ADVERTISEMENT

தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல நம்ப வைக்கிறார்கள்... ஈ.ஆர்.ஈஸ்வரன் அதிரடி

11:49 AM Nov 18, 2019 | rajavel

ADVERTISEMENT

ரஜினியை சுற்றி இருக்கின்ற 10 பேர் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

எடப்பாடி பழனிசாமி அதிசயம் நடந்து முதல்வரானதை போல தானும் முதல்வர் ஆவேன் என்ற ரஜினியின் கருத்து அறியாமையின் அல்லது ஆணவத்தின் வெளிப்பாடு. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் கனவிலும் முதல்வராக நினைக்கவில்லை என்று ரஜினிகாந்த் தன்னுடைய பேச்சில் சொல்லியிருக்கிறார். எதிர்பார்க்காமல் நடப்பதுதான் அதிசயம். ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தான் முதல்வர் ஆவேன் என்ற எதிர்பார்ப்போடு நடக்குமென்று நினைப்பது அதிசயம் ஆகாது.



முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் திடீரென்று கிராமத்திலிருந்து அழைத்துவரப்பட்டு முதலமைச்சர் ஆக்கப்பட்டவர் அல்ல. அந்த இயக்கத்தின் கிளை செயலாளராக, ஒன்றிய செயலாளராக, மாவட்ட செயலாளராக, சட்டமன்ற உறுப்பினராக, பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக இருந்து ஜெயலலிதாவிற்கு பிறகு அங்கு வெற்றிடம் ஏற்பட்ட போது முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்.


அவரோடு ரஜினிகாந்த் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளக்கூடாது. சில அறிவு ஜீவிகள் எம்ஜிஆரோடு ரஜினியை ஒப்பிட்டுப் பேசுகிறார்கள். எம்ஜிஆர் முதலமைச்சர் ஆவதற்கு முன்பு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய வெற்றிக்கு காரணமாக இருந்தவர். அந்த கட்சியின் பொருளாளராக இருந்தவர். நடிப்பு ஒன்றால் மட்டுமே எம்ஜிஆர் முதலமைச்சரானவர் அல்ல. இப்படி எல்லாம் ஒப்பிட்டுக் கொண்டு ரஜினி தானும் முதல்வர் ஆவேன் என்று நினைத்தால் தனக்குத்தானே சூடு போட்டுக்கொள்வார்.


2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு அன்றைய பிரதம வேட்பாளர் மோடி அவர்கள் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்த பிறகு ரஜினி ரசிகர்கள் ஆங்காங்கே மோடிக்கு ஆதரவாக பணியாற்ற வந்தார்கள். எந்தளவுக்கு அரசியல் ரீதியாக ஆதரவு இருந்தது என்பது அன்றைய தேர்தலில் பார்த்தவர்களுக்கு தெரிந்திருக்கும். ரஜினியை சுற்றி இருக்கின்ற 10 பேர் தங்கள் சுயலாபத்திற்காக தமிழகமே ரஜினி பின்னால் நிற்பது போல ரஜினியை நம்ப வைக்கிறார்கள். அதனுடைய வெளிப்பாடு தான் ரஜினியின் இந்த பேச்சு. அவருடைய இலக்கு எம்ஜிஆருடைய ஓட்டுக்களை பிரிப்பது. இரட்டை இலைக்கு விழுகின்ற வாக்குகளை ஒரு குறிப்பிட்ட சதவீதம் அவர் பிரிக்கலாம். தமிழக மக்கள் விழிப்புணர்வோடு ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நேரம் இது. இவ்வாறு கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT