Skip to main content

நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும்தான்; அவர்களில் ஒருவர்... -ராமதாஸ் உருக்கம்..!

Published on 09/10/2020 | Edited on 09/10/2020
 ramadoss

 

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும் தான். அவர்களில் ஒருவர் பாஸ்வான் ஆவார் என்று கூறியுள்ளார்.

 

இராம்விலாஸ் பாஸ்வான் மறைவு குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சரும், எனது நண்பருமான இராம்விலாஸ் பாஸ்வான் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.

 

இந்திய அரசியலில் நீண்ட அனுபவமும், முதிர்ச்சியும் கொண்டவர். 50 ஆண்டுகளுக்கு முன் இராம் மனோகர் லோகியாவின் சம்யுக்த சோசலிஷக் கட்சியின் சார்பில் 1969-ஆம் ஆண்டில் பிகார் சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்துதான் அவரது அரசியல் பயணம் ஆரம்பமானது. நெருக்கடி நிலை கால ஒடுக்குமுறைகளும், அவற்றை அவர் எதிர்கொண்ட விதமும்தான் பாஸ்வானை தேசியத் தலைவராக மாற்றியது. அப்போதிலிருந்தே இந்திய அரசியலில் மாற்று அணியை அமைப்பதற்காக கடுமையாக உழைத்தவர். அந்த முயற்சியில் பல முறை பாஸ்வான் வெற்றி பெற்றிருக்கிறார்.

 

Ram Vilas Paswan

 

பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தவர். பிகாரில் தாழ்த்தப்பட்ட மக்களின் அடையாளமாக திகழ்ந்தவர். மக்களவைக்கு 8 முறையும், மாநிலங்களவைக்கு  இரு முறையும் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989-ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். 1989-ஆம் ஆண்டில் வி.பி.சிங் தலைமையிலான அரசு அமைவதற்கு முக்கிய காரணமாக விளங்கியவர். சமூகநீதியில் அக்கறை கொண்டவர்.

 

1990-ஆம் ஆண்டில் மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படுவதற்கு காரணமாக இருந்தவர். இட ஒதுக்கீடு குறித்த பேச்சுகளை வி.பி.சிங் சார்பில் பாஸ்வான் தான் முன்னின்று நடத்தினார். 27% இட ஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 19-ஆம் தேதி அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் வீட்டின் முன் எனது தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் இராம்விலாஸ் பாஸ்வானும் கலந்து கொண்டார். 2006 ஆம் ஆண்டு மன்மோகன் சிங் தலைமையிலான அரசில், மத்திய கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு பெறுவதற்கான எனது முயற்சிகளுக்கு இராம் விலாஸ் பாஸ்வான் துணை நின்றார்.

 

தேசிய அரசியலில் எனது நெருங்கிய நண்பர்களில் ஒருவராக பாஸ்வான் திகழ்ந்தார். நான் டெல்லிக்கு சென்றால் தவறாமல் சந்திக்கும் நண்பர்கள் இருவர் மட்டும் தான். அவர்களில் ஒருவர் பாஸ்வான் ஆவார். சென்னையில் 1992-ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நடத்தப்பட்ட தமிழர் வாழ்வுரிமை மாநாடு தொடங்கி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழ்நாட்டிலும், டில்லியிலும் நடத்தப்பட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பாஸ்வான் கலந்து கொண்டிருக்கிறார். கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அவரது உடல்நிலை  குறித்து தொடர்ந்து விசாரித்து வந்தேன். அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்புவார் என்று நான் உறுதியாக நம்பினேன். ஆனால், அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி அதிர்ச்சியை அளிக்கிறது.

 

இராம்விலாஸ் பாஸ்வானை இழந்து வாடும் அவரது புதல்வர் சிராக் பாஸ்வான் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், லோக் ஜனசக்தி கட்சி தொண்டர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வள்ளலார் பன்னாட்டு மையம்; தீர்ப்பு வரும் வரை பணியை நிறுத்த வேண்டும்” - அன்புமணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
TN govt should suspend the construction of  Vallalar International Center till verdict in case

வழக்கில்  தீர்ப்பு வரும் வரை  வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் எனப் பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வடலூர்  சத்தியஞான சபை வளாகத்தில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும்  பெருவெளி பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கட்டுமானங்கள் ஏதேனும் உள்ளனவா?  என்பதைக் கண்டறிய  தொல்லியல் துறையின் 3 வல்லுனர்கள் அடங்கிய குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு ஆணையிட்டுள்ளது.  பெருவெளிப் பகுதியின் புனிதமும்,  தொல்லியல் முக்கியத்துவமும் எந்த வகையிலும் சிதைந்து விடக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள இந்த ஆணை வரவேற்கத்தக்கது.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளலாரின் பெருமை உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்க்கப்பட வேண்டும். அதற்காக  அவருக்கு பன்னாட்டு மையம்  அமைக்கப்பட வேண்டும் என்பதில் யாருக்கும் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. அதிலும் குறிப்பாக ஜோதி தரிசனம்  காண்பதற்காக மட்டும் தான் பெருவெளி பயன்படுத்தப்பட வேண்டும்; அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்பதில் வள்ளலாரே உறுதியாக இருந்தார்.  வள்ளலாரின் விருப்பத்திற்கு மாறாக பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையம் அமைப்பதை மட்டுமே பாட்டாளி மக்கள் கட்சியும் எதிர்க்கிறது. வள்ளலார் பக்தர்களும் எதிர்க்கிறார்கள். இந்த உண்மையை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.

வள்ளலார் பன்னாட்டு மையத்தை வடலூரில் வேறு இடத்திலோ, அருகில் உள்ள  வள்ளலாருடன் தொடர்புடைய இடங்களிலோ அமைப்பதால் எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.  மாறாக, அனைவரும் அதை வரவேற்கத்தான் செய்வார்கள். எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு பிடிவாதம் பிடிக்காமல் வள்ளலார் பக்தர்களின் உணர்வுகளைப் புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

வடலூர் சத்தியஞான சபை வளாகத்தில் தொல்லியல் துறை ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று  சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்ட பிறகும் கூட  வடலூரில் கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவது கண்டிக்கத்தக்கது.  பெருவெளியில்  வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைக்க தடை விதிக்க வேண்டுமெனக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை வள்ளலார் பன்னாட்டு மைய கட்டுமானப் பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

“தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும்” - அன்புமணி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
“Precautionary measures should be taken to prevent bird flu in Tamil Nadu says Anbumani

தமிழ்நாட்டில் பறவைக்காய்ச்சலைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “கேரளத்தில் பறவைக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில்,  தமிழ்நாட்டிற்குள்ளும் பறவைக் காய்ச்சல் பரவி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது.  தமிழ்நாட்டிற்குள் பறவைக் காய்ச்சல் பரவாமல் தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும்  தமிழக அரசின் கால்நடைப் பராமரிப்புத் துறை  மேற்கொள்ள வேண்டும்.

கேரளத்தில் இருந்து தமிழ்நாட்டிற்குள்  வரும் சரக்கு வாகனங்களை சோதனையிட்டு  கிருமி நாசினி தெளிக்கும் பணி நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், அது பெயரளவில் மட்டும் தான் மேற்கொள்ளப்படுவதாகவும், பெரும்பான்மையான வாகனங்கள் மீது கிருமிநாசினி தெளிக்கப்படுவதில்லை என்றும், அதற்குத் தேவையான மனிதவளம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.  அதேபோல், கோவை, தேனி மாவட்டங்களையொட்டிய எல்லைப் பகுதிகளில் இத்தகைய பணிகள் எதுவும்  மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து ஆய்வு செய்து குறைகள் அனைத்தும் களையப்பட வேண்டும்.

பறவைக் காய்ச்சல் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்ள என்னென்ன  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து தமிழ்நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்  என்று வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.