும் இருக்கலாம். இது தான் பொதுப்போட்டி என்பதற்கான வரையறை ஆகும். அந்த இடங்களை திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கைப்பற்றும் போது, அந்த இடங்களுக்கு அவர்கள் ஆசைப்படக் கூடாது; அதை அனுமதிக்கக் கூடாது என்று அரசு வழக்கறிஞர் கொக்கரிப்பது ஏன்?

இந்த வாதங்களையெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், வழக்கு தொடர்ந்தவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதிட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், தமிழக அரசின் சார்பில் வாதிட்டிருப்பது தான் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று தான் இப்படி ஒரு வாதத்தை வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முன்வைத்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைப்பதற்காக கடந்த 10 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களும், அரசியல் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதியும், பின்னர் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் தீர்ப்பளித்த நிலையில், அதை ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கக் கூடாது. இதை கடந்த மே மாதம் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தி இருந்தேன்.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல், சமூகநீதிக்கு எதிரானவர்களின் வழிகாட்டுதலால் உச்சநீதிமன்றம் வரை சென்று சமூகநீதியை சிதைக்கத் துடிக்கிறது. அதன் உச்சக்கட்டமாக வாரியத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பொதுப்போட்டிக்குள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நுழையக் கூடாது; அது உயர்வகுப்பினருக்கு மட்டுமே உரியது என்று வாதிட்டிருக்கிறார். அரசின் ஒப்புதலின்றி இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகளையும், அதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் சமூக நீதிக்கு எதிரான வழக்கறிஞர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து விட்டு, அந்த இடங்களில் சமூகநீதிக்கு ஆதரவானவர்களை நியமிக்க வேண்டும். சமூகநீதியில் அக்கறை கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை செய்து, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்துவார் என்று நம்புகிறேன் ‘’ என்கிறார் டாக்டர் ராமதாஸ்.

pmk Ramadoss tn govt
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe