ADVERTISEMENT

"நாங்கள் உழைக்கிறோம்; நல்ல காலம் பிறக்கும்!" - விவசாயிகள் கூட்டத்தில் 'மாஸ்' காட்டிய ராகுல்!

04:14 PM Jan 25, 2021 | tarivazhagan

ADVERTISEMENT


ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் 3 நாள் சுற்றுப் பயணமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி.

ADVERTISEMENT


கடந்த சனிக்கிழமை கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஞாயிற்றுக் கிழமை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று (25.01.2020) காலை சரியாக 11.30 மணிக்கு கரூர் நுழைந்தவர், சின்னதாராபுரம் பகுதியில் அளிக்கபட்ட பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு கரூர் நகரப் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அதன்பின், விவசாயிகளோடு கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய ராகுல் காந்தி, "மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமை இழைத்துவருகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார்.

விவசாயிகள் பலர், தொடர்ந்து விவசாயத் தொழிலில் தாங்கள் சந்தித்து வரக்கூடிய மோசமான நிலையை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறினார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், “மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் மிகக் கொடூரமாக மாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பா.ஜ.க., விவசாயத்தின் அடிப்படையையும் விவசாயத்தையும் தகர்க்கக்கூடிய கொள்கை முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறது.

நான், இன்று உங்களைச் சந்திப்பதின் நோக்கம் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனையை, நான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கக் கூடிய விவசாயிகளின் போராட்டமும், அதில் உள்ள கஷ்டத்தையும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்” என்றார்.

பெண் விவசாயி வெண்ணிலா, “எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் இறுதியில் எங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது” என்றார். அதற்குப் பதில்கூறிய ராகுல்காந்தி, “விவசாயிகளுக்கு முழுமையான செய்திகள் வந்துசேர்வது இல்லை. ஏனென்றால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு, விவசாயிகளிடத்தில் உரிய செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கத் தயாராக இல்லை. அதை மறைக்க முயல்கிறார்கள். விவசாயிகள் ஆகிய நீங்கள் தமிழிலேயே என்னோடு பேசலாம்; ஆங்கிலம் தேவை இல்லை” என்று கூறினார்.

வேளாண் குறித்துப் பேசிய விவசாயியைப் பாராட்டிய ராகுல், மத்திய வேளாண் மந்திரியை விட நீங்கள் சிறந்த மந்திரியாக இருப்பீர்கள் என்று பாராட்டினார். மேலும் அவர், “மத்திய அரசு இயற்றிய அந்த வேளாண் சட்டத்தில், மண்டியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் முதல் சட்டம். இரண்டாவது கண்டிப்பாக ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு நீங்கள் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறீர்களோ அந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களால் நீதிமன்றம் செல்ல முடியாது. மூன்றாவது சட்டம், பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம்.

எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த உற்பத்திப் பொருளுக்கு வேண்டுமானாலும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கவேண்டும். இன்று, இந்தச் சட்டத்தால் பல கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல தொழில்கள் நசுக்கப்படும்” என்றார்.


பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி கேட்டுக்கொண்டிருந்தபோது. கூட்டத்தில் எழுந்து நின்ற விவசாயி ஒருவர், அவர் கையில் வைத்திருந்த பழைய ஐநூறு ரூபாய் நோட்டை ராகுல் காந்தியிடம் காட்டி, இந்த நோட்டு செல்லாது என்று சொல்லிவிட்டனர். தற்போது இந்த நோட்டை மாற்றுவதற்கு வங்கிக்கு எடுத்துச் சென்றால், ‘இது உதவாது பழைய நோட்டு குப்பையில்தான் போடவேண்டும்’ எனச் சொல்கிறார்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தி, “இந்தச் சகோதரர் வைத்திருக்கும் இந்த 500 ரூபாயை மத்திய அரசு திருடிக் கொண்டது” என்றார்.


வெள்ளைக்காரர்கள் 1885ல் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கேஸ் குழாய்ப் பதிப்பது, எரிவாயு குழாய் பதிப்பது, உயர் மின்னழுத்தக் கோபுரங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து இதே நிலை நீடிக்கிறது என்று விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.

2013ல் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இந்த மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. கடந்த முறை காங்கிரஸ் ஒரு சிறந்த திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தது. 100 நாள் வேலைத்திட்டம் போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் கொண்டுவந்தது. அதுவும் வறுமையில் இருக்கக் கூடியவர்களில் கண்டறிந்து, நேரடியாக பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் போடுவதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே, மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாள் வேலைவாய்ப்பை போலவே அவர்களுக்கும் அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மிகத் தெளிவாக நாங்கள் போட்டிருந்தோம் என்று ராகுல் கூறினார்.

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தொடர்ந்து அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் தொடர வேண்டும். நீங்கள் தொடர்ந்து காங்கிரசோடு இணைந்திருங்கள். நல்ல காலம் பிறக்கும் நீங்களும் உழையுங்கள் நாங்களும் உழைக்கிறோம் என்று தன்னுடைய பேச்சை ராகுல்காந்தி முடித்துக் கொண்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT