Ramadoss condemns Union Ministers and officials for RTI issue

சென்னையைச் சேர்ந்த நபர் ஒருவர், மாநிலம் வாரியாக மருத்துவமனையின் படுக்கை விவரம் குறித்து மத்திய அரசிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார். இதற்கு வந்த பதில் கடிதத்தில் இந்தியில் குறிப்பிட்டிருந்தது. இது தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி கேட்கும் தகவல்களை உள்ளூர் மொழிகளிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்ப வேண்டும். ஆனால், இந்தியில் வந்துள்ளதைக் கண்டித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

அதில் அவர், “மத்திய அமைச்சகங்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள அமைப்புகளிடம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி ஆங்கிலத்தில் எழுப்பப்படும் வினாக்களுக்குக் கூட இந்தியில் பதில் அளிக்கும் வழக்கம் அதிகரித்துவருகிறது. இந்தப் போக்கு கண்டிக்கத்தக்கது.

Advertisment

இந்தி தெரியாத, இந்தி படிக்காத மக்கள் ஆங்கிலத்தில் எழுப்பும் வினாக்களுக்குஇந்தியில் பதில் தரப்படும்போது அதை விண்ணப்பதாரர்களால் படித்து அறிந்துகொள்ள முடிவதில்லை. அதனால் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கமே சிதைக்கப்படுகிறது.

இவை அனைத்தையும்விட உள்ளூர் மொழிகளில் வினா எழுப்பப்படுவதும், விடை அளிக்கப்படுவதும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், இந்தியில் பதிலளிப்பது கட்டாய இந்தித் திணிப்பே தவிர வேறல்ல.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் நோக்கம் உன்னதமானது. அதை இந்தித் திணிப்புக்கான கருவியாக பயன்படுத்தக்கூடாது. தகவல் உரிமைச் சட்டத்தின்படி எழுப்பப்படும் வினாக்களுக்கு அதே மொழியில் விடை தரும்படி அதிகாரிகளுக்கு அரசுகள் அறிவுறுத்த வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.