Skip to main content

“எந்த  நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்” - ராஜேந்திர பாலாஜி 

Published on 21/01/2023 | Edited on 21/01/2023

 

rajendra balaji  Assembly and parliamentary elections can be held together any time

 

“நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்  தேர்தல் வரவுள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.  ஒரே  நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த  நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்” என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். 

 

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அதிமுக சார்பில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “எம்ஜிஆர் ஆட்சிக் காலத்தில் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் பல்வேறு  திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. எம்ஜிஆர் கொண்டு வந்த சத்துணவு  திட்டம்தான் இன்றும் பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு குழந்தைகள்  சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றனர். தைப் பொங்கலுக்கு எம்ஜிஆர் கொண்டு  வந்த வேஷ்டி - சேலை தி்ட்டத்தைதான் இன்றும் அரசாங்கம் வழங்கி கொண்டு  இருக்கிறது. அவருடைய  திட்டங்கள் இன்றும் ஏழை எளிய மக்கள் நெஞ்சத்தில்  நீங்கா இடம்பெற்றுள்ளன.  இன்றைக்கும் ரேசன் கடைகளில் சேலை வாங்கினால்  கூட இது எம்ஜிஆர் சேலை என்று மக்கள் கூறுகின்றனர்.  ஆட்சிக்கு வந்து 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கான அனைத்து திட்டங்களையும் நிறுத்திய பெருமைக்கு சொந்தக்காரர்கள் திமுக ஆட்சியாளர்கள்.

 

ஜெயலலிதா  கொண்டு வந்த திட்டங்கள், எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் திமுக அரசு நிறுத்திவிட்டது. அம்மா பரிசுப் பெட்டகம்,  தாலிக்குத் தங்கம், திருமணம் உதவித்தொகை, கல்வி உதவித் தொகை இப்படி  பல்வேறு அதிமுகவின் திட்டங்களை நிறுத்தி விட்டனர். சைக்கிள் வழங்குவதை  பகுதியாகக் குறைத்து விட்டனர். லேப்டாப் கொடுப்பதை நிறுத்திவிட்டனர்.  முதியோர் பென்ஷன் அனைத்தையும் நிறுத்திவிட்டனர். அதிமுக அரசின் எல்லா  திட்டங்களும் முடக்கப்பட்டுள்ளது.    மகளிருக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை தருவதாகச் சொன்ன திமுக இதுவரை  வழங்கவில்லை. திமுக கொடுத்த 520 தேர்தல் அறிக்கையும் பொய்.  திமுக  பொய்யை சொல்லி வாக்கு வாங்கினார்கள். தற்போதைய விளையாட்டுத் துறை  அமைச்சர் விளையாட்டுத்தனமாக செங்கலைக் காட்டி,  மக்களை ஏமாற்றி வாக்கு  வாங்கினார். திமுக ஆட்சியில் யாரும் வாழ முடியாத அளவிற்கு விலையேற்றம்  உள்ளது. 

 

அரசு ஊழியர்கள் முதல்வரை எதிர்க்கட்சித் தலைவராகவே அவர்  இருந்திருக்கலாம் என்று நினைக்கின்றனர். எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது  அரசு ஊழியர்களுக்காக குரல் கொடுத்த முதல்வர் தற்பொழுது அவர்களைக்  கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் 11 ஆயிரம் பேருந்துகள் இயங்காமல்  உள்ளது. பேருந்துகளை சீரமைக்க முடியாத நிலை உள்ளது. திமுக ஆட்சியில்  விலையேற்றம் காரணமாக தமிழகம் ஸ்தம்பித்துள்ளது.  திமுக கட்சியினரை  பாதுகாக்க ஆட்சி நடத்தவில்லை,  குடும்பத்தைப் பாதுகாக்கவே  ஆட்சி  நடத்துகிறார்கள், திமுக கட்சியினரே திமுக ஆட்சியை விரும்பவில்லை.  திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனர். முதல்வர் சொல்வதை  அமைச்சர்கள் கேட்பதில்லை, அமைச்சர்கள் சொல்வதை முதல்வர்  கேட்பதில்லை. அரசு சொல்வதை மக்கள் கேட்க தயாராக இல்லை. தேர்தல்  எப்பொழுது வரும் என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். அதிமுகவில்  சண்டை ஏற்படும்போது திமுக உள்ளே புகுந்துவிடும். மக்கள் ஏற்றுக்கொண்டு  திமுக ஆட்சிக்கு வந்ததே இல்லை. நாடாளுமன்றத் தேர்தலோடு சட்டமன்றத்  தேர்தல் வரவுள்ளதால் திமுகவினருக்கு வயிற்றில் புளியை கரைக்கிறது.  ஒரே  நாடு ஒரே தேர்தல் வரும் என்ற அச்சத்தில் திமுகவினர் உள்ளனர். எந்த  நேரத்திலும் இரு தேர்தலும் ஒரே நேரத்தில் வரலாம்.” என்று பேசினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.