
தமிழ்நாட்டில் 6 நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 24ஆம் தேதியுடன் முடிவடைய உள்ளது. அந்த வகையில் அன்புமணி ராமதாஸ், மு. சண்முகம், என். சந்திரசேகரன், எம். முகமது அப்துல்லா, பி. வில்சன் மற்றும் வைகோ ஆகிய 6 பேரின் பதவிக் காலங்கள் முடிவடைய உள்ளன. இத்தகைய சூழலில் தான் இந்த காலி பதவியிடங்களுக்கான தேர்தல் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி, தேர்தலுக்கான அறிவிப்பு ஜூன் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி தேதி ஜூன் 09ஆம் தேதி ஆகும். தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 10ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுக்களை வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் ஜூன் 12ஆம் தேதி ஆகும். வாக்கெடுப்பு ஜூன் 19ஆம் தேதி காலை 09:00 முதல் மாலை 04:00 மணி வரை நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 19ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது.
இந்நிலையில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 ஜூன் 19 அன்று நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிடும் 4 இடங்களில், 3 இடங்களுக்கு தி.மு.க. வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு ஏற்கெனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. எனவே தி.மு.க. வேட்பாளர்களாக பி.வில்சன்,எஸ்.ஆர். சிவலிங்கம், மற்றும் ரொக்கையா மாலிக் (என்கிற) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்படுள்ளது.
வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சல்மா என்கிற ரொக்கையா மாலிக், எளிய இசுலாமிய குடும்பத்தில் இருந்து வந்த பெண்மணி ஆவார். திருச்சி மாவட்டம் பொன்னாம்பட்டி பேரூராட்சித் தலைவராக பணியாற்றிய சல்மா, 2006இல் மருங்காபுரி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். தமிழ்நாடு சமூக நல வாரியத்தலைவராக பணியாற்றியுள்ளார். கவிதை, நாவல் என பல்வேறு தளங்களில் செயல்பட்டு வரும் சல்மாவின் படைப்புகள் அர்மீனியன் உள்ளிட்ட பல்வேறு உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. நீண்டகாலமாக திமுகவில் பணியாற்றி வருகிறார்.
வில்சன் மூத்த வழக்கறிஞர் ஆவார். இந்தியாவின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனராலகவும், தமிழ்நாடு மாநிலத்தின் கூடுதல் அட்வகேட் ஜெனராலாகவும் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நினைவிடத்தை மெரினாவில் அமைக்க சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 2019 முதல் திமுகவின் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
எஸ்.ஆர். சிவலிங்கம் திமுகவின் நீண்டகால களப்பணியாளர். ஆவார். எஸ்.ஆர். சிவலிங்கம் திமுகவின் சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளார். எஸ்.ஆர். சிவலிங்கம் 1989 மற்றும் 1996 ஆண்டுகளில் சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியுள்ளார். இதன் மூலம் கிறித்துவர், இசுலாமியர், பெண் என வெவ்வேறு சமூகத்திலிருந்து வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. கவிஞர் - எழுத்தாளர், மூத்த வழக்கறிஞர், நீண்டகால கட்சிக்காரர் என்ற வகையிலும் பட்டியல் கலந்து தயாரிக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுவார் என்று கருதப்பட்டது குறிப்பிடத்தக்கது.