Pugahendi who criticized Sengottaiyan

இபிஎஸ்ஸை வாடா எனக் கூப்பிடும் அளவிற்கு இருந்தவர். ஆனால், இன்று சின்னகோழி போல் ஆகிவிட்டார் என்பதைப் பார்த்து தான் வருத்தப்படுகிறேன் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி கூறியுள்ளார்.

Advertisment

ஈரோடு மாவட்டம் அந்தியூரில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.அப்போது பேசிய அவர், “அதிமுகவில் ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை நாங்கள் வகிக்க மாட்டோம் எனச் சொல்லி இம்மாதிரியான போராட்டம் நடக்கிறது. இப்போராட்டமே பொதுச்செயலாளராக பதவி பெறத் துடிக்கும் இபிஎஸ்ஸைஎதிர்த்து தான்.

Advertisment

செங்கோட்டையனை நான் இன்னும் மதிக்கிறேன். வயதிலே பெரியவர். மிகவும் வேதனையான விஷயம் என்னவென்றால், பழனிசாமி பின்னால் போகும் அசிங்கமான நிலை செங்கோட்டையனுக்கு உருவாகிவிட்டது என்பதை நினைப்பதற்குத்தான் வேதனையாக இருக்கிறது.

எவ்வளவு பெரிய தலைவராக இருந்தவர் செங்கோட்டையன். அவரைபார்த்து கேட்பது ஒன்றைத்தான். தீரன் சின்னமலை வழிவந்தவர்கள் எல்லாம் என்றும் நியாயமாக இருப்பார்கள். மனசாட்சிக்கு விரோதமில்லாமல் செங்கோட்டையன் சொல்லட்டும். அவரை யார் அமைச்சராக்கியது. ஜெயலலிதாவால் ஒதுக்கப்பட்டு எங்கேயோ தூக்கி எறியப்பட்ட அவரை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னால் சசிகலா அமைச்சராக்கினார்.

ஆனால், இன்று சாதிப்பெயரைச் சொல்லி அரசியல் செய்யும் அளவிற்கு கீழ்த்தரமாக இறங்கிவிட்டார் செங்கோட்டையன்.ஈரோட்டில் இடைத்தேர்தல் வர இருக்கிறது. உங்களுக்கு தைரியம் இருந்தால் ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் டெபாசிட் பெறுங்கள்.

செங்கோட்டையன் சிங்கம் போல், புலி போல் எல்லாம் இருக்க வேண்டாம். ஆனால், சின்ன கோழி போல் ஆகிவிட்டார் என்பதைப் பார்த்து தான் வருத்தப்படுகிறேன். ஒரு காலத்தில் பழனிசாமி இவர் பின்னால் ஓடுவார். அதை என் கண்ணால் பார்த்துள்ளேன். வாடா எனக் கூப்பிடும் அளவிற்கு இருந்தவர். இன்று பழனிசாமியைப் பார்த்து செங்கோட்டையன் பயப்படுகிறார்” எனக் கூறினார்.