Skip to main content

ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல்! காங்கிரஸின் பொது வேட்பாளர் கான்செப்டை எதிர்க்கட்சிகள் ஏற்குமா?

Published on 11/09/2020 | Edited on 11/09/2020
rrr

 

 

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர் வருகிற 14-ந்தேதி கூடுகிறது. இந்த கூட்டத்தொடர் அதிகபட்சம் 18 நாட்கள் நடக்கும். கடந்த 1 வருடமாக லோக்சபா மற்றும் ராஜ்யசபாவின் துணை சபாநாயகர் பதவி காலியாகவே இருக்கும் நிலையில் அதற்கான தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கையை எழுப்பியபடி இருந்தன. 

 

இந்த நிலையில், ராஜ்யசபா துணை சபாநாயகருக்கான தேர்தலை நடத்த முடிவு செய்து அறிவித்தது மத்திய அரசு. அதனால் கூட்டத்தொடரின் முதல்நாள் இதற்கான தேர்தல் நடக்கவிருக்கிறது. அதற்கான ஏற்படுகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் பாஜக கூட்டணியின் சார்பாக முன்னாள் துணை சபாநாயக பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவருமான ஹரிவன்ஷ் நாராயண்சிங்கை மீண்டும் களத்தில் இறக்கியிருக்கிறார் பிரதமர் மோடி. இவரை எதிர்த்து, எதிர்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்த விரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, திமுகவின் திருச்சி சிவாவை நிறுத்தும் யோசனையை தெரிவித்திருந்தார். 

 

இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பல்வேறு கட்சிகளின் தலைவர்களிடம் பேசினர். திருணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பாணர்ஜியிடம் சோனியாவே பேசினார். ஆனால் காங்கிரஸ் எடுத்த அத்தகைய முயற்சிக்கு எதிர்க்கட்சிகள் சம்மதிக்கவில்லை. இந்த நிலையில், திருச்சி சிவாவுக்கு பதிலாக,  ராஷ்டிரீய ஜனதா தளம் கட்சி எம்.பி. மனோஜ் ஜாவை நிறுத்த காங்கிரஸ் முயற்சி எடுத்துள்ளது. பாஜக சார்பில் நிறுத்தப்படும் ஹரிவன்ஷ் நாராயண் பீகார்காரர் என்பதால், அதே பீகாரை சேர்ந்த மனோஜ்ஜாவை நிறுத்தினால் போட்டி அதிகரிக்கும் என கணக்குப் போட்டுள்ளனர் காங்கிரஸ் தலைவர்கள். ஆனால், காங்கிரஸ் எடுக்கும் இந்த முயற்சிக்கும் இன்று காலை வரை எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்கவில்லை.

 

இதனால், பாஜகவுக்கு எதிராக பொது வேட்பாளர் என்கிற காங்கிரசின் கான்செப்ட்  முழு வடிவம் பெறுமா, பெறாதா என்கிற கேள்வியால் ராஜ்யசபா துணைத்தலைவர் தேர்தல் பரபரப்பாகி வருகிறது. இந்த நிலையில், பாஜக எம்.பி.க்கள் அனைவரும் முதல்நாள் அவசியம் சபையில் இருக்க வேண்டும் என அக்கட்சியின் கொறடா பாஜக எம்.பி.க்களுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.  

 

ராஜ்யசபாவுக்கான துணை தலைவர் தேர்தல் பரபரப்பு இப்படி இருக்கும் நிலையில், லோக்சபாவுக்கான துணை தலைவர் தேர்தலை எப்போது நடத்துவீர்கள் என்கிற கேள்வியும் டெல்லியில் எதிரொலிக்கிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள லோக்சபா தலைவர் ஓம்பிர்லா, “கொரோனா நெருக்கடியில் கூட்டத்தொடரை நடத்துவதே பெரிய சவாலான விஷயம். அதேசமயம், லோக்சபாவுக்கான துணை சபாநாயகரை தேர்வு செய்வதில் அரசுதான் முடிவு செய்யும்” என்கிறார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓய்ந்தது பிரச்சாரம்; முடிவுக்கு வரும் தொழிலாளர் தட்டுப்பாடு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்தது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கிய நிலையில் இன்று மாலை 6 மணியோடு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவை தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டம் பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வாழை மஞ்சள் மற்றும் மல்லி, முல்லை, சம்பங்கி உள்ளிட்ட பூ வகைகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயக் கூலி வேலைக்கு மக்கள் அதிகம் சென்று வருகின்றனர். முன்னதாக பாராளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் களைகட்டிய நிலையில் கட்சினர் தங்கள் பலத்தைக் காட்ட கூட்டத்தைத் திரட்டினர். இதனால் பவானிசாகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கூலி ஆட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. விவசாயக் கூலி வேலைக்கு செல்வோருக்கு தினக்கூலியாக ரூ.200 முதல் ரூ.350 வரை சம்பளம் வழங்கப்படுகிறது.

காலையில் சென்று மாலை வரை வேலை செய்ய வேண்டும். ஆனால் தேர்தல் பிரசாரத்துக்கு காலையில் இரண்டு மணி நேரம் மாலையில் 2 மணி நேரம் சென்றால் போதுமானது. தினக்கூலியாக 300 ரூபாய் வரை கிடைக்கிறது. இதுபோக சிக்கன், மட்டன் பிரியாணி கிடைக்கிறது. குடிமகன்களுக்கு மதுவும் வாங்கி தரப்படுகிறது. இதனால் விவசாய கூலி தொழிலாளர் தேர்தல் பிரசாரத்திற்கு செல்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதன் காரணமாக பவானிசாகர் கிராமப் பகுதிகளில் கூலித் தொழிலாளர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. இன்றுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெற்றதால் வரும் நாட்களில் தொழிலாளர் தட்டுப்பாடு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story

வாக்குப்பதிவு நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை; மறுக்கப்பட்டால் புகார் தெரிவிக்கலாம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Holiday with pay on polling day; Complaint can be filed if denied

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. தமிழகத்தில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்கள் சூடு பறக்க நடத்தினர்.

இன்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கியது. திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்  பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னயிலும், விசிகவின் தொல்.திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அனல் பறந்த பிரச்சாரம் ஓய்ந்தது. நாளை மறுநாள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில் ஈரோடு தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, 'தமிழ்நாட்டில் வரும் 19ஆம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தேர்தல் நாளன்று தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள், கட்டுமான பணியிடங்கள் மற்றும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் தினக்கூலி தொழிலாளர்கள், தற்காலிக தொழிலாளர்கள், ஒப்பந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து தொழிலாளர்களும் தங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றும் பொருட்டு தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ஒரு நாள் ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்கப்பட வேண்டும். மேலும் வெளிமாநில தொழிலாளர்களைப் பொறுத்தவரை அவரவர் சொந்த மாநிலங்களில் தேர்தல் நடக்கும் நாளன்று தேர்தலில் வாக்களிக்க ஏதுவாக அந்தந்த மாநிலங்களுக்கு முன்கூட்டியே செல்ல தொழிற்சாலை நிர்வாகம், செங்கல் சூளை நிர்வாகம் மற்றும் கட்டுமான நிறுவனங்களில் வேலை அளிப்பவர்கள் முழுமையான வாக்குப்பதிவை உறுதி செய்யும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு தேர்தல் நாளன்று ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்காத நிர்வாகங்கள் தொடர்பான புகார்களைத் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குநர், ஈரோடு வினோத்குமார் செல் - 9994380605, 0424 - 22195 21, மற்றும் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஈரோடு இணை இயக்குநர் சிவகார்த்திகேயன் செல்- 9865072749, 0424-2211780 ஆகிய எண்களில் புகார் தெரிவிக்கலாம்' இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.