Skip to main content

சமூகநீதியை படுகொலை செய்யும் தமிழக அரசு! -டாக்டர் ராமதாஸ் குற்றச்சாட்டு!

Published on 04/12/2020 | Edited on 04/12/2020

 

                        

ddd

 

தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கான பிரதிநிதித்துவம் 69 சதவீதத்திற்கு  கூடுதலாக இருக்கக் கூடாது ; 100 சதவீதத்தையும் அவர்களே அனுபவிக்க வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்? என்று உச்சநீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசின் சார்பில் வாதிடப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிராக எடப்பாடி அரசுக்காக ஆஜரான வழக்கறிஞர் அரிமாசுந்தரம் வைத்துள்ள இத்தகைய வாதம்  அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

 

இது குறித்து கடுமையாக அறிக்கை வாசித்துள்ள பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ‘’ தமிழக அரசு பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான போட்டித் தேர்வுகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டு, அவற்றின் முடிவுகள் நவம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் வெளியிடப்பட்டன. வேதியியல் ஆசிரியர்கள் நியமனத்தில் அதிக மதிப்பெண் பெற்று பொதுப்பிரிவில் நியமிக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பின்னடைவு பணியிடங்களில் நியமனம் செய்யப்பட்டனர். அதனால், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட வேண்டிய மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. சமூகநீதிக்கு எதிரான இந்த செயலால் வேதியியல் பாட ஆசிரியர்கள் நியமனத்தில் மட்டும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 34 பேருக்கு ஆசிரியர் பணி மறுக்கப்பட்டது. இந்த அநீதியை பலமுறை கண்டித்த பாட்டாளி மக்கள் கட்சி, அதை சரி செய்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகிறது.

 

இந்த அநீதியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பின்னடைவுப் பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எம்.பி.சி மாணவர்களை, பொதுப்பிரிவுக்கு மாற்றிவிட்டு, பின்னடைவுப் பணியிடங்களில் தர வரிசையில் அடுத்த நிலையிலுள்ள எம்.பி.சி. மாணவர்களை நியமிக்க ஆணையிட்டது. மேல்முறையீட்டிலும் அது உறுதி செய்யப்பட்டது. அதை எதிர்த்து ஆசிரியர் வாரியம்  தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நீதியரசர் சஞ்சய் கிஷன் கவுல் தலைமையிலான அமர்வின் முன் நேற்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் தான் சமூகநீதிக்கு எதிராக மிக மோசமாக வாதிட்டார்.

 

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பொதுப்பிரிவிலும், அடுத்த நிலையில் உள்ளவர்களுக்கு எம்.பி.சி பிரிவிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டால் அவர்களே 50 விழுக்காட்டுக்கும் கூடுதலான இடங்களைப் பெறுவர். இதை அனுமதிக்க முடியாது. இட ஒதுக்கீட்டுப் பிரிவுகளில் உள்ள சாதிகளுக்கான பிரதிநிதித்துவம் 69 விழுக்காட்டுக்குள் தான் வழங்கப்பட வேண்டும். மற்ற மாநிலங்களில் 50 விழுக்காட்டுக்கும் குறைவாக இட ஒதுக்கீடு வழங்கும் போது, தமிழ்நாட்டில் அதை விட அதிகமாக 69% இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதையும் கடந்து 100% இடங்களையும் கைப்பற்ற வேண்டும் என்று இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நினைப்பது எந்த வகையில் நியாயம்? என தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதிட்ட வழக்கறிஞர் அரிமா சுந்தரம் கூறியிருக்கிறார். இது மிகவும் அபத்தமான வாதம். இதை விட மோசமாக சமூகநீதியை படுகொலை செய்ய முடியாது.

 

மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரத்தின் வாதங்களைப் பார்க்கும் போது, செண்பகம் துரைராஜன் வழக்கில் கம்யூனல் ஜி. அடிப்படையிலான 100% இடப்பங்கீட்டுக்கு எதிராக வாதிட்ட மறைந்த அல்லாடி கிருஷ்ணமூர்த்தி தான் மீண்டும் உயிர்பெற்று வந்து வாதிட்டாரோ? என்று நினைக்கத் தோன்றியது.

 

கல்வி - வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு என்பது காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த மக்களை கைதூக்கி விடுவதற்காக ஏற்படுத்தப்பட்ட வழிமுறையாகும். இது சலுகை அல்ல... உரிமை. இட ஒதுக்கீடு பெறும் பிரிவினர், தங்களுக்கான இட ஒதுக்கீட்டுப் பிரிவில் மட்டுமின்றி, பொதுப்போட்டி பிரிவிலும் போட்டியிட முடியும். அதற்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாட்டில் 69% இட ஒதுக்கீடு என்பது போராடி பெறப்பட்ட உரிமை ஆகும். 69% இட ஒதுக்கீட்டை ஜெயலலிதா தலைமையிலான அரசு தான் 9-ஆவது அட்டவணையில் சேர்த்து பாதுகாப்பு அளித்தது.

 

ஆனால், இவற்றை எல்லாம் மறைத்து விட்டு, 69% இட ஒதுக்கீடு என்பது பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியினருக்கு போடப்பட்ட யாசகம் போன்றும், அந்த எல்லைக் கோட்டைக் கடந்து பொதுப்போட்டிக்கான 31% இட ஒதுக்கீட்டிற்குள் நுழையக்கூடாது என்பது போன்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டிருப்பது சமூகநீதிக்கு எதிரான அவரின் வயிற்றெரிச்சலையே காட்டுகிறது

 

பொதுப்போட்டிப் பிரிவுக்கான 31% இடங்கள் திறமையுள்ள அனைவருக்கும் பொதுவானது. தகுதியும், திறமையும் இருந்தால் ஒரே கல்லூரியில் படித்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்தவர்கள் கூட அந்த இடங்களைப் பிடிக்கலாம். அவர்கள் உயர்சாதியினராகவும் இருக்கலாம். இது தான் பொதுப்போட்டி என்பதற்கான வரையறை ஆகும். அந்த இடங்களை திறமை மற்றும் தகுதியின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் கைப்பற்றும் போது, அந்த இடங்களுக்கு அவர்கள் ஆசைப்படக் கூடாது; அதை அனுமதிக்கக் கூடாது என்று அரசு வழக்கறிஞர் கொக்கரிப்பது ஏன்?                    

 

இந்த வாதங்களையெல்லாம் இட ஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், வழக்கு தொடர்ந்தவரின் சார்பில் மூத்த வழக்கறிஞர் வாதிட்டிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால், தமிழக அரசின் சார்பில் வாதிட்டிருப்பது தான் மிகவும் வேதனை அளிக்கிறது. தமிழக அரசின் ஒப்புதலைப் பெற்று தான் இப்படி ஒரு வாதத்தை  வழக்கறிஞர் அரிமா சுந்தரம் முன்வைத்தாரா? என்பது குறித்து தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும்.

 

ஆசிரியர்கள் நியமனத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இழைக்கப்பட்ட அநீதியைத் துடைப்பதற்காக கடந்த 10 மாதங்களாக பல்வேறு சட்டப் போராட்டங்களும், அரசியல் போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. ஆசிரியர்கள் நியமனத்தில் சமூகநீதியை நிலைநிறுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதியும், பின்னர் தலைமை நீதிபதி தலைமையிலான இரு நீதிபதிகள் கொண்ட அமர்வும் தீர்ப்பளித்த நிலையில், அதை ஆசிரியர் தேர்வு வாரியம் நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும்; உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருக்கக் கூடாது. இதை கடந்த மே மாதம் 21-ஆம் தேதி வெளியிட்ட அறிக்கையில் நான் வலியுறுத்தி இருந்தேன்.

 

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புகளை மதிக்காமல், சமூகநீதிக்கு எதிரானவர்களின் வழிகாட்டுதலால் உச்சநீதிமன்றம் வரை சென்று சமூகநீதியை சிதைக்கத் துடிக்கிறது. அதன் உச்சக்கட்டமாக வாரியத்தின் சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் பொதுப்போட்டிக்குள் இட ஒதுக்கீட்டுப் பிரிவினர் நுழையக் கூடாது; அது உயர்வகுப்பினருக்கு மட்டுமே உரியது என்று வாதிட்டிருக்கிறார். அரசின் ஒப்புதலின்றி இந்த வாதம் முன்வைக்கப்பட்டிருந்தால் அதற்கு காரணமானவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆசிரியர் தேர்வு வாரியத்தில் உள்ள சமூகநீதிக்கு எதிரான அதிகாரிகளையும், அதன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடும் சமூக நீதிக்கு எதிரான வழக்கறிஞர்களையும் கூண்டோடு இடமாற்றம் செய்து விட்டு, அந்த இடங்களில் சமூகநீதிக்கு ஆதரவானவர்களை நியமிக்க வேண்டும். சமூகநீதியில் அக்கறை கொண்ட பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் இதை செய்துகல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முழுமையான சமூகநீதியை நிலைநிறுத்துவார் என்று நம்புகிறேன் ‘’ என்கிறார் டாக்டர் ராமதாஸ்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.