Skip to main content

பா.ம.க 32-ஆவது ஆண்டு விழா: களப்பணிகள் காத்திருக்கின்றன... தயாராகுங்கள்! கட்சியினருக்கு ராமதாஸ் மடல்!

Published on 13/07/2020 | Edited on 13/07/2020

 

ramadoss

 

பாட்டாளி மக்கள் கட்சியின் 32ஆவது ஆண்டு விழாவையொட்டி கட்சியினருக்கு அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மடல் எழுதியிருக்கிறார்.

 

அதில், என் உயிரினும் மேலான பாட்டாளி சொந்தங்களே...! சென்னை மெரினா கடற்கரையின் சீரணி அரங்கத்தில் மக்கள் கடலின் நடுவே 1989-ஆம் ஆண்டு ஜூலை 16-ஆம் தேதி தொடங்கப்பட்ட சமூக ஜனநாயக இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி, வரும் 16-ஆம் தேதி 31 ஆண்டுகளை நிறைவு செய்து 32-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

தமிழ்நாட்டிலுள்ள எந்த அரசியல் கட்சியை விடவும் துடிப்பான, பொறுப்பான அரசியல் கட்சி என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சி தான். அந்தப் பெருமைக்குக் காரணம், சந்தேகமே இல்லாமல் நீங்கள் தான். பாட்டாளி மக்கள் கட்சியின் இதயமும் நீங்கள் தான்... அதில் ஏற்படும் உயிர்த்துடிப்பும் நீங்கள் தான். இதயம் இல்லாமல் உடலின் இயக்கம் இருக்க முடியாது என்பதைப் போலவே, நீங்கள் இல்லாமல் பாட்டாளி மக்கள் கட்சியும் இல்லை. உங்களால் தான் பாட்டாளி மக்கள் கட்சி துடிப்பாக இயங்குகிறது.

 

ஓர் அமைப்பு தொடங்கப்பட்டால், அது இயங்குகிறதோ.... இல்லையோ, ஆண்டுக்கு ஒரு முறை ஆண்டு விழா வந்தே தீரும். ஆனால், பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாக்கள் எனப்படுபவை  அப்படிப்பட்டவை அல்ல. ஒவ்வொரு ஆண்டு விழாவுமே பாட்டாளி மக்கள் கட்சியின் கடந்த ஓராண்டு கால செயல்பாடுகளை அலசி ஆராய்ந்து, தணிக்கை செய்யும் நிகழ்வாகவே அமைகின்றன. அவ்வாறு தணிக்கை செய்யும் போது ஒவ்வொரு ஆண்டும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலையில் சூட்டப்படும் மக்கள் பணி என்ற கிரீடத்தில், புதிய சாதனைகள் எனப்படும் வைரக்கற்கள் பதிக்கப்படுவது என்பது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. அது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் தொடர்ச்சியான வளர்ச்சியாகும்.

 

கடந்த ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியின் 31-ஆவது ஆண்டு விழாவை, மக்களவைத் தேர்தலில் பொய்களால் விளைந்த தோல்வியின் பின்னணியில் கொண்டாடினோம். தோல்விகளைக் கண்டு துவளாமல் மக்களுக்காக பணியாற்ற வேண்டும் என்று உறுதியேற்றுக் கொண்டோம். அதன்படியே, காவிரி பாசன மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கச் செய்தது, கடலூர், நாகை மாவட்டங்களில் அமைக்கப்படவிருந்த பெட்ரோலிய முதலீட்டு மண்டலத் திட்டத்தைக் கைவிடச் செய்தது, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தும் தமிழக அரசின் முடிவைக் கைவிடச் செய்தது, தேசிய அளவிலான ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வுகள் தமிழில் நடத்தப்படும் என மத்திய அரசை அறிவிக்க வைத்தது, பிரதமருக்கு வேண்டுகோள் விடுத்து தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவக் கல்லூரிகளைப் பெற்றுத் தந்தது, தமிழகத்தில் 4 மாவட்டங்களைப் பிரிக்க வைத்து திருப்பத்தூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, தென்காசி, மயிலாடுதுறை ஆகிய 5 புதிய மாவட்டங்கள் அமைக்கப்படுவதற்கு காரணமாக இருந்தது, பஞ்சமி நில நாடகங்களை அம்பலப்படுத்தியது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் மிக அதிக வாக்குகளில் வெற்றி பெற காரணமாக இருந்தது, கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பெரும்பான்மை இடங்களில் அ.தி.மு.க. - பாட்டாளி மக்கள் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற உதவியது எனக் கடந்த ஓராண்டில் நாம் படைத்த சாதனைகள் பட்டியலிட முடியாதவை.

 

ஓர் அரசியல் கட்சியின் நோக்கம் மக்கள் பிரச்சினைகளுக்காக போராடுவதும், அந்தப் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பதும் தான். அந்த வகையில் பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து மிகச்சிறந்த அரசியல் கட்சியாகச் செயல்பட்டு வருகிறது. அந்த அளவில் நாம் அனைவருமே பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

 

ஆனால், அதுமட்டுமே ஓர் அரசியல் கட்சிக்கு போதுமா? என்றால், நிச்சயமாக இல்லை என்று தான் கூற வேண்டும். அரசியல் கட்சியின் நோக்கம் மக்களுக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், அதன் இலக்கு என்பது ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும். ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் நினைப்பதற்குப் பல்வேறு காரணங்கள் இருக்கலாம்; அவற்றின் உச்சம் பதவி சுகங்களை அனுபவிக்க வேண்டும் என்பதாகவும் இருக்கலாம். எனினும் பா.ம.க.வின் ஆசை அதுவல்ல.

 

உழவர்கள் முதல் மாணவர்கள் வரை, மகளிர் முதல் மருத்துவர்கள் வரை அனைத்துத் தரப்பினரின் கோரிக்கைகளையும் நாம் நிறைவேற்றி வைத்திருந்தாலும் கூட, அதற்காக நாம் நடத்திய போராட்டங்கள் மிகவும் அதிகம். ஏராளமான போராட்டங்களை நடத்தியும் கூட முழுமையான மதுவிலக்கு, அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி, உழவர்களுக்கு அனைத்து இடு பொருட்களையும் இலவசமாக வழங்குவதுடன், அவர்களின் விளைபொருட்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் கொள்முதல் விலைகளை நிர்ணயிப்பது, தமிழ்நாட்டை, மற்ற மாநிலங்களின் தயவை எதிர்பார்த்துக் காத்திருக்காத அளவுக்கு பாசனத் திட்டங்களைச் செயல்படுத்தி, தண்ணீரில் தன்னிறைவு பெற்ற பூமியாக மாற்றுவது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை நம்மால் நிறைவேற்ற முடியவில்லை. இத்தகைய மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமானால், ஆட்சி என்ற அதிசய திறவுகோல் நமக்குத் தேவை. அதற்காக மட்டும் தான் தமிழகத்தில் ஆட்சிக்கு வர வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி நினைக்கிறது.

 

ஆனால், ஆட்சியைப் பிடிக்கும் முயற்சியில் நாம் தோல்விகளைத் தான் சந்தித்து வருகிறோம். அதற்குப் பல காரணங்கள் இருக்கலாம்; நமது தவறுகளும் கூட அப்படி ஒரு நிலைமையை ஏற்படுத்தியிருக்கலாம். அவற்றிலிருந்து கற்ற அனுபவங்களில் இருந்து தான் புதிய திட்டங்களை வகுத்து நாம் செயல்படத் தொடங்கினோம். தமிழ்நாடு முழுவதும் உள்ள தொகுதிகளில் அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை ஆகியவற்றை அமைத்து, அவற்றை அன்புமணி மக்கள்படையாக மாற்றுவதற்கான நமது பயணம் வேகமடைந்த நேரத்தில் தான் கொடிய கரோனா வைரஸ் பரவல் அனைத்துக்கும் முட்டுக்கட்டை போட்டு விட்டது. எனக்கு இன்னும் சில நாட்களில் 81 வயது நிறைவடையப் போகிறது. ஆனாலும், எனது எண்ணங்கள் அனைத்தும் எப்போது பாட்டாளி சொந்தங்களைச் சந்திப்போம்; இயக்கப்பணிகளை எப்போது முழுவீச்சில் தொடங்கி இலக்கை அடைவோம் என்பதாகவே உள்ளன. எனக்கே அவ்வளவு துடிப்பு இருந்தால், இளைஞர் கூட்டம் நிறைந்த பாட்டாளி சொந்தங்கள் எவ்வளவு துடிப்பாக இருப்பீர்கள்? என்பதை எனது மனத்திரையில் காட்சிகளாக்கி உணர்ந்து கொள்ள முடிகிறது.

 

இந்தியாவில் சமூகநீதிக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக தமிழகத்தில் சமூகநீதிக்கு எதிரான பிரச்சாரம் நச்சு சக்திகளால் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த அச்சுறுத்தலை முறியடித்துச் சமூகநீதியைக் காக்க வேண்டும் என்ற பெரும் கடமையும் நமக்கு உள்ளது. அதை உணர்த்துவதற்காகத் தான் ‘‘சுக்கா... மிளகா... சமூகநீதி?’’ என்ற தலைப்பில் நீண்ட தொடரை எனது முகநூல் பக்கத்தில் எழுதி வருகிறேன். இன்றுடன் 36 அத்தியாயங்கள் வெளிவந்துள்ளன. இட ஒதுக்கீடு என்ற உரிமையைப் பெறுவதற்காக நமது முன்னோர்கள் தொடங்கி நாம் வரை பல தலைமுறைகளாக நடத்தப்பட்ட போராட்டங்களை அந்தத் தொடரில் விரிவாக விளக்கி வருகிறேன். பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் அத்தொடரைப் படிக்க வேண்டும்; அவ்வாறு படித்த ஒவ்வொருவரும் நண்பர்கள், பிற கட்சியினர் எனக் குறைந்தது 10 பேரிடம் அது குறித்து விளக்கி, புரிய வைத்து, சமூகநீதி உணர்வை ஏற்படுத்த வேண்டும். தொடரைப் படித்த நண்பர்களுடன் தொலைபேசியில் விவாதிக்க வேண்டும்.

 

http://onelink.to/nknapp

 

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 6 மாதங்கள் மட்டும்தான் உள்ளன. ஆனால், நாம் மேற்கொள்ள வேண்டிய களப்பணிகளோ ஏராளமாக உள்ளன. அனைத்துக்கும் முட்டுக்கட்டையாக இருப்பது கரோனா வைரஸ் பரவல் அச்சம் தான். அந்த அச்சம் தணிந்தவுடன், ஓட்டப்பந்தயத்தில் ஓடி முதலிடம் பிடிப்பதற்காக, போட்டி தொடங்குவதை அறிவிக்கும் துப்பாக்கிச் சுடும் ஓசை எப்போது கேட்கும் என்று காத்திருக்கும் தடகள வீரர்களைப் போல, நமது செயல்வீரர்களாகிய பாட்டாளி சிங்கங்கள் களப்பணியாற்றுவதற்காக காத்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

வழக்கமாக பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழா நாளில் கட்சிக் கொடியேற்றும் நிகழ்ச்சிகளும், பொதுக்கூட்டங்களும் அதிக அளவில் நடைபெறும். ஆனால், இப்போது அதற்கு வாய்ப்பில்லாத சூழலில், வாய்ப்புள்ள பாட்டாளி சொந்தங்கள் அனைவரும் தங்களின் வீடுகளில் கொடியேற்றி 32-ஆவது ஆண்டு விழாவைக் கொண்டாடும்படி கேட்டுக் கொள்கிறேன். பாட்டாளிகளாகிய உங்களையெல்லாம் சந்தித்து இன்றுடன் 123 நாட்களாகிவிட்டன. உங்களைச் சந்திக்க வேண்டும் என்பதற்காகத் தான் இவ்வளவு நாட்களாகக் காத்திருக்கிறேன். உங்களை நேரில் சந்திக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம்; அதற்கு முன்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் 32-ஆவது ஆண்டு விழாவையொட்டி வரும் 16-ஆம் தேதி இணைய வழியாக நடைபெறும் ஆண்டு விழா சிறப்புச் செயற்குழு கூட்டத்தில் உங்களையெல்லாம் சந்திக்கவும், எதிர்காலத் திட்டங்கள் குறித்து உரையாடவும் காத்திருக்கிறேன். இணையத்தில் சந்திப்போம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

“டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது” - ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
“Cancellation of TNPSC Group 2 Interview is welcome says Ramadoss

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் குரூப் 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது. தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை காலத்திற்கும், தேவைக்கும் ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்; அதற்காக பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. பா.ம.க. வலியுறுத்திய சில சீர்திருத்தங்களை தேர்வாணையம்   செயல்படுத்தியுள்ள போதிலும், தேர்வாணையத்தை நவீனப்படுத்துவதற்கு இவை மட்டும் போதுமானதல்ல.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் அனைத்து பணிகளுக்கும் நேர்முகத் தேர்வு கூடாது என்பது தான் பா.ம.க.வின் நிலைப்பாடு. இதை கடந்த ஐந்தாண்டுகளாக பா.ம.க.வின் நிழல் நிதிநிலை அறிக்கை மூலம் வலியுறுத்தி வருகிறோம். ஆள்தேர்வில் நடைபெறும் முறைகேடுகளுக்கு முதன்மைக் காரணம் நேர்முகத் தேர்வுகள் தான். அவை அகற்றப்பட்டால் தான் நேர்மையான முறையில் பணியாளர்களைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்போது தான் ஏழை, நடுத்தர மக்களுக்கும் வேலை கிடைக்கும்.

மத்திய அரசுப் பணிகளை பொறுத்தவரை குரூப் ஏ, குரூப் பி அரசிதழ் பதிவு பணிகள் தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் நேர்காணல் முறை ரத்து செய்யப்பட்டு விட்டது. ஆந்திர மாநிலம் அதை விட அடுத்தக்கட்டத்திற்கு சென்று மாவட்ட துணை ஆட்சியர், காவல்துறை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட முதல் தொகுதி பணிகளுக்குக் கூட நேர்காணலை ரத்து செய்து விட்டது. ஆந்திராவைப் பொறுத்தவரை அரசு பணிகளுக்கு நேர்காணல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டது. ஆந்திரத்தைப் போலவே தமிழ்நாட்டிலும் முதல் தொகுதி பணிகளுக்கும் நேர்முகத் தேர்வை நிரந்தரமாக நீக்க வேண்டும்.

2 ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2 க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2 ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான். அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2 ஏ தொகுதி பணிகளுக்கு  இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எதிர்கொள்ளும் மிகக் கடுமையான விமர்சனம் தேர்வு முடிவுகளை குறித்த காலத்தில் வெளியிடுவதில்லை என்பது தான். தொகுதி 1, தொகுதி 2 பணிகளுக்கான தேர்வு நடைமுறைகளை பல நேரங்களில் 30 மாதங்கள் வரை ஆகின்றன. இதனால் தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றி குறித்த நேரத்தில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிமைப்பணி அதிகாரிகளை தேர்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. லட்சக்கணக்கான மாணவர்கள் பங்கேற்கும் அத்தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கை வெளியான நாளில் இருந்து ஓராண்டுக்குள் வெளியிடப்படுகின்றன. அடுத்தத் தேர்வுக்கு தேர்வர்கள் தயாராவதற்காக இத்தகைய ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குடிமைப்பணி தேர்வுக்கான முடிவுகள் ஒரு முறை கூட தாமதமாக வெளியிடப்பட்டதில்லை. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பின்பற்றி ஒவ்வொரு தொகுதி பணிக்கும் எந்த மாதத்தில் அறிவிக்கை வெளியிடப்படும்? எந்த மாதத்தில் தேர்வு நடைபெறும்? எந்த மாதத்தில் முடிவுகள் வெளியாகும்? என்ற விவரங்கள் அடங்கிய நிலையான தேர்வு அட்டவணையை  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமும்  வெளியிட வேண்டும்.

முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, திசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும். இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும்  இரண்டு முறை தொகுதி 4 பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும்.

பொறியியல் பணிகள், வேளாண் பணிகள், புள்ளியியல் பணிகள் உள்ளிட்ட முதல் 4 தொகுதிகளுக்குள் வராத பணிகளுக்கான அறிவிக்கைகள் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்பட்டு, அடுத்த 5 மாதங்களில் தேர்வுகள் நடத்தி, முடிவுகளை வெளியிட வேண்டும். இதற்கேற்ற வகையில் தேர்வு நடைமுறையில் சீர்திருத்தங்களைச் செய்ய தமிழ்நாடு அரசுப் பணியாளர்  தேர்வாணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.