Skip to main content

“போடும் மீம்ஸ்கள் முள் போல குத்துகிறது; 23 ஆம் புலிகேசியிலேயே இதெல்லாம் பார்த்தாச்சு” - அண்ணாமலை பேட்டி

Published on 23/03/2023 | Edited on 23/03/2023

 

nn

 

அண்மையில் செய்தியாளர்கள் சந்திப்பில், ‘9 ஆண்டுகள் காவல்துறையில் தான் சம்பாதித்த பணத்தை அவரக்குறிச்சி தேர்தலில் செலவு செய்து தற்போது கடனாளியாக இருக்கிறேன்’ என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்திருந்தார். அதுகுறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கருத்து தெரிவிக்கையில், ‘9 ஆண்டுகளில் ஒரு காவல்துறையை சேர்ந்த அதிகாரி 30 கோடி ரூபாய் சம்பாதித்திருப்பார் என்பது சாத்தியமா?’ எனக் கேள்வி எழுப்பியதோடு, ‘தேர்தலில் அவரது சொந்த காசை செலவு செய்தாரா என்பதே தெரியவில்லை இதில் கடனாளியாக இருக்கிறேன் என்று வேறு சொல்லி இருக்கிறார்’ என விமர்சித்திருந்தார்.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அண்ணாமலை, “தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது வடிவேல் நடித்த 23 ஆம் புலிகேசி படத்தில் இருப்பது போல் இருக்கிறது. அந்தப் படத்தில்  மன்னராக இருக்கும் வடிவேல் அவரைப் பார்க்க வரும் அமைச்சர்களிடம் இன்று நம்மைப் பற்றி யார் தப்பாக சொல்லி இருக்கிறார்கள் எனக் கேட்பார். அது மாதிரி தமிழக முதல்வரை பொறுத்தவரை காலையில் டிஜிபி மற்றும் ஏடிஜிபியிடம் நம்மை பற்றி யார் சமூக வலைத்தளங்களில் தப்பாக பேசுகிறார்கள் என்று கேட்டு அவர்களை மூன்று மணி, நான்கு மணி, ஐந்து மணிக்கு சென்று தூக்கி வந்து ரிமாண்ட் செய்வதற்கு தான் இந்த அரசு முனைப்பு காட்டுகிறதே தவிர பெண்களின் மீது, குழந்தைகளின் மீது வன்மத்தை யார் கக்குகிறார்களோ அவர்கள் மீது அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

 

தமிழகத்தில் சோசியல் மீடியாவில் மீம்ஸ் போட்டான்; கருத்து போட்டான்; கார்ட்டூன் போட்டான் என அவர்களை கைது செய்வதற்கு காவல்துறை அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருக்கிறது. இதெல்லாம் 23 ஆம் புலிகேசி படத்தில் நாம் பார்த்தது தான். எந்த ஒரு மன்னன், எந்த ஒரு அரசன், எந்த ஒரு ஆட்சியாளன் இன்செக்யூராக இருக்கிறானோ அவனுக்கு சமூக வலைத்தளத்தில் போடப்படும் கருத்துக்கள் முள்ளு மாதிரி குத்தும் என்பார்கள். நமது முதலமைச்சருக்கு சமூக வலைத்தளத்தில் வரும் கருத்துக்கள் குத்துவதைப் போல தெரிகிறது. இவ்வளவு ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறார்கள். பாரம்பரியமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கிறார்கள். ஆனால் 18 வயது பையன், 19 வயசு பசங்களை எல்லாம் கைது செய்து சிறையில் போடுவது எந்த அளவிற்கு முதல்வரின் பெருந்தன்மையை காட்டுகிறது. 

 

ஒருபுறம் ஆணவப் படுகொலை நடக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு சமூக வலைத்தளத்தின் மீது மட்டும் காவல்துறை கண்ணாக இருப்பது சட்ட ஒழுங்கு பராமரிப்பு இன்மையை காட்டுகிறது. அண்ணாமலை எவ்வளவு சொத்து வச்சிருக்கான்; எவ்வளவு சம்பாதிச்சான்; கர்நாடகாவில் ஒன்பதறை வருடத்தில் ஒரு பைசா லஞ்சம் வாங்கி இருக்கானா என முழு கர்நாடகாவை தேடிப் பிடித்து சல்லடை போட்டு தமிழகத்தில் இருக்கக்கூடிய 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவல்துறையின் நண்பர்களை அனுப்பி ஒருவரை கொண்டு வந்து பிரஸ் மீட் நடத்துங்கள் நான் பதில் சொல்கிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.