Skip to main content

"அன்பானவர் எடப்பாடி! காரமானவர் ஸ்டாலின்! கொள்ளைக்கூட்டம் நடத்துபவர் தினகரன்!” -கே.டி.ராஜேந்திரபாலாஜி வாய்ஸ்!

Published on 18/04/2019 | Edited on 18/04/2019

சிவகாசியை அடுத்துள்ள திருத்தங்கல் பள்ளி ஒன்றில் தனது வாக்கைப் பதிவு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி..

“அதிமுக அலை வீசுகிறது. மக்கள் ஆதரவு பெருகிவருகிறது. எளிமையான, வலிமையான முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி சிறப்பாக இருக்கிறது. நேரடியாகவே முதலமைச்சரை சந்தித்துக் குறைகளைச் சொல்ல முடியும் என்பதால், அவர் தலைமையில் ஆட்சி தொடரவேண்டும் என்று 8 கோடி தமிழ் மக்களும் விரும்புகிறார்கள். 

 

rajendra balaji speech after casting his vote

 

தமிழகத்தில் பணப்புழக்கம் அதிகமாக இருக்கிறது என்று சொன்னால், பொருளாதாரத்தில் உயர்ந்திருக்கிறது என்று அர்த்தம். கள்ளப்பணத்தை ஓட்டுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது அமமுகதான். அவர்கள் வைத்திருந்த பணத்தை வருமானவரித்துறை பறிமுதல் செய்திருக்கிறது. ஆண்டிபட்டி தொகுதியில் கைப்பற்றப்பட்ட பணம் எங்களுடையது அல்ல என்று சொல்கிறார் தங்கத்தமிழ்ச்செல்வன். அவர்களில் அலுவலகத்துக்குள் போய் அதிமுககாரன் பணம் வைக்க முடியுமா? கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்வதற்கு அமமுககாரர்கள் மாதிரி ஆட்கள் இந்த உலகத்திலேயே இல்லை. ஆளும் கட்சியாக யார் இருந்தாலும், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் சொல்லக்கூடிய வாடிக்கையான குற்றச்சாட்டுதான்.  தேர்தல் ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது எனச்சொல்வது ஒன்றும் புதிதல்ல. மக்கள் எதிர்ப்பு திமுக மீதும் தினகரன் மீதும் இருக்கிறது. நாட்டைக் கொள்ளையடிப்பதற்காகத்தான் தினகரன் ஒரு கூட்டத்தை உருவாக்கியிருக்கிறார். 

ஸ்டாலின் அடித்தது போதாது என்று ஊரையடித்து உலையில் போடணும்னு வெறிபிடித்து அலைகிறார். இதை மக்கள் புரிந்துகொண்டார்கள். தமிழகம் முழுவதும் எடப்பாடி பிரச்சாரம் செய்தபோது, அவர் முகத்தில் எங்கேயாவது யாரையாவது முகம் சுழித்துப் பேசினாரா? அவர் முகத்தில் கோபக்குறி இருந்ததா? அன்பா பேசினார்; பண்பா பேசினார். ஸ்டாலின் பேச்சு எப்படி இருந்தது? காரம் இருந்தது. கொடூரம் இருந்தது. அவருடைய குணாதிசயம் முழுமையாக வெளிப்பட்டது. எப்படியாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற வெறித்தனம் தெரிந்தது. ஆட்சியைப் பிடிப்பேன்; ஆட்சியைக் கவிழ்ப்பேன். மத்தியில் கவிழ்ப்பேன்; இங்கேயும் கவிழ்ப்பேன் என்ற வெறித்தனமாகத்தான் பேசினார். மக்கள் மீது பாசமோ, மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணமோ, ஸ்டாலினுடைய பேச்சிலோ, நடைமுறையிலோ தெரியவில்லை. அதனால்தான், தமிழகத்தில் அதிமுக அலை வீசுகிறது.” என்றார். 

அமைச்சர் அவர் சார்ந்துள்ள கட்சிக்கு அலை வீசுவதாகச் சொல்கிறார். அது ஆதரவு அலையா? எதிர்ப்பு அலையா? என்பதை வாக்களித்துவரும் மக்கள் தீர்மானிப்பார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பட்டியல் இனத்தவர், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு... புதிய மசோதாவை நிறைவேற்றிய மத்திய அரசு...

Published on 11/12/2019 | Edited on 11/12/2019

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் மற்றும் ஆங்கிலோ இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகை செய்யும் வகையில், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் இந்த மூன்று பிரிவினருக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டது.

 

political reservation for scheduled caste extended

 

 

70 ஆண்டுகளுக்கு இந்த இடஒதுக்கீடு தொடரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அடுத்த ஆண்டு ஜனவரி 25-ந் தேதியுடன் இந்த இடஒதுக்கீடு முடிவடைகிறது. இதனையடுத்து நேற்று நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது, அதன்படி நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டசபைகளில் பட்டியல் இனத்தவர், பழங்குடியினர் ஆகியோருக்கான இடஒதுக்கீடு அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் ஆங்கிலோ இந்தியன் பிரிவினருக்கான இடஒதுக்கீடு நீடிக்கப்படவில்லை.

இந்த இடஒதுக்கீட்டு மசோதாவில் ஆங்கிலோ இந்தியன் பிரிவை மட்டும் தவிர்த்ததற்காக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது இதுகுறித்து பேசிய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், "தற்போதைய நிலையில், நாடு முழுவதும் 296 ஆங்கிலோ இந்தியன் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். நாடாளுமன்றத்தில் 84 பட்டியல் இன உறுப்பினர்களும், 47 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். மாநில சட்டசபைகளில் 614 பட்டியல் இன உறுப்பினர்களும், 554 பழங்குடியின உறுப்பினர்களும் உள்ளனர். கடந்த 70 ஆண்டுகளில், மேற்கண்ட இரண்டு இனத்தினரும் கணிசமான முன்னேற்றம் அடைந்துள்ளனர்.

இருப்பினும் என்ன காரணத்துக்காக, இவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதோ, அந்த காரணங்கள் அப்படியே இருக்கின்றன. அவர்களுக்கு இன்னும் இடஒதுக்கீடு தேவைப்படுகிறது. எனவே இவர்களுக்கு இடஒதுக்கீட்டை மேலும் 10 ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2030-ம் ஆண்டு ஜனவரி 25-ந் தேதிவரை இடஒதுக்கீடு நீடிக்கும்" என தெரிவித்தார். பின்னர் நடந்த இந்த மசோதா மீதான வாக்கெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 352 பேரும் வாக்களித்தனர். யாருமே எதிர்த்து வாக்களிக்கவில்லை. இதனையடுத்து மசோதா நிறைவேறியது.

 

 

Next Story

வேலூரில் கூட்டணி கட்சியின் ஓட்டுகள் சிதறியதால் வெற்றி யாருக்கு? அதிர்ச்சி ரிப்போர்ட்!

Published on 08/08/2019 | Edited on 08/08/2019

கடந்த 15 நாட்களாக பரபரப்பாக இருந்த வேலூர் நாடாளுமன்றத் தொகுதியின் ஓட்டுப்பதிவு ஆகஸ்ட் 5-ந் தேதி காலை 7 மணிக்கு படுமந்தமாகவே தொடங்கியது. தொகுதியில் 14,32,099 வாக்குகள் உள்ளன. இதற்காக 1,553 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு வாக்குப்பதிவு நடை பெற்றது. இதில் 850 மையங்கள் பதட்டமானவை என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவித்தார். ஆளும்கட்சி தனது அதிகாரத்தை பயன்படுத்தி வாக்குச்சாவடி மையங்களை கைப்பற்ற முயலும் என தி.மு.க. தரப்புக்கு வந்த தகவலைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை குழு தி.மு.க. தலைவர் டி.ஆர்.பாலு எம்.பி. அனைத்து வாக்குச்சாவடிகளையும பதட்டமானவை என அறிவிக்க வேண்டும் என மனு தந்ததால் அனைத்து சாவடிகளுக்கும் பாதுகாப்பு பலமாக போடப்பட்டது.
 

dmk



வாக்குப்பதிவன்று தொகுதியை வலம்வந்தபோது, காலை 10 மணி நிலவரப்படி 7 சதவிகிதம் தான் வாக்குப்பதிவு நடை பெற்றிருந்தது. இதுபற்றி மையத்துக்கு வெளியே அமர்ந் திருந்த அ.தி.மு.க. கட்சி நிர்வாகிகளிடம் கேட்டபோது, ""இந்த ஒற்றைத் தொகுதி தேர்தல் இடைத்தேர்தல் போல் நடைபெற்றதால் மக்களுக்கும் கட்சியினருக்கும் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்பு சப்பென போய்விட்டது. நாங்கள் 300 ரூபாய் தந்தோம், தி.மு.க. 200 ரூபாய் தந்தது. இந்தப் பணத்தை தந்தபோது மக்கள் சந்தேகத்தோடு பார்த்தார்கள். இதுதான் என உறுதியாக தெரிந்தபின் சோர்ந்துவிட்டார்கள். இதனால்தான் நாங்களும் வீடு வீடாகப் போய் ஓட்டுப்போட வா என அழைத்து வரவில்லை'' என்றார்கள்.

 

vellore



வாக்குப்பதிவன்று பூத் செலவுக்கு ஒரு பூத்துக்கு தி.மு.க. 15 ஆயிரமும், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் 25 ஆயிரமும் தந்து ஊக்கப்படுத்தினர். இன்னும் கூடுதலாக தருவார்கள் என எதிர்பார்த்த பூத் கமிட்டி நிர்வாகிகள் நொந்துபோய் விட்டனர். இதேபோல் பூத்துக்கு வெளியே தி.மு.க.வும், அ.தி.மு.க.வும்தான் களத் தில் நின்றன. தி.மு.க.வோடு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரிகள், வி.சி.க. நிர்வாகிகள் யாரும் கண்ணில்கூட தென்படவில்லை. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க., தே.மு.தி.க. போன்ற கட்சிகளைத் தேடியும் கிடைக்கவில்லை. தொகுதியில் உள்ள பா.ம.க. வாக்குகளை, தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வளைத்து விட்டார், அதேபோல் தலித் ஓட்டுக்களை ஏ.சி.சண்முகம் வளைத்துவிட்டார் என்கிறார்கள் களத்தில் உள்ள கட்சியினரே.

 

dmk



இந்த தொகுதியில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த், அ.தி.மு.க. சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம் இருவரும் இந்த தேர்தலில் வாக்களிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. அதற்குக் காரணம், தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த்தின் ஓட்டு, காட்பாடி காந்திநகர் முகவரியில் உள்ளது. அது வேலூர் மாநகராட்சி பகுதியாக இருந்தாலும், காட்பாடி சட்ட மன்றத் தொகுதிக்குள் -அதாவது அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. அதேபோல் ஏ.சி.சண்முகத்தின் ஓட்டு, ஆரணி நாடாளுமன்றத் தொகுதிக்குள் வருகிறது. இத னால் இருவராலும் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் மட்டுமல்ல சில சுயேட்சை வேட்பாளர்கள், பதிவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும் வாக்களிக்க முடியவில்லை. இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையே, குடியாத்தம் நகரில் காந்திநகர் பகுதி மக்களுக்காக அங்குள்ள அரசுப் பள்ளியில் வாக்குப்பதிவு மையம் பதட்டமான சாவடி என்பதால் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. வாக்குச்சாவடி மையத்துக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வந்த நிலையில், அந்த அறையை திறக்க வந்த அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம், அறையின் பூட்டை உடைத்து பள்ளியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமராக்கள் திருடப்பட்டிருந்தன. மேலும் அங்கிருந்த 10 கணினிகள் மற்றும் ஒரு ஜெராக்ஸ் இயந்திரமும் திருட்டுப் போயிருந்தது. சி.சி.டி.வி. கேமராக்கள், கணினிகளை திருடிச்சென்ற நபர்கள் குறித்து புகார் தரப்பட்டது.

மதியம் 12 மணி நிலவரப்படி, அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் வாக்குப் பதிவின் சதவிகிதம் மந்தமாக இருந்ததால், தொகுதியின் எம்.எல்.ஏ. நந்தகுமார் களத்தில் இறங்கி, இறுதியில் 62% வாக்குப் பதிவாகும்படி பார்த்துக் கொண்டார். இதே போல்தான் ஆம்பூர் தொகுதியில் எ.வ.வேலுவின் ஆட்கள் சுறுசுறுப்பு காட்டியதால் வாக்குப் பதிவின் சதவிகிதம் அதிகரித்தது. ஆனால் அமைச்சர் நிலோபர் கபிலின் தொகுதியான வாணியம்பாடியில் கடைசி வரை 52% இருந்ததைப் பார்த்து அ.தி.மு.க.வினரே அதிர்ச்சியாகிவிட்டனர்.

இறுதிக்கட்ட நிலவரமாக வேலூர் எம்.பி. தொகுதியில் 72% வாக்குகள் பதிவாகியிருந்தன. முஸ்லிம் சமுதாய வாக்குகள் அதே அளவில் பதிவானாலும் அச்சமுதாயத்தின் பெண்கள் வாக்காளர்களின் வாக்குகள் அவ்வளவாக பதிவாகவில்லை. ஆனால் துரைமுருகன் எதிர்பார்த்திருந்த மற்ற சமுதாய வாக்குகள் அதிக அளவில் பதிவாகி, தி.மு.க. தரப்பிற்கு தெம்பைத் தந்துள்ளன. வாக்குப் பதிவிற்கு முதல் நாள் இரவு, ஓட்டுக்கு தலா 1,000 என ரேட்டை உயர்த்திய ஏ.சி.சண்முகம், வாக்குப் பதிவு நாளன்று பிற்பகல் வரை இதே டெக்னிக்கை கையாண்டார். தி.மு.க. தனது வாக்குகளை உறுதிப்படுத்தியது. ஆனாலும் வாக்குப்பதிவு முடிந்தபின் இரு கழகங்களுமே பதற்றத்தில்தான் இருந்தன.