Skip to main content

ராகுல்காந்தி தமிழ்நாட்டில் போட்டியிட வேண்டும்: கே.எஸ்.அழகிரி 

Published on 16/03/2019 | Edited on 16/03/2019

 

இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர்  ராகுல்காந்தி போட்டியிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.


 

stalin-rahul


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் நரேந்திர மோடி அரசு மீண்டும் தேர்தலை சந்திக்கிற நிலை உருவாகியுள்ளது. வெளிநாட்டிலிருக்கும் கருப்பு பணத்தை மீட்டு இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூபாய் 15 லட்சம் தொகையை செலுத்துவேன், ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு புதிய வேலை வாய்ப்பு, விவசாயிகளின் விளை பொருளுக்கு உற்பத்தி செலவில் 50 சதவீதம் கூடுதலாக சேர்த்து குறைந்தபட்ச விலை வழங்குவேன், விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் போன்ற வாக்குறுதிகளை நரேந்திர மோடி வழங்கினார். ஆனால் இதை எதையுமே நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை பாதிக்கிற பண மதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு போன்ற நடவடிக்கைகளை எடுத்து மக்கள் விரோத அரசாக பா.ஜ.க. அரசு திகழ்ந்து வருகிறது. மேலும் தமிழக மக்களின் நலன் மற்றும் உரிமைகளுக்கு எதிராக பல்வேறு திட்;டங்களை செயல்படுத்தி மக்களின் கடும் கோபத்திற்கு பா.ஜ.க. அரசு ஆளாகியிருக்கிறது. இதையெல்லாம் தட்டிக் கேட்கிற, தடுத்து நிறுத்துகிற எந்த முயற்சியும் செய்யாத துணிவற்ற பினாமி அரசாக எடப்பாடி அரசு இருந்து வருகிறது. மத்திய - மாநில அரசுகளுக்கு எதிராக வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுவதற்கு தமிழக மக்கள் தயாராகி விட்டார்கள்.
 

தி.மு.க. - காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் மதச்சார்பற்ற கூட்டணி கொள்கை அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கு எதிராக சந்தர்ப்பவாதிகள் ஒன்று சேர்ந்து வருகிற தேர்தலுக்காக தற்காலிகமாக கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த கூட்டணியை தமிழக மக்கள் நிச்சயம் ஏற்கப் போவதில்லை. இந்தியாவிலேயே ஒரு மாநிலத்தில் மதச்சார்பற்ற கூட்டணி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுகிற அமோக ஆதரவு பெற்றிருக்கிற மாநிலமாக தமிழகம் திகழ்கிறது. இந்நிலையில் இந்தியாவில் ஆட்சி மாற்றம் ஏற்பட முன்னோடி மாநிலமாக தமிழகம் அணி திரண்டு நிற்கிறது.

 

ks azhagiri


 

பாராளுமன்றத் தேர்தலுக்கு பிறகு இந்தியாவின் பிரதமராக ராகுல்காந்தி தேர்வு செய்யப்பட வேண்டுமென்று தி.மு. கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் சில மாதங்களுக்கு முன்பே முதன் முதலாக முன்மொழிந்து தேசிய அரசியலுக்கு முன்னோடியாக இருந்து வருகிறார். இந்தப் பின்னணியில் மதச்சார்பற்ற கூட்டணிக்கு ஆதரவாக தமிழக மக்கள் ஒருமித்த உணர்வுடன் எழுச்சியோடு தேர்தலை சந்திக்க இருக்கிறார்கள். இந்நிலையில் இந்தியாவின் எதிர்கால பிரதமராக முதன் முதலில் அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டிலிருந்து ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் போட்டியிட வேண்டுமென்று தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாகவும், தமிழக மக்கள் சார்பாகவும் கேட்டுக் கொள்கிறேன். இந்த வேண்டுகோளுக்கு மதச்சார்பற்ற கூட்டணி பேராதரவு வழங்கும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.
 

இந்தியாவின் அனைத்து தரப்பு மக்களும் மதம், ஜாதி, எல்லைகளைக் கடந்து ஏற்றுக் கொள்ளக் கூடிய மகத்தான தலைவராக விளங்குகிற திரு. ராகுல்காந்தி அவர்கள் உத்தரபிரதேச மாநிலத்திற்கு மட்டும் சொந்தமுள்ளவராக கருத முடியாது. அவர் இந்திய மக்களின் சொத்தாக கருதப்படுகிறவர். அனைவரது நன்மதிப்பையும் பெற்றவர். வேற்றுமையில் ஒற்றுமை காண்கிற, நல்லிணக்க கொள்கைகளுக்காக தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர். அவர் வடக்கே உள்ள உத்தரபிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிடுகிற அதேநேரத்தில் இந்தியாவின் தென் பகுதியாக விளங்குகிற தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட வேண்டுமென்று லட்சோபலட்சம் மக்களின் சார்பாகவும், மதச்சார்பற்ற சக்திகளின் சார்பாகவும் அவரை அன்போடு வேண்டி, விரும்பி கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் வேண்டுகோளை நிச்சயம் ஏற்றுக் கொண்டு தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிடுவார் என்று நம்புகிறேன். இத்தகைய போட்டியின் மூலம் வடக்கையும், தெற்கையும் இணைத்து நிற்கிற எழுச்சித் தலைவராக  ராகுல்காந்தி அவர்களை கருதி இந்திய மக்கள் அமோக ஆதரவு வழங்குவார்கள் என்பது உறுதியாகும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஊழலின் நாயகன் பிரதமர்...” - ராகுல் காந்தி விளாசல்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் உத்தரபிரதேசம் மாநிலம் காசியாபாத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி இந்தியா கூட்டணி சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. அப்போது காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி.யும், சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவும் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். இதில் ராகுல் காந்தி எம்.பி. பேசுகையில், “இந்த தேர்தல் சித்தாந்தத்தின் தேர்தல். ஒருபுறம் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவும், அரசியலமைப்பையும் ஜனநாயக அமைப்பையும் அழிக்க முயற்சிக்கின்ற. மறுபுறம், இந்தியா கூட்டணி மற்றும் காங்கிரஸ் கட்சி அரசியலமைப்பையும் ஜனநாயகத்தையும் பாதுகாக்க முயற்சிக்கின்றன. தேர்தலில் 2-3 பெரிய பிரச்சனைகள் உள்ளன. முதலாவது வேலையில்லாத் திண்டாட்டம், இரண்டாவது  பணவீக்கம் ஆகும். ஆனால் பாஜக மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் ஈடுபட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பிரதமர் ஏ.என்.ஐ.க்கு பேட்டி அளித்தார். இது ஸ்கிரிப்ட் செய்யப்பட்ட நிகழ்ச்சி. அதில் தேர்தல் பத்திரங்கள் குறித்து பிரதமர் விளக்க முயன்றார். வெளிப்படைத்தன்மைக்காகவும் தூய்மையான அரசியலுக்காகவும் தேர்தல் பத்திரங்கள் கொண்டுவரப்பட்டதாக பிரதமர் கூறுகிறார். இது உண்மையாக இருந்தால் ஏன் அந்த திட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இரண்டாவதாக, வெளிப்படைத் தன்மையை கொண்டு வர விரும்பினால், பாஜகவுக்கு பணம் கொடுத்தவர்களின் பெயர்களை ஏன் மறைத்தீர்கள். மேலும் அவர்கள் உங்களுக்கு பணம் கொடுத்த தேதிகளை ஏன் மறைத்தீர்கள்?. தேர்தல் பத்திரங்கள் திட்டம் உலகின் மிகப்பெரிய மிரட்டி பணம் பறிக்கும் திட்டம். இந்தியாவின் அனைத்து தொழிலதிபர்களும் இதைப் புரிந்துகொண்டு அறிந்திருக்கிறார்கள். இது குறித்து பிரதமர் மோடி எவ்வளவு தெளிவுபடுத்த விரும்பினாலும், அது எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஏனென்றால், பிரதமர் ஊழலின் நாயகன் என்பது  நாட்டிற்கும் தெரியும். 

Prime Minister is the hero of corruption Rahul Gandhi 

கடந்த 10 ஆண்டுகளில் பணமதிப்பு நீக்கம், தவறான ஜி.எஸ்.டி. வரி விதிப்பு போன்ற மக்களை இன்னலுக்கு ஆளாக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளார். அதானி போன்ற பெரும் கோடீஸ்வரர்களுக்கு ஆதரவு அளித்து வேலைவாய்ப்பு உருவாக்கத்தை பிரதமர் மோடி குறைத்துள்ளார். மீண்டும் வேலைவாய்ப்பு உருவாக்கத்தை வலுப்படுத்துவதுதான் எங்கள் முதல் பணி. வேலைவாய்ப்பு அளிப்பதற்கு நாங்கள் 23 யோசனைகளை வழங்கியுள்ளோம், ஒரு யோசனை புரட்சிகர யோசனை - உத்திரபிரதேசத்தின் அனைத்து பட்டதாரிகள் மற்றும் டிப்ளமோதாரர்களுக்கும் பயிற்சி பெறும் உரிமையை வழங்குவோம். மேலும், இளைஞர்களின் வங்கிக் கணக்கில் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் டெபாசிட் செய்வோம். இந்த உரிமையை கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு வழங்குகிறோம். போட்டித் தேர்வுக்கான வினாத்தாள்கள் கசிவுக்கு எதிராக சட்டம் இயற்றுவோம்” எனத் தெரிவித்தார். 

Next Story

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த வில்லேஜ் குக்கிங் சேனல்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Village cooking channel put an end to rumours

வில்லேஜ் குக்கிங் சேனல் என்ற யூடியூப் சேனலில் வரும் சமையல் வீடியோவில் ‘இன்னைக்கு ஒரு புடி’என்ற வசனத்தின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் பெரியதம்பி தாத்தா. இவர் சமீபத்தில் இதயநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பாக வில்லேஜ் குக்கிங் சேனல் நிர்வாகி சுப்ரமணியன் வேலுசாமி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “தாத்தா இதய நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த சூழலில் வில்லேஜ் குக்கிங் சேனலில் தோன்றும் தாத்தாவின் மருத்துவ செலவுக்கு உதவ காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. மறுத்துவிட்டார் என பொய் செய்திகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. இந்நிலையில் இந்த வதந்தியை சுப்ரமணியன் வேலுசாமி திட்டவட்டமாக மறுத்துள்ளார். இது குறித்து அவர் வதந்தியாக பரப்பப்பட்ட செய்தியை மேற்கோள்காட்டி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்!. எங்களது வளர்ச்சிக்கு உதவிய அன்பான மனிதன் ராகுல் அண்ணாவின் மீது இப்படி எங்களையே பயன்படுத்தி அவதூறு பரப்புவது மிகுந்த மன வருத்தத்தை தருகிறது!.

இப்படி பொய் செய்திகளை பரப்புபவர்களது கட்சித் தலைமை இதனை கட்டுப்படுத்த வேண்டுகிறோம்” எனத் தெரிவித்துள்ளார். கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக வில்லேஜ் குக்கிங் சமையல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அப்போது கிராமத்துச் சூழலில் ஓலைப்பாயில் சம்மணம் போட்டு அமர்ந்து காளான் பிரியாணியை ரசித்து சாப்பிட்ட வீடியோ மக்கள் மத்தியில் வைரலானது குறிப்பிடத்தக்கது.