Skip to main content

அழைப்பு விடுத்த ராமதாஸ்; அன்புமணிக்கு ஆதரவாக கூட்டத்தை புறக்கணித்த மாவட்ட செயலாளர்கள்?

Published on 16/05/2025 | Edited on 16/05/2025

 

Ramadoss called PMK dt secretaries boycotted the meeting in support of Anbumani

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தை அடுத்துள்ள தைலாபுரத்தில் பா.ம.க. (நிறுவன) தலைவர் ராமதாஸ் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி (10.04.2025) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பா.ம.க. தலைவர் பொறுப்பை நானே எடுத்துக் கொள்கிறேன். அன்புமணி இனி பா.ம.க. செயல் தலைவராகச் செயல்படுவார். 2026ஆம் சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களை வழிநடத்த இந்த முடிவை எடுத்துள்ளேன். இன்றைக்குத்தான் நான் தலைவராகப் பொறுப்பேற்று இருக்கிறேன். நான் தான் இனி கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர். நிர்வாகக் குழு, செயற்குழு, சட்டமன்ற உறுப்பினர்கள் உடன் பேசி கூட்டணி குறித்து முடிவு எடுப்போம். அன்புமணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்குப் பல காரணங்கள் உண்டு” எனப் பேசியிருந்தார்.

ராமதாஸின் இந்த திடீர் அறிவிப்பு பா.ம.க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அதே சமயம் “நானே பா.ம.க தலைவராகச் செயல்படுவேன்” என பா.ம.க. (செயல்) தலைவரும், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணியும் அறிவித்திருந்தார். இதனையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் திருவிடந்தை பகுதியில் கடந்த 11ஆம் தேதி (11.05.2025)  வன்னியர் சங்கம் சார்பில் ‘சித்திரை முழு நிலவு மாநாடு’ நடைபெற்றது. அப்போது இருவரும் அருகருகே அமர்ந்திருந்த போதிலும் இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மேலும் இந்த மாநாட்டில் கட்சி நிர்வாகிகளை ராமதாஸ் கடுமையாகச் சாடியிருந்தார்.

இத்தகைய சூழலில் தான் தைலாபுரத்தில் ராமதாஸ் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டமானது இன்று (16.05.2025) காலை 10:30 மணிக்கு தொடங்கி  நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியினுடைய அமைப்பு ரீதியிலான 108 மாவட்டச் செயலாளர்கள், 108 மாவட்ட தலைவர்கள் கலந்துகொள்ள இவர்கள் அனைவருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டன. அதில் அனைவரும் கட்டாயம் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அதே சமயம் இன்றைய கூட்டத்தை அன்புமணி புறக்கணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது இந்த கூட்டமானது ராமதாஸால் மட்டுமே முடிவு செய்து கூட்டப்பட்டுள்ளதால் அதனை அன்புமணி புறக்கணிக்க முடிவு செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள தைலாபுரத்திற்கு 8 மாவட்ட செயலாளர்களும், 7 மாவட்ட தலைவர்கள் மட்டுமே வருகை தந்தனர். அந்த வகையில் சேலம் மாவட்ட செயலாளராகவும், சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள அருள் வருகை தந்திருந்தார். அதேபோன்று  தஞ்சாவூர் கிழக்கு மாவட்ட செயலாளராக உள்ள ம.க. ஸ்டாலின் உள்ளிட்ட 8 மாவட்ட செயலாளர்களும், 7ஏழு மாவட்ட தலைவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மேலும் அக்கட்சியின் கௌரவ தலைவர் ஜி.கே. மணி கலந்து கொண்டார். அக்கட்சியின் பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன் கலந்து கொண்டார். மிக முக்கியமாக எதிர்பார்க்கப்பட்ட அன்புமணி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. 

சார்ந்த செய்திகள்