Skip to main content

கரோனாவால் வாழ்விழந்த மக்களுக்குக் கைகொடுப்போம் -ரஜினி மக்கள் மன்றத்தினரின் உதவி விழா!

Published on 15/06/2020 | Edited on 15/06/2020

 

RAJINI MAKKAL MANDRAM


கரோனாவால் நாடு முழுவதும் அடிதட்டு மக்களும், நடுத்தர மக்களும் பெருமளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்ற நிலை தொடர்கிறது. ஊரடங்கு காலத்தில் தி.மு.க. மற்றும் பல தன்னார்வ அமைப்புகள், பொருளாதார வசதியில்லாத ஏழைமக்கள், கூலித் தொழிலாளர்கள் என பலதரப்பினர்களுக்கும் உயிர் வாழ அத்தியாவசியத் தேவைக்காக உணவிற்காக, அரிசி, காய்கறி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கியது. கடந்த 65 நாட்களாகச் செய்தவர்கள், ஊரடங்கில் பல தளர்வுகள் செய்யப்பட்டதும் உதவிகள் செய்வதைப் படிப்படியாகக் குறைத்துக்கொண்டனர்.
 


ஊரடங்கு பெருமளவில் விலக்கப்பட்டாலும் விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் போன்றவற்றால் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்கள் வருமானமின்றி வாங்கும் சக்தியின் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனைக் கவனத்தில் கொண்டு ரஜினி மக்கள் மன்றம் களத்தில் இறங்கியுள்ளது.

கரோனா பாதிப்பிலிருந்து மீள இயல்பு நிலையைத் தொடர சில மாதங்களாகும், அதுவரை அவர்கள் பசியில்லாமல் இருக்க வேண்டும் என்பதற்காக தற்போது நிவாரணப் பொருட்கள் வழங்க தொடங்கியுள்ளனர். அதன்படி ரஜினி மக்கள் மன்றத்தின் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டச் செயலாளராகவுள்ள சோளிங்கர் ரவி, சோளிங்கர் மற்றும் அதனை சுற்றியுள்ள ஏழை, எளிய, கூலித் தொழிலாளர் மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களான அரிசி, மளிகை மற்றும் காய்கறி தொகுப்பினை கடந்த ஜீன் 14 ஆம் தேதி வழங்கினார்.

இதில் தனியார் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான முறையில் ஏற்பாடுகள் செய்து ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள், முடித் திருத்தும் தொழிலாளர்கள், நாதஸ்வரம், தவில் கலைஞர்கள், கிராமிய நாடக கலைஞர்கள், சலவைத் தொழிலாளர்கள், லட்சுமி நரசிம்மர் திருக்கோயில் டோலி தொழிலாளர்கள், மருத்துவ சுகாதார பணியாளர்கள் என மொத்தம் 550 பேருக்கு அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை சோளிங்கர் வட்டாட்சியர் பாஸ்கர், சோளிங்கர் காவல் ஆய்வாளர் வெங்கடேஷ், சோளிங்கர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் இளங்கோவன், சோளிங்கர் தேர்வுநிலை பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வடிவேல் போன்றோர் சிறப்பு விருந்தினராகச் சென்று ஏழை மக்களுக்குப் பொருட்களை வழங்கினர்.
 

 


நிகழ்ச்சியில் பேசிய மாவட்டச் செயலாளர் சோளிங்கர் இரவி, இப்போது இங்கே நான் உங்கள் முன் நிற்பதற்குத் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் தான் காரணம். ஏனென்றால் இந்தக் கொடிய கரோனா பரவாமல் இருக்க அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்துத் தரப்பினரும் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டு விட்டனர். இந்நிலையில் மக்கள் தலைவர் வழிகாட்டுதல் படி தமிழகமெங்கும் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட செயலாளர்களும், மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை மக்களுக்குச் செய்து வருகின்றனர். அது போலவே ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம் முழுவதும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர நிர்வாகிகள் மூலம் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர். 
 

RAJINI MAKKAL MANDRAM


இந்நிலையில் நான் மட்டும் தாமதமாக நற்பணிகள் மேற்கொள்வதற்குக் காரணம் சிறு வியாபாரியாக இருந்தாலும், உங்களை போலவே நானும் இந்த ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டேன். அதன் வலியையும் உணர்ந்தேன், இந்நேரத்தில் நமக்கே இப்படி இருக்கிறதென்றால் தினக் கூலி வேலை செய்யும் அடித்தட்டு மக்களின் நிலை எண்ணி பலமுறை அழுதும் இருக்கின்றேன். நான் கொடுக்கும் இந்த உதவி பெரிதல்ல இருப்பினும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக ஒரு வேளைக்காவது எனது பங்களிப்பு இருக்க வேண்டும் என்று தான் இப்போது உதவிகள் செய்ய களம்மிறங்கியுள்ளேன். நான் பணம், பொருள் என எதையும் சேர்த்து வைக்கவில்லை என்றாலும் என் தலைவரின் ஆசீர்வாதமும், உங்களின் அன்பையும் சம்பாதித்து வைத்துள்ளேன், அது போதும் எனக்கு. 

எந்தவொரு சோதனையும் நிரந்தரமல்ல, இந்த கரோனா நோய்ச் சோதனை நிரந்தரமானதல்ல, மருத்துவர்கள் வெகுவேகமாக இதற்கான மருந்தை கண்டுபிடிபிடித்துவிடுவார்கள். அப்போது நாம் இப்போது அனுபவிக்கும் இந்தத் துன்ப நிலையும் கடந்து போகும். இப்போது வாழ்விழந்து போய்வுள்ள மக்களுக்கு நாம் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும், அதில் ஒரு கை ரஜினி மக்கள் மன்றத்தின் கைகளாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முயற்சிகளைச் செய்துள்ளோம். கிராமங்களில் உள்ள ஏழைமக்களுக்கு எங்கள் மன்ற நிர்வாகிகள் நேரடியாகச் சென்று உதவிப் பொருட்களை வழங்குவது போல் ஏற்பாடு செய்துள்ளோம். தயவுசெய்து சொல்கிறேன் மக்கள் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் சொல்வது போல ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு. அதனால வீட்டை விட்டு வெளியே வரும் போது முகக் கவசம் அணிந்து கொண்டும், சமூக இடைவெளியுடனும் இருங்கள், அடிக்கடி கைகளைச் சுத்தமாகச் சோப்புப் போட்டு கழுவி நம் சுற்றுபுறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும் என்றார்.
 

http://onelink.to/nknapp


நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் தெர்மோமீட்டர் மூலம் வெப்பப் பரிசோதனை செய்து, கைகளில் சானிடைசர் தெளிக்கப்பட்டு, முகக் கவசம் அணிய வைத்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நிகழ்ச்சி நடைபெற்றது. சோளிங்கர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 ஆயிரம் குடும்பங்களுக்கு உதவி பொருட்கள் வழங்க முடிவு செய்துள்ளனர். அதன்படி முதல் கட்டமாக 2,600 குடும்பங்களுக்கு 5 கிலோ அரிசி, மளிகை மற்றும் காய்கறிகள் அடங்கிய தொகுப்பினை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தரத்துவங்கியுள்ளனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

'காமராஜருக்கு நடந்த நிகழ்வு எனக்கும் நடந்தது'- பரப்புரையில் முதல்வர் சொன்ன சுவாரஸ்யம்

Published on 02/04/2024 | Edited on 02/04/2024
'What happened to Kamaraj also happened to me' - the chief minister said interestingly in the lobby


நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் திமுக சார்பில் வேலூரில் போட்டியிடும் கதிர் ஆனந்த், அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஆகியோரை ஆதரித்து கோட்டை மைதானம் பகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை செய்து வருகிறார்.

பரப்புரை கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ''இந்தியா கூட்டணிக்கு நீங்கள் அளிக்கின்ற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டை மேலும் வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்லும். தேர்தல் சீசனுக்கு மட்டுமே பிரதமர் தமிழகத்திற்கு வருகிறார். வெள்ள நிவாரணம் கேட்டால் தரமாட்டார். தமிழ்நாட்டை வெறுக்கின்ற பிரதமர் மோடிக்கு பதிலாக இந்தியா கூட்டணியின் சார்பில் பிரதமராக போகிறவர் நிச்சயமாக இந்திய ஜனநாயகத்தின் மேல் உண்மையான மதிப்பும், இந்திய மக்கள் மீது உண்மையான பாசமும், அரசியல் சட்டத்தை மதிக்கின்ற பண்பும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக நிற்பவருமாக இருப்பார்.

இன்று காலையில் நான் பெருமை கொள்ளக்கூடிய ஒரு செய்தியை சமூக வலைத்தளத்தில் பார்த்தேன். நம்முடைய திட்டங்கள் இந்தியாவிற்கு மட்டுமல்ல உலகத்திற்கே முன்னோடியாக இருக்கிறது. இன்று கனடா நாட்டில் காலை உணவு திட்டம் கொண்டு வந்திருக்கிறார்கள். இந்த திட்டம் எப்படி உருப்பெற்றது. பெருந்தலைவர் காமராஜர் மத்திய உணவு திட்டம் கொண்டு வந்ததற்கு காரணமாக ஒரு சம்பவத்தை சொல்லுவார்கள். பெருந்தலைவர் காரில் போய்க் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரை சந்தித்தாராம். அங்கு காரை நிறுத்தி அவர்களை பக்கத்தில் வரச் சொல்லி 'இன்று பள்ளிக்கு போகவில்லையா?' என்று கேட்டார். அந்த பிள்ளைகள் 'எங்கள் குடும்பத்தில் உணவுக்கே வழி இல்லாததால் எங்க அப்பா அம்மா பள்ளிக்கு அனுப்பவில்லை' என்று சொல்லவும் பள்ளியில் மதிய உணவு போட்டால் அதற்காகவாவது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவார்கள் என சிந்தித்து யோசித்து காமராஜர் மதிய உணவு திட்டத்தை தொடங்கினார்.

எனக்கும் அதே மாதிரி ஒரு நிகழ்வு நடந்தது. நான் முதலமைச்சரானவுடன் சென்னையில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு போயிருந்தேன். ஒரு குழந்தையை பார்த்து 'என்னம்மா சாப்பிட்டீங்களா' என்று எதார்த்தமா கேட்டேன். அந்த குழந்தை 'வீட்டில் அப்பா அம்மா வேலைக்கு போறாங்க, காலையில உணவு செய்ய மாட்டாங்க அதனால் சாப்பிடவில்லை' என்று சொன்னதும் எனக்கு மனசே சரியில்லை.

கோட்டைக்கு போனவுடனே அதிகாரிகளை அழைத்தேன். பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டம் கொண்டு வரணும் திட்டத்தை தயார் பண்ணுங்கள் என்று சொன்னேன். அதிகாரிகள் என்னிடம் ரொம்ப பணிவாக சார்  நம்ம நிதிநிலை ரொம்ப மோசமா இருக்கு. அதோடு இல்லாமல் தேர்தல் அறிக்கையில் கூட நாம் இதை சொல்லவில்லை என்று சொன்னார்கள். உடனே நான் சொன்னேன், 'வாக்குறுதி கொடுக்கவில்லை என்றால் என்ன நம் எதிர்கால தலைமுறை குழந்தைகள் தான். அவர்கள் காலையில் நன்றாக சாப்பிட வேண்டும். அப்பொழுதுதான் அவர்கள் படிப்பது மனதில் மனதில் பதியும். இதை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும். நிதி நிலையை சரி செய்யவும் திட்டம் போடுவோம். நீங்க ஃபைலை தயார் பண்ணுங்கள்' என்று சொன்னேன். அந்த ஃபைலில் கையெழுத்து போட்ட கை தான் இந்த ஸ்டாலின் கை''என்றார்.

Next Story

ஏரியில் குளிக்க முயன்ற 4 பெண்கள் உயிரிழப்பு

Published on 31/03/2024 | Edited on 31/03/2024
4 women lose their live while trying to bathe in the lake

கோவிலுக்குச் சென்ற நான்கு பெண்கள் ஏரியில் குளிக்கும் முற்பட்ட போது நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் வேலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ள தங்கம் நகர் பகுதியைச் சேர்ந்த சரோஜா என்பவர் அவருடைய மகள் லலிதா மற்றும் கல்லூரி மாணவி காவியா அவருடைய தங்கை ப்ரீத்தா ஆகியாருடன் சேர்ந்து வேப்பூர் பகுதியில் உள்ள முனீஸ்வரன் கோவிலுக்கு சென்றுள்ளனர். கோவிலுக்கு சென்று வழிபாட்டை முடித்த அவர்கள் கோவிலுக்கு அருகிலேயே உள்ள வேப்பூர் ஏரியை சுற்றி பார்த்துள்ளனர்.

பின்னர் குளிப்பதற்காக ஏரியில் நான்கு பேரும் இறங்கியுள்ளனர். அப்பொழுது நால்வரில் ஒருவர் ஆழமான பகுதிக்கு சென்று விட, அவரை மீட்க மற்ற மூன்று பேரும் முயன்றுள்ளனர். இதில் நான்கு பேரும் தண்ணீரில் தத்தளித்துள்ளனர். நீரில் சிலர் தத்தளிப்பது அந்த பகுதி மக்களுக்கு தெரிய வர, உடனடியாக குடியாத்தம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் அதற்குள் நால்வரும் உயிரிழந்தனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்புத் துறையினர் சரோஜா, லலிதா, காவியா, பிரீத்தா ஆகிய நான்கு பேரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.