
பாமகவில் நிறுவனர் ராமதாஸுக்கும், அன்புமணிக்கும் இடையே கட்சியில் தலைவர் பதவி, அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ், கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்டச் செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் கடந்த 19ஆம் தேதி அன்புமணி தலைமையில் சேலம் மாவட்டத்தில் பாமக பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில், சேலம் மாவட்ட பா.ம.க நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். ஆனால், சேலம் மேற்கு தொகுதி பா.ம.க. எம்.எல்.ஏ அருள், பா.ம.க கெளரவத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கலந்துகொள்ளவில்லை. அவர்கள் இருவருக்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் சேலம், காஞ்சிபுரம், சென்னை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த பா.ம.க நிர்வாகிகளை பா.ம.க நிறுவனர் ராமதாஸ் இன்று (23-06-25) தைலாபுரத்தில் சந்தித்துப் பேசினார். அதனை தொடர்ந்து, சேலம் மேற்கு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவத்தை கட்சிப் பொறுப்பில் இருந்து ராமதாஸ் நீக்கியுள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் மாவட்ட அமைப்பு செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த வெடிக்காரனூர் ராஜேந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். சேலத்தில் அன்புமணி நடத்திய பொதுக்குழுவில் கலந்து கொண்ட சதாசிவம் கடுமையாக பேசியதால் தான் அவர் தற்போது கட்சி பொறுப்பில் நீக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.