Skip to main content

எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையானா? அரசு விளம்பரம் அநாகரீகத்தின் உச்சம்! ராமதாஸ்

Published on 24/04/2018 | Edited on 24/04/2018
 Ramadoss


ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தம்மை கடவுளாகக் காட்டிக் கொண்டிருப்பது ஆணவம் மட்டுமல்ல... அநாகரீகத்தின் உச்சமும் ஆகும். இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

தமிழகத்தில் உள்ள திரையரங்குகளில் தமிழக அரசின் செய்தி விளம்பரத்துறை சார்பில் திரையிடப்படும் சாதனை விளக்க விளம்பரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஏழுமலையானாக சித்தரிக்கப்பட்டு  இருப்பது அதிர்ச்சியளிக்கிறது. முதலமைச்சராக பதவியேற்ற 15 மாதங்களில் மக்களின் நலனுக்காக எதையுமே செய்யாத பழனிச்சாமி கூச்சமின்றி இப்படி விளம்பரப்படுத்திக் கொள்வது கண்டிக்கத்தக்கது.
 

தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பினாமி அரசு எந்தத் திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. சென்னை உயர்நீதிமன்றத்தின் ஆணைப்படி வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைக் குறிக்கும் வகையில் தமிழக அரசு வெளியிட்டுள்ள விளம்பரத்தில், மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் அவரது தோழி மற்றும் உறவினருடன் கோவிலுக்கு சென்று வழிபாடு நடத்தும்படி கோருகிறார். யாருடைய பெயரில் வழிபாடு நடத்த வேண்டும் என்று கோவில் குருக்கள் கேட்கும் போது, மாற்றுத் திறனாளி பெயரில் வழிபாடு நடத்தும்படி அவரது உறவினர் கூறுகிறார்.

ஆனால், அதை இடைமறிக்கும் மாற்றுத் திறனாளி தமது பெயரில் வழிபாடு செய்ய வேண்டாம்; சுவாமி பெயருக்கு வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுகிறார். எந்த சுவாமி பெயருக்கு என குருக்கள் கேட்க, ‘‘ நம்ம தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அய்யா பெயருக்கு... அவர் தான் எனக்கு வேலை கொடுத்த சுவாமி’’ என்று அந்த மாற்றுத்திறனாளி கூறுகிறார். அடுத்த வினாடி திருப்பதி வெங்கடாஜலபதி சிலையாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தோன்றி மறைகிறார்.
 

திரையரங்குகளில் இந்த விளம்பரத்தைப் பார்க்கும் மக்கள் நகைச்சுவையாகக் கருதி சிரிக்கிறார்கள் என்றாலும், இது ஒரு குரூரமான சிந்தனையாகும். தமிழகம் கடவுள் இல்லை என்று கூறிய முதல்வர்களைப் பார்த்திருக்கிறது.... கடவுள் உண்டு என்று கூறிய முதலமைச்சர்களைப் பார்த்திருக்கிறது.... ஆனால், நான் தான் கடவுள் என்று கூறும் முதலமைச்சரை தமிழ்நாடு இப்போது தான் பார்க்கிறது. ஜெயலலிதா  முதலமைச்சராக இருந்த போது தன்னை அகிலாண்டேஸ்வரியாகவும், கன்னிமேரியாகவும் சித்தரித்து அதிமுக நிர்வாகிகள் பதாகை அமைத்தால் அதை நினைத்து மனதிற்குள் மகிழ்வார்; அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவார். ஆனால், அதை ஒருபோதும் அவர் வெளிக்காட்டிக் கொண்டதில்லை. அரசு செலவில் தம்மை கடவுளாக சித்தரித்து விளம்பரப் படம் தயாரித்து வெளியிட்டுக் கொண்டதில்லை.
 

ஆனால், மக்களால் நேரடியாக தேர்ந்தெடுக்கப்படாமல், சட்டப்பேரவை உறுப்பினர்களை விலை கொடுத்து வாங்கி முதலமைச்சரான எடப்பாடி பழனிச்சாமி, ஆட்சியில் இருப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய அனைத்து நாகரிகங்களையும் காலில் போட்டு மிதித்து விட்டு தம்மை முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். முதலமைச்சர் பதவியில் இருந்து கொண்டு மக்கள் நலனுக்கான திட்டங்களைச் செயல்படுத்தினால், மக்களே ஆட்சியாளர்களை கடவுளாக கருதி வழிபடுவார்கள். சிங்கப்பூரின் லீ குவான் யூ-வையும், தென்னாப்பிரிக்காவின் நெல்சன் மண்டேலா, கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ, தமிழகத்தின் ஓமந்தூரார், காமராசர் ஆகியோரையும் மக்கள் கடவுளாகத் தான் கருதினர். அது தான் மக்கள் தரும் அங்கீகாரம் ஆகும். ஆனால், போட்டிகளில் வெற்றி பெற்று விருது வாங்க முடியாதவர், பாத்திரக்கடையில் கேடயம் வாங்கி பெருமைப்பட்டுக் கொள்வதைப் போலத் தான் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்கள் அமைந்துள்ளன.
 

தமிழகத்தில் ஒன்றரை கோடி பேர் படித்து விட்டு வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். தொழில் முதலீட்டை ஈர்ப்பதில் கடைசி இடத்திற்கும் கீழே ஏதேனும் இடம் இருக்குமா? என்று தேட வேண்டிய நிலையில் தான் தமிழகம் உள்ளது. நீட் தேர்விலிருந்து விலக்கு பெற முடியாததால் ஆண்டு தோறும் அனிதாக்களை இழந்து கொண்டிருக்கிறோம். நிதி ஆணையத்தின் அதிகார வரம்பு மாற்றப் பட்டதால் தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய ரூ.40,000 கோடி வருவாய்க்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆட்சியாளர்களுக்கு திறமை இல்லை. மணல் கொள்ளையும், மது விற்பனையும் தான் இந்த ஆட்சியின் அடையாளங்களாக மாறியிருக்கின்றன. ரோம் நகரம் தீப்பிடித்து எரிந்து கொண்டு இருந்த போது நீரோ மன்னன் ஃபிடில் வாசித்துக் கொண்டிருந்ததைப் போல, காவிரி உரிமைக்காக தமிழ்நாட்டு மக்கள் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தம்மை கடவுளாகக் காட்டிக் கொண்டிருப்பது ஆணவம் மட்டுமல்ல... அநாகரீகத்தின் உச்சமும் ஆகும். இதுபோன்ற செயல்களை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள்.
 

தமிழகம் 7 லட்சம் கோடி கடன் சுமையில் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் மக்களின் வரிப்பணத்தை சுய விளம்பரத்திற்காக எடப்பாடி பழனிச்சாமி வீணடிப்பதை ஏற்க முடியாது.  திருப்பதி ஏழுமலையானாக தம்மைக் காட்டிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமியின் மலிவான செயல்களால், இறைவழிபாட்டில் நம்பிக்கைக் கொண்ட மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கின்றனர். மக்களை மட்டுமின்றி, கடவுளையும் அவமதிக்கும் வகையிலான விளம்பரப் படத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால் மக்கள் தாங்களாகவே வீதிகளில் இறங்கி போராடுவதை தவிர்க்க முடியாது. இவ்வாறு கூறியுள்ளார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

சமூகநீதிக்கு என்ன அர்த்தம் என்று இந்தியா கூட்டணிக்கு தெரியுமா? - அன்புமணி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Anbumani question Does the India Alliance know what social justice means

சிதம்பரத்தில் சிதம்பரம் மக்களவை தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் பி.கார்த்தியாயினியை ஆதரித்து பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ்  வாக்குசேகரித்தார்.

அப்போது பேசிய அவர், “இந்த தேர்தலில் இடையில் யார், யாரோ வந்து குழப்புவார்கள். இடையில் அதிமுகவினர் வந்து ஓட்டு கேட்பார்கள். ஓரு ஓட்டு கூட அதிமுகவிற்கு செல்லக்கூடாது. கடலூர் மாவட்டத்தில் பாமக இல்லை என்றால், இந்நேரம் அத்தனை இயற்கை வளங்களையும் திமுகவும், அதிமுகவும் நாசப்படுத்தியிருப்பார்கள். காவிரி டெல்டா, வீராணம் ஏரியை நாசப்படுத்தியிருப்பார்கள். 2008-ல் இங்கு பெட்ரோ கெமிக்கல் மண்டலமாக அறிவித்தார்கள். சிதம்பரம் தொகுதியில் உள்ள 25 கிராமங்கள் உள்ளிட்ட 45 கிராமங்கள் பாதிக்கும் திட்டத்தை ரூ.80 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கினார்கள். அதன் பிறகு நான் கிராம, கிராமமாக சென்று போராட்டம் செய்தேன். அதன் பிறகுதான் அந்த திட்டம் ரத்து செய்யப்பட்டது. திமுக அத்திட்டத்தை கொண்டு வர துடித்து கொண்டிருக்கிறார்கள். பாமக இல்லை எனில் மூன்றாவது சுரங்கம் இப்பகுதியில் வந்திருக்கும்.

இத்தொகுதி எம்பி தொல்.திருமாவளவன் இத்தொகுதிக்கு ஏதாவது செய்துள்ளாரா? இங்குள்ள பிரச்சனைக்கு தீர்வு கண்டுள்ளாரா? வீராணம் ஏரி 1.50 டிஎம்சி கொண்ட தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஏரி. அந்த ஏரி இதுவரை தூர்வாரப்படவில்லை. அதுமட்டுமல்ல பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் என கொண்டு வந்தார்கள். அப்போது முதன் முதல் குரல் கொடுத்து தடுத்து நிறுத்தியது இந்த அன்புமணி ராமதாஸ்தான். அப்போது திருமாவளவன் வாயை திறக்கவில்லை. திமுக கூட்டணி தமிழ்நாட்டிற்கும், தமிழர்களுக்கும் துரோகம் செய்து கொண்டிருக்கிறது. காவிரி பிரச்சனையிலிருந்து கச்சத்தீவு பிரச்சனை வரை திமுக கூட்டணி துரோகம் செய்துள்ளது. அதற்கு உடந்தையாக திருமாவளவன் உள்ளார். இந்த தேர்தலில் சாதி பிரச்சனை கிடையாது. சமுதாய பிரச்சனை கிடையாது. நம்ம கூட்டணி, அவங்க கூட்டணி வெவ்வேறு. இன்னொரு கூட்டணி எடப்பாடி பழனிசாமி கூட்டணி உள்ளது. அந்த கூட்டணியில் ஒரு கட்சிதான் உள்ளது. தேர்தலுக்கு பிறகு அதுவும் காணாமல் போய்விடும். ஏதோ நம்ம துரோகம் பண்ணிவிட்டோம் என கூறுகின்றனர். யார் துரோகம் செய்தது. நாம் மற்றவர்களை தோலில் சுமந்து மாற்றி, மாற்றி முதல்வராக்கியுள்ளோம். எங்களை துரோகி என சொல்ல உங்களுக்கு என்ன அருகதை உள்ளது. மண்ணிற்கும், மக்களுக்கும் உழைக்கும் பாட்டாளி நாங்கள்.

இது இரண்டு சமுதாயத்திற்கான தேர்தல் அல்ல. வளர்ச்சிக்கான தேர்தல். இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும். அதற்கு முக்கிய காரணம் என்னவென்றால், 2026-ல் திமுக, அதிமுக இல்லாத கூட்டணி ஆட்சியை நாம் உறுதியாக அமைப்போம். 57 ஆண்டுகளாக இரு கட்சிகளும் தமிழ்நாட்டை நாசப்படுத்திவிட்டார்கள். இருகட்சிகளும் தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், விவசாயிகளுக்கும் துரோகம் செய்துள்ளார்கள். போதும் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற முடிவை நானும், ராமதாஸ் அவர்களும் சேர்ந்து எடுத்தோம்.

இருகட்சிகளும் ஆட்சிக்கு வந்த முதலில் உங்கள் தாத்தாவை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். அதன் பிறகு அப்பா, கணவர், மகனை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கினார்கள். தற்போது பேரப்பிள்ளைகளை மதுப்பழக்த்திற்கு அடிமையாக்கி வருகிறார்கள். இதனை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். மதுவைவிட தற்போது மோசமான பிரச்சனை உள்ளது. அமெரிக்காவில் என்ன, என்ன போதை பொருள்கள் இருக்கோ, அவையல்லாம் மாத்திரை, பவுடர் வழியில் வந்து கொண்டிருக்கிறது. அதனை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துகிறார்கள். இதனை ஒரு வருடம் பயன்படுத்தினால், அந்த மாணவரை மீட்டெடுக்க முடியாது. இதைப்பற்றி எந்த கவலையுமில்லாத முதல்வராக ஸ்டாலின் உள்ளார். கடலூர் தொகுதியில் நமது வேட்பாளர் தங்கர்பச்சான் போட்டியிடுகிறார். அவர் சாலையோரம் கிளி ஜோசியம் பார்த்துள்ளார். அவர் தங்கர்பச்சானை ஜெயித்து விடுவீர்கள் என கூறியுள்ளார். அடுத்த நாள் கிளி ஜோசியரை கைது செய்துள்ளனர்.

அந்தளவுக்கு திமுகவிற்கு சகிப்புத் தன்மை இல்லை. சாராயம் விற்பவன், கள்ளக்கடத்தல் பண்ணுபவர்கள், கஞ்சா விற்பவர்கள், போதை பொருள்கள் விற்பவர்கள் வெளியில் சுற்றுகிறார்கள். போதை பொருள்கள் விற்பவர் ஸ்டாலினுடன் நின்று புகைப்படும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். செய்யாற்றில் 7 விவசாயிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ததுதான் இந்த கொடுங்கோல் ஆட்சி. விவசாயிகளை கடவுளாகப் பார்க்கிறேன். இது விவசாய பூமி. இந்த புண்ணியபூமியை நாசப்படுத்தும் திமுக, அதிமுக கட்சிகளை ஓரம் கட்ட வேண்டும். அதற்கு சரியான நேரம் இந்த நாடாளுமன்ற தேர்தல்.

கொள்ளிடம் ஆற்றில் 110 கிலோ மீட்டரில் நீர் ஓடுகிறது. எத்தனை முறை 10 தடுப்பணைகள் கட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தேன். காவிரியை காப்போம் நடைபயணமாக வந்து போராட்டம் நடத்தினோம். ஆனால் 87 கிலோ மீட்டர் அளவில் 20 மணல் குவாரிகள் அமைத்து நடத்தும் கொடுங்கோல் ஆட்சி, திமுக ஆட்சி. இந்த ஆட்சியை விரட்டி அடிக்க வேண்டும். தற்போது நாம் அதனை செய்யாவிடில், நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது.  நிச்சயமாக இந்த தேர்தலில் பானை உடைக்கப்படும். இந்த தேர்தலில் தாமரையும், மாம்பழமும் ஒன்றாக சேர்ந்துள்ளது. இனி நீங்கள் கூறும் அத்துமீறு, அடங்கமறு என்பதெல்லாம் எடுபடாது. நான் இளைஞர்களை நல்ல வழியில் வழிநடத்தும் அரசியல் செய்கிறேன். இளைஞர்கள் அனைவரும் படித்து வேலைக்கு செல்ல வேண்டும்.  அதற்காகதான் இடஓதுக்கீடு போராட்டங்கள் நடத்தியுள்ளோம். எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?  திமுக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் தமிழ்நாட்டில் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு நிர்வாகம் செய்ய தெரியாது.

நான் திருமாவளவனை கேட்கிறேன். நீங்கள் இருக்கிற கூட்டணியில் உங்களுக்கு மரியாதை கிடைக்கிறதா? சமூகநீதி என்றால் என்ன அர்த்தம் என அந்த கூட்டணிக்கு தெரியுமா? ஸ்டாலினுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம் உள்ளது.. அவரது மகன் விளையாட்டு பிள்ளை, விளையாட்டு துறை அமைச்சராக உள்ளார். சினிமாவில் நடித்தால், போதுமா? தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்கு மரியாதை கொடுக்க தெரியுமா? தமிழ்நாட்டில் 34 அமைச்சர்கள் உள்ளார்கள். முதல்வர் ஸ்டாலின் உள்ளார். இதில் தாழ்த்தப்பட்ட, பட்டியலினத்தை சேர்ந்த 3 அமைச்சர்கள் உள்ளார்கள். ஆனால் 3 பட்டியலின  சமுதாயத்தை சேர்ந்த அமைச்சர்கள் 30வது இடத்தில் சி.வெ.கணேசன், 33வது இடத்தில் அமைச்சர் மதிவேந்தன், 34வது இடத்தில் அமைச்சர் கயல்விழி. இதுதான் நீங்கள் சமூகநீதிக்கு கொடுக்கும் மரியாதை.

சமூகநீதிக்கான ஓரே தலைவர் யார் என்றால் இந்தியாவிலேயே ஒரே தலைவர் மருத்துவர் ராமதாஸ்தான். வேறு யாருக்கும் தகுதி கிடையாது. 10 தொகுதிகளில் பாமக போட்டியிடுகிறது. இதில் 3 தொகுதிகள் பெண்கள் போட்டியிடுகிறார்கள். 2 தொகுதிகள் , பட்டியலினத்திற்கு வழங்கியுள்ளோம். இதுதான் உண்மையான இடஓதுக்கீடு, உண்மையான சமூகநீதி. பாமகவிற்கு கிடைத்த முதல் மத்திய அமைச்சர் பதவியை இந்த தொகுதியில் வெற்றி பெற்ற பட்டியலின சமுதாயத்தைச் சேர்ந்த தலித் எழில்மலை, இ.பொன்னுசாமிக்கு கொடுத்தோம். இந்தியாவிலேயே ஒரே ஓரு இட ஒதுக்கீடு யாரும் கேட்காமல், போராடாமல் கிடைத்தது எதுவென்றால், நான் மத்திய அமைச்சராக இருந்த போது அகில இந்திய நுழைவுத்தேர்வில் பட்டியலின சமுதாயத்திற்கு கிடைத்ததுதான். எம்பிபிஎஸ். முதுகலை மருத்துவ படிப்புகளுக்கு இட ஒதுக்கீடு பெற்று தந்த கட்சி பாமகதான்.

கர்நாடகாவில் மேகதாது அணையை கட்டி தீருவோம் என அங்குள்ள முதல்வர் சித்த ராமைய்யா செல்கிறார். ஓரே கூட்டணியில் உள்ள இங்குள்ள ஸ்டாலின், திருமாவளவன் ஏன் வாயை திறந்து கேட்கவில்லை. வாக்கிற்காக வாயை திறக்க மறுக்கிறீர்கள். பாட்டாளி மக்கள் கட்சி கொள்கையில் எள்ளவும் விட்டு கொடுக்க மாட்டோம். எந்த கூட்டணியில் இருந்தாலும் நாங்கள் தைரியமாக கேட்போம். கச்சத்தீவை காங்கிரஸூம், திமுகவும் தாரை வார்த்த பிறகுதான் 800 மீனவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 6500 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். 1200 படகுகள் நாசப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வடலூர் வள்ளலார் பெருவெளி மையத்தை, வள்ளலார் சர்வதேச மையம் அமைப்பதாக கைவைத்துள்ளார்கள். வள்ளலார் வாழ்ந்த அந்த மண்ணை விட்டு விட்டு வெளியில் சென்று மையத்தை கட்டுங்கள்” என்றார் அன்புமணி ராமதாஸ்.

கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் ஹெச்.ராஜா, பாமக மாநில துணைத் தலைவர் வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன், பாமக மாவட்ட செயலாளர்கள் செல்வமகேஷ் (கடலூர்), ரவி (அரியலூர்), செந்தில்குமார் (பெரம்பலூர்), முன்னாள் எம்பி டாக்டர் குழந்தைவேல், தேவதாஸ் படையாண்டவர், ஜெய.சஞ்சீவி, பாஜக மாவட்ட தலைவர் கே.மருதை, ஏ.ஜி.சம்பத், சாய்சுரேஷ், பாஜக ராணுவ வீரர் பிரிவு மாநில துணைத் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், வே.ராஜரத்தினர், தமிழ்மாநில காங்கிரஸ் கட்சி புரட்சிமணி உள்ளிட்டோர் பங்கேற்றுப் பேசினர்.

Next Story

“எடப்பாடி பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் மறக்க மாட்டார்கள்” - திமுக காட்டம்! 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

குடியுரிமைத் திருத்தச் சட்டம், புதிய வேளாண் சட்டம், உதய்மின் திட்டம் போன்ற பா.ஜ.க. அரசின் எண்ணற்ற மக்கள் விரோத சட்டங்களுக்கு ஒப்புதல் தந்த பழனிசாமியின் பாதகச் செயல்களை மக்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள். மன்னிக்கவும் மாட்டார்கள் என திமுக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிகையில், “எடப்பாடி பழனிசாமி ஏறத்தாழ நான்கு ஆண்டு காலம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்பில் இருந்தார். தமிழ்நாட்டு மக்களுக்கோ, தமிழ் மொழிக்கோ அவரால் சிறு பயனும் இல்லை. அவரால் பயன் கூட வேண்டாம். அவர் பாதகம் செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லவா. பதவி சுகத்தை அனுபவித்தார். ஆனால், தமிழர்களுக்குப் பாதகங்கள் பல செய்தார். எந்த ஒரு அரசியல் கட்சியின் பின்னணியும் இல்லாமல், தன்னெழுச்சியாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக மக்கள் திரண்டு பல மாதங்கள் போராடினார்கள். ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் அப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்குப் புற்றுநோய் முதலான கொடிய நோய்கள் ஏற்பட்டு, அவர்கள் கொடுமைகளுக்கு ஆளானார்கள்.

அப்படி பாதிக்கப்பட்ட மக்கள் ஸ்டெர்லைட் தொழிற்சாலையை மூடக்கோரி திரண்டு எழுந்து போராடினார்கள். அந்த மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 13 பேரைக் கொன்றது பழனிச்சாமியின் காவல்துறை. ஒரு பெண்ணின் வாய்க்குள் துப்பாக்கியை வைத்துச் சுட்டுக் கொன்றார்கள். ஒரு தந்தை கண் எதிரே அவர் மகன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்தக் காட்சிகளை எல்லாம் கண்ட மக்கள் பதறினார்கள். இந்தக் கொடுமைகள் குறித்து அப்போதைய முதலமைச்சர் பழனிசாமியிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, தொலைக்காட்சியில் பார்த்துத்தான் நான் தெரிந்து கொண்டேன் என்றார் நிதானமாக. ஒரு முதலமைச்சர் இப்படிக் கூறியது நியாயமா?. அந்தக் கொடிய துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா தலைமையிலான ஆணையம் அந்தச் சம்பவம் குறித்து ஏற்கெனவே அவருக்குத் தெரியும் என்று கூறி, பழனிசாமியின் பொய்முகத்தை வெளிப்படுத்தியது.

பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமைகள் :

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பொள்ளாச்சியில் அன்றைய ஆளுங்கட்சியான அதிமுகவைச் சேர்ந்தவர்கள், 200க்கும் மேற்பட்ட மகளிரை மிரட்டி, கற்பழித்து கொடுமைகளுக்கு ஆளாக்கினர். மகளிர் சங்கங்கள் போராடின. பாதிக்கப்பட்ட மகளிர் கூறியும் குற்றவாளிகளைப் பாதுகாத்தவர் பழனிசாமி.

நீட் தேர்வை அனுமதித்த பழனிசாமி : 

அரியலூர் அனிதா முதல் 20க்கும் மேற்பட்ட இளைஞர்களும் மகளிரும் தற்கொலை செய்து கொண்ட கொடுமைகளுக்குக் காரணமானவர் பழனிசாமி. அவர் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவர். ஜெயலலிதா இருந்தவரை நீட்தேர்வை தமிழ்நாட்டில் அனுமதிக்கவில்லை. ஆனால் நீட் தேர்வை தமிழ்நாட்டுக்குள் அனுமதித்தவரும் பழனிசாமிதானே.

உதய் மின் திட்டத்தை அனுமதித்தவரும் பழனிசாமியே :

உதய் மின் திட்டத்தால் தமிழ்நாட்டிற்கு நன்மை இல்லை. தனியார் உற்பத்தி செய்யும் மின்சாரத்தை மாநிலங்கள் வாங்க வேண்டும். தனியார் மின் நிறுவனங்கள் மின்சாரத்தை மாநிலங்களில் விற்பனை செய்து, வங்கியில் வாங்கிய கடன்களைச் செலுத்தி அவை லாபம் சம்பாதிக்கும். இத்திட்டத்தை ஜெயலலிதா இருந்தவரை தமிழ்நாடு ஏற்கவில்லை. அவர் மறைந்த பின் உதய மின் திட்டத்தை ஏற்றார் பழனிசாமி. இதனால், மின்வாரியத்தின் கடன் 40 ஆயிரம் கோடியை தமிழ்நாடு அரசு ஏற்று அதன் நிதிச்சுமை தமிழ்நாடு அரசின் மேல் விழுந்தது. இதனால்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பழனிசாமியை பாதம் தாங்கிப் பழனிசாமி என்று கூறுகிறார்.

இன்னும் ஒரு வேடிக்கை :

பழனிசாமி சொல்கிறார் நான் என் உழைப்பால்தான் முதலமைச்சர் பதவிக்கு உழைத்து முன்னுக்கு வந்தேன் என்று. பழனிசாமி எப்படி முதலமைச்சர் ஆனார் என்பதை ஊரும், உலகமும் தொலைக்காட்சியில் பார்த்துக் கைகொட்டி சிரித்ததே. அவர் மண்புழு போல தரையில் ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனதுடன், யாரால் முதலமைச்சர் ஆனாரோ அவருக்கே துரோகம் செய்தவர் அல்லவா பழனிசாமி. அது மட்டும் அல்ல கொடநாடு கோட்டைக்குள் புகுந்து காவலரைக் கொன்று அங்கிருந்த ஊழல் பண மூட்டைகளைக் கொள்ளையடித்த கும்பல், எங்களை ஏவியது பழனிசாமிதான் என்று காவல்துறையிடம் கூறி பழனிசாமியின் பொய்முகத்தைத் தோலுரித்துக் காட்டியதை மறக்க முடியுமா? உறவினர்களுக்கு அரசு டெண்டர் எதுவும் வழங்கக்கூடாது எனும் விதிகளுக்கு மாறாக, தன்னுடைய சம்பந்திக்கு அரசுப் பணிகளை டெண்டர் மூலம் வாரி வழங்கி ஊழல் செய்தவர் பழனிச்சாமி என்பதை அவர் மறுக்க முடியுமா?.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ஆதரித்த பழனிச்சாமி : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

பா.ஜ.க.அரசின் பாதகச் செயல்களில் ஒன்று சிறுபான்மையினருக்கு எதிரான குடியுரிமை திருத்தச் சட்டம். அச்சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டபோது அ.தி.மு.க. எம்.பி.க்கள் 11 பேர் வாக்களிக்காமல் இருந்திருந்தால், அந்தச் சட்டம் நிறைவேறி இருக்காது. ஆனால், அந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் தந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து கொண்டது பழனிசாமியின் அ.தி.மு.க.

மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் பழனிசாமி :

எங்கு சென்றாலும், தான் ஒரு விவசாயி என்று கூறிவரும் பழனிசாமி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தவர் என்பதை யாரும் எளிதில் மறந்துவிட மாட்டார்கள்.

தொழில் வளர்ச்சியில் கடைசி இடம் :

தொழில் வளர்ச்சியில் தமிழ்நாட்டைக் கடைசி இடத்திற்குத் தள்ளியது இந்த பழனிசாமி ஆட்சிதானே.

ஒரே நாடு ஒரே தேர்தல் : 

People will never forget Edappadi Palaniswami misdeeds DMK

ஒரே நாடு ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே உணவு என்பதை மட்டுமல்லாமல், பாஜக ஆட்சி ஒரே நாடு, ஒரே தேர்தல் என்று கூறியதைக் கேட்டு உடனே டெல்லிக்கு ஓடிச்சென்று பா.ஜ.க. அரசிடம் ஆதரவு தெரிவித்தவர் பழனிசாமி தானே. இப்படித் தமிழ்நாட்டை பா.ஜ.க.விடம் அடகு வைத்து பிரதமரின் பாதம் தாங்கிய பழனிசாமி இப்பொழுது பா.ஜ.கவிடம் கூட்டணி இல்லை என்று கூறி இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களின் வாக்குகள் முழுவதும் தி.மு.க கூட்டணிக்கு சென்று விடக்கூடாது என வஞ்சக நோக்கத்துடன் பிதற்றுகிறார். பாஜ.க.வுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ள பழனிசாமியின் செயலை இனியும் தமிழ்நாட்டு மக்கள் நம்புவதற்கு ஏமாளிகள் அல்ல” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.