Skip to main content

7 தமிழர் விடுதலை: அரசியலமைப்பு சட்ட நம்பிக்கையை ஆளுநர் காக்க வேண்டும்! ராமதாஸ் அறிக்கை

Published on 23/07/2020 | Edited on 23/07/2020
ramadoss

 

7 தமிழர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள் அவர்கள் விடுதலைக் காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன்மூலம் ஆளுநர் பதவி மீது, அரசியல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஜிவ் கொலை வழக்கில் தண்டனைக் காலத்தை கடந்தும் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களின் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் ஆளுநர் மாளிகை தேவையற்ற தாமதம் செய்வது குறித்து உயர்நீதிமன்றம் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகள் மிகவும் முக்கியமானவை. ஆளுநர் விரைந்து முடிவெடுக்காவிட்டால் உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுக்குமென நீதிபதிகள் விடுத்துள்ள மெல்லிய எச்சரிக்கையை, ஆளுநர் மாளிகை கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

7 தமிழர்களில் ஒருவரான பேரறிவாளனுக்கு பரோல் வழங்க ஆணையிடக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற அமர்வு, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி சுமார் 2 ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில், இன்னும் அதன் மீது ஆளுநர் முடிவெடுக்காதது குறித்து  கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது.

 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி செய்யப்படும் பரிந்துரைகளில் ஆளுநர் முடிவெடுக்க காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்ட நீதிபதிகள், ‘‘காலவரையறை நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், அரசியலமைப்பு சட்டப்படியான உயர்பதவிகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாகவே காலவரையறை செய்யப்படவில்லை. இந்த விஷயத்தில் ஆளுநர் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால், உயர்நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுக்கும்’’ என்று எச்சரிக்கை விடுத்தனர்.

 

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் இந்த எச்சரிக்கையை எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கவில்லை; வாய்மொழியாகத் தான் கூறினார்கள் என்றாலும் கூட, அதை சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுக்க காலவரையறை எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்பதையே  மீண்டும், மீண்டும் கூறி காலம் கடத்த தமிழக ஆளுநர் முயன்றால் அதை சென்னை உயர்நீதிமன்றம் அனுமதிக்காது என்பதுதான் தங்களின் கருத்துகள் மூலம் நீதிபதிகள் தெரிவித்துள்ள செய்தியாகும்.

 

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு; அதுகுறித்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்கீழ் தமிழக அரசு நடவடிக்கை  எடுக்கலாம் என்று 2018 செப்டம்பர் 6-ஆம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதனடிப்படையில் செப்டம்பர் 9-ஆம் தேதி கூடிய தமிழக அமைச்சரவை, 7 தமிழர்களை விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானத்தை நிறைவேற்றி, அன்றே ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. ஆனால், அதன்பின் இன்றுடன் 682 நாட்களாகிவிட்ட நிலையில், 7 தமிழர் விடுதலை குறித்து இதுவரை ஆளுனர் முடிவெடுக்கவில்லை.

 

7 தமிழர்கள் விடுதலை குறித்த விஷயத்தில் முடிவெடிப்பது ஒன்றும் கடினமான ஒன்றல்ல. அவர்களின் விடுதலைக்கான காரணங்களையும், அவற்றை அனுமதிக்கும் சட்டப்பிரிவுகளையும் ஆளுநருக்கு அனுப்பிய பரிந்துரையில் தமிழக அரசு தெளிவாக தெரிவித்திருக்கிறது. அவற்றை படித்து பார்த்தால், இந்த விஷயத்தில் ஒரு சில மணி நேரங்களில் முடிவெடுத்து விட முடியும். ஆனால், எழுவரும் தமிழர்கள் என்பதாலேயே, அவர்களின் விடுதலையை தாமதப்படுத்துவதற்காகவே, ஆளுநர் இவ்வாறு செய்கிறார். தெரிந்தே இதை செய்துவிட்டு, முடிவெடுக்க காலநிர்ணயம் செய்யப்படவில்லை என்ற காரணத்திற்குள் ஆளுநர் ஒளிந்து கொள்கிறார். அதைத்தான் உயர் நீதிமன்றம் இப்போது அம்பலப்படுத்தியிருக்கிறது.

 

7 தமிழர் விடுதலை விவகாரத்தில் ஆளுநரின் முடிவு நீதிமன்றத்தால் விமர்சிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் கடந்த பிப்ரவரி 12-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, 7 தமிழர் விடுதலை குறித்து முடிவெடுப்பதில் தேவையற்ற காலதாமதம் செய்யப்படுவது குறித்து நீதிபதிகள் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தினார்கள். இது குறித்து விளக்கமளிக்கும்படி  தமிழக அரசுக்கு ஆணையிட்டனர். 7 தமிழர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்காதது ஏன் என ஆளுநரை நோக்கி நேரடியாகவே நீதிபதிகள் வினா எழுப்பியிருக்க முடியும். ஆனால், இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி சில விஷயங்களில் ஆளுநருக்கு உத்தரவிடுவதற்கு நீதிமன்றங்களுக்கு அதிகாரம் இல்லை என்பதால் தான், ஆளுநரிடமிருந்து தாங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விடைகளை, தமிழக அரசிடம் மூலம் கேட்டு அறிய விரும்புவதாக நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

அதுமட்டுமின்றி, அரசியலமைப்பு சட்டத்தின் 161-ஆவது பிரிவின்படி தண்டனை குறைக்கும் பரிந்துரை மீது ஆளுநர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயிக்கப்படவில்லை என்பது உண்மைதான் என்றாலும், அதையே காரணம் காட்டி 7 தமிழர் விடுதலை குறித்த பரிந்துரை மீது காலவரையின்றி முடிவெடுக்காமல் இருக்க முடியாது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அப்போது அழுத்தம் திருத்தமாக தமிழக அரசு வழக்கறிஞரிடம் கூறியுள்ளனர். இப்போது உயர்நீதிமன்றமும் அதையே வலியுறுத்தியுள்ளது. மேலும் தண்டனைக் குறைப்பு பரிந்துரைகள் மீது முடிவெடுப்பதற்கு காலநிர்ணயம் செய்யப்படாதது ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரம் அல்ல; அது உயர்பதவிகள் மீது நம்பிக்கைக் கொண்டு அரசியல் சட்டம் காட்டிய பெருந்தன்மை என்பதையும் உயர்நீதிமன்றம் உணர்த்தியுள்ளது. இதை ஆளுநர் உணர வேண்டும்.

 

7 தமிழர்களும் தண்டனை அனுபவிக்காமல் தங்களை விடுதலை செய்யக்கோரவில்லை. மாறாக, ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட அவர்கள், 30 ஆண்டுகளாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களின் வாழ்க்கையில் பெரும்பகுதியை சிறைகளிலேயே இழந்து விட்ட அவர்களை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது; தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து தீர்மானம் நிறைவேற்றி அனுப்புகிறது. இவ்வளவுக்கு பிறகு இந்த விஷயத்தில் ஆளுநர் முடிவெடுக்க தாமதித்தால், அதன் பின்னணியில் ஆளுநருக்கு ஏதோ செயல்திட்டம் உள்ளது என்றுதான் பொருள் கொள்ள வேண்டியுள்ளது.

 

7 தமிழர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமும், சென்னை உயர்நீதிமன்றமும் வெளிப்படுத்தியுள்ள உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும். இனியும் தாமதிக்காமல் இந்திய விடுதலை நாளுக்குள் அவர்கள் விடுதலை காற்றை சுவாசிக்கும் வகையில் ஆளுநர் விரைந்து முடிவெடுக்க வேண்டும். அதன்மூலம் ஆளுநர் பதவி மீது அரசியல் சட்டம் வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.” இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? - ராமதாஸ்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Ramdoss has questioned when liquor will be abolished in Tamil Nadu

குடிப்பழக்கம் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு சுயமரியாதை குறைவு என ஆய்வில் வெளியாகியுள்ளது; குடியைக் கெடுக்கும் குடிக்கு முடிவு கட்டப்படுவது எப்போது? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான  பெற்றோர்களின் பிள்ளைகள் சுயமரியாதைக் குறைவு, தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர் என்று சென்னை மருத்துவக் கல்லூரியின் சமூக மருத்துவ நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குடிக்கும் பெற்றோரின் பிள்ளைகள் இளம் வயதிலேயே மதுப்பழக்கம் மற்றும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகுதல், தீய செயல்களில் அடிக்கடி ஈடுபடுதல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கும் ஆளாவதாக அந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்த ஆய்வு முடிவுகள் சிறிதும் அதிர்ச்சியோ, ஆச்சரியமோ அளிக்கவில்லை. மாறாக, மதுப்பழக்கத்தின் தீமைகள் குறித்து பல பத்தாண்டுகளாக பாட்டாளி மக்கள் கட்சி கூறி வரும் குற்றச்சாட்டுகளை உறுதி செய்திருக்கிறது.

அனைத்து சமூகக் கேடுகளுக்கும் ஆணிவேர் மதுப்பழக்கம் தான்.  தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களை கொடுமைப் படுத்தும் தந்தை உள்ள வீட்டில், அவர்களின் பிள்ளைகளால் நிம்மதியாக படிக்க முடியாது; சமூகத்தில் தலை நிமிர்ந்து நடக்க முடியாது என்பது நடைமுறையில் நாம் கண்டு வரும் உண்மை ஆகும். தந்தை குடிப்பதைப் பார்க்கும் பிள்ளைகளும் மது எளிதாக கிடைக்கும் போது அந்தப் பழக்கத்திற்கு அடிமையாவது வழக்கம் தான். 

இந்த உண்மைகளைத் தான்  சென்னை மருத்துவக் கல்லூரியின் ஆய்வு உறுதி செய்திருக்கிறது. அதனால் தான் குடி குடியைக் கெடுக்கும், குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற எச்சரிக்கை வாசகங்கள் மதுப்புட்டிகள் மீது எழுதப்பட்டன. மதுவே முற்றிலுமாக ஒழிக்கப்பட  வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டை மாறி மாறி ஆட்சி செய்து வரும் திமுகவும், அதிமுகவும் மதுவின் தீமைகளை கருத்தில் கொள்ளாமல் சட்டப்படியாக அரசுக்கு கிடைக்கும் வருமானத்தையும், சட்டவிரோதமாக தங்களுக்கு கிடைக்கும் லாபத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு  தமிழகத்தின் அனைத்து வீதிகளிலும் மதுவை வெள்ளம் போல ஓட விடுகின்றன.

அதுமட்டுமின்றி, மதுப்புட்டிகளில் மதுவின் தீமைகளை குறிக்கும் வகையிலான, 'குடி, குடியை கெடுக்கும்; குடிப்பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும்; மது நாட்டுக்கு, வீட்டுக்கு, உயிருக்குக் கேடு' என்ற, விழிப்புணர்வு வாசகங்களை நீக்கி விட்டு, 'மது அருந்துதல் உடல் நலத்திற்கு கேடு; பாதுகாப்பாக இருப்பீர். மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டாதீர்' என்ற மென்மையான வாசகங்களை அச்சிட்டது தான் திமுக, அதிமுக அரசின் சாதனைகள் ஆகும்.

எந்த வகையில் பார்த்தாலும் மது மிகப்பெரிய சமூகக் கேடு என்பதில் மாற்றமில்லை.  மது இல்லாத தமிழகத்தில் குடும்பங்கள் மகிழ்ச்சியுடன் வாழ்வார்கள்; குழந்தைகள் சுயமரியாதையுடன் நல்லவர்களாக வளர்வார்கள். எனவே, குடியைக் கெடுக்கும் குடிப்பழக்கத்திற்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளை மூடிவிட்டு முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

'அப்பாவி மக்களை இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது'- ராமதாஸ் கருத்து

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் ஜூன் 6ஆம் தேதி வரை தொடரும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாடு மற்றும் புதுவையில் மக்களவைத் தேர்தல்கள் அமைதியாக நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6 ஆம் நாள் வரை தொடரும் என்று தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லாத நிலையில், அதை தொடர்வது மக்களுக்கு பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதற்காகத் தான் நடத்தை விதிகள் நடைமுறைப்படுத்தப்பட்டன. தமிழ்நாட்டில் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இனி நடத்தை விதிகளுக்கு எந்தத் தேவையும் இல்லை. இந்தியாவின் பிற மாநிலங்களில் இன்னும் தேர்தல்கள் நடத்தப்படவில்லை என்பதற்காக தமிழ்நாட்டில் நடத்தை விதிகளை இன்னும் நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. ஒருவேளை ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் நடத்தப்பட்டிருந்தாலோ அல்லது தமிழ்நாட்டில் கடைசி கட்ட வாக்குப்பதிவு நடத்தப்பட்டிருந்தாலோ வாக்குப்பதிவு முடிந்த சில நாட்களில் வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்பட்டிருக்கும். அத்துடன் தேர்தல் நடத்தை விதிகளும் முடிவுக்கு வந்திருக்கும். தமிழ்நாட்டில் முதல் கட்ட வாக்குப்பதிவு  நடத்தப்பட்டது என்ற ஒரே காரணத்திற்காக மற்ற மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிவடையும் வரை தமிழக அரசும், மக்களும் தேவையற்ற கட்டுப்பாடுகளை சுமந்து கொண்டு வாட வேண்டிய தேவையில்லை.

 'Innocent people can't be allowed to suffer' - Ramadoss opined

மக்களவைத் தேர்தலுக்கான அறிவிக்கை கடந்த மார்ச் 16 ஆம் நாள் வெளியிடப்பட்டது. மக்களவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு ஜூன் 6ஆம் நாள் தான் தேர்தல் நடைமுறைகள் முடிவுக்கு வரும் என்பதால், அதுவரை நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும். அதாவது தேர்தல் நடைமுறை என்ற பெயரில் தமிழ்நாடு அரசு நிர்வாகத்தை 83 நாட்களுக்கு முடக்கி வைப்பதையும், அதே காலத்திற்கு அப்பாவி மக்களை பல்வேறு வகைகளில் இன்னல்களுக்கு ஆளாக்குவதையும் அனுமதிக்க முடியாது.

நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும் போது ஆட்சியாளர்கள் புதிய திட்டங்கள் எதையும் அறிவிக்க முடியாது. மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து அதிகாரிகளுக்கு எந்த வித ஆணைகளையும் பிறப்பிக்க முடியாது; அதிகாரிகளுடன் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஆய்வுக்கூட்டங்களைக் கூட நடத்த இயலாது. கடைநிலை பணியாளர்கள் முதல் தலைமைச் செயலர் வரை அனைத்து நிலை அதிகாரிகளும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் தான் இருப்பார்கள். மொத்தத்தில் அரசு நிர்வாகம் என்பது செயல்பட முடியாத அளவுக்கு மொத்தமாக முடக்கப்பட்டிருக்கும். அதனால், மக்களுக்கான நலத்திட்ட உதவிகளைக் கூட அரசால் செய்ய முடியாத நிலை உருவாகும்.

தேர்தல் நடத்தை விதிகளால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பது வணிகர்கள் தான். சில்லறை வணிகம் செய்யும் வணிகர்கள் அதில் கிடைத்தப் பணத்தை சந்தைக்கு கொண்டு சென்று தான் தங்களுக்குத் தேவையான பொருட்களை வாங்கி வர வேண்டும். அவ்வாறு வணிகர்கள் பணத்தைக் கொண்டு செல்லும் போது, அவர்களை மடக்கி சோதனை நடத்தும் பறக்கும் படையினர் வணிகர்களிடம்  ரூ.50 ஆயிரத்திற்கு மேல் ஒரு ரூபாய் கூடுதலாக இருந்தாலும் கூட மொத்தப் பணத்தையும் பறிமுதல் செய்கின்றனர். அதனால், கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வணிகர்கள் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளானார்கள். அவர்களை மேலும் 45 நாட்களுக்கு பாதிப்புகளுக்கு உள்ளாக்குவது நியாயமற்றதாகும்.

எனவே, தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று முடிந்து விட்ட நிலையில், மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளை உடனடியாக தளர்த்த வேண்டும். மக்களுக்குத் தேவையான நலத் திட்டங்களை செயல்படுத்த  தமிழக அரசையும், வணிகத்திற்கு தேவையான பணத்தை தடையின்றி எடுத்துச் செல்ல வணிகர்களையும் தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.