Skip to main content

புதுச்சேரி பாப்ஸ்கோ மேலாண் இயக்குநரைக் கண்டித்தும், சம்பளம் வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!

Published on 16/07/2020 | Edited on 16/07/2020

 

PAPSCO workers demand

 

தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்காமல் புதுச்சேரி பாப்ஸ்கோ (PAPSCO) மேலாண் இயக்குநர் உள்ளிட்டோர் முன் பணமாக பலமாத சம்பளத்தை எடுத்துக் கொண்டதைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கக் கோரியும் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம் நடத்தியுள்ளனர்.

 
புதுச்சேரி பாப்ஸ்கோ நிறுவனத்தில் சுமார் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு 32 மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலுவை சம்பளத்தை வழங்க வலியுறுத்தி நீண்டகாலமாகப் போராடி வருகின்றனர். 

 

இந்நிலையில் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பாப்ஸ்கோ தொழிலாளர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்காக 7 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தப் பணத்தில் சம்பளம் வழங்காமல் 3½ கோடி ரூபாய் EPF கட்டுவதற்காக எடுத்துக்கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது. மீதமுள்ள 3½ கோடி ரூபாயில் கரோனா ஊரடங்கை ஒட்டி தொழிலாளர்களுக்கு ஒரு மாதச் சம்பளம் வழங்குவதற்கு நிர்வாகத்திடம் வலியுறுத்தப்பட்டது. நிர்வாகமும் ஒரு மாதச் சம்பளம் வழங்க ஒப்புக்கொண்டு ரூபாய் 1½ கோடிக்கு கோப்பு தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பியது. இந்தக் கோப்பில் ஒரு மாதச் சம்பளம் ரூபாய் 1½ கோடி வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து முதலமைச்சர், துறையின் அமைச்சர், தலைமைச் செயலர், நிதித்துறைச் செயலர், துறையின் செயலர், குடிமைப்பொருள் வழங்கல் துறை இயக்குநர் ஆகியோர் கையொப்பமிட்டு, துணைநிலை ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தனர். 

 

ஆளுநர் கிரண்பேடி சம்பளம் வழங்குவதற்கான கோப்பிற்கு அனுமதி கொடுக்காமல் பாப்ஸ்கோ மதுபானக் கடைகளுக்குக் கிஸ்தி கட்டுவதற்கு ரூபாய் 1½ கோடியை பயன்படுத்திக் கொள்ளுமாறு கோப்பில் எழுதி உத்தரவிட்டுள்ளார்.


 
இந்த நிலையில், பாப்ஸ்கோ நிறுவனத்தில் கையிருப்பு தொகை சுமார் 50 லட்சம் ரூபாய் இருந்து வந்தது. கரோனா காலத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பணத்தில் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் முன்பணமாக ரூ.5,000 வழங்க வேண்டுமென மேலாண் இயக்குநர் முத்துக்கிருஷ்ணனிடம் வலியுறுத்தப்பட்டது. அதற்குச் சம்மதிக்காத மேலாண் இயக்குனர் தனக்கு 20 மாதச் சம்பளமாக ரூ.19,60,000/- AGM-அமரன் 5 மாதச் சம்பளம் ரூ.2,25,000/-, AGM-ஸ்ரீபதி 5 மாதச் சம்பளம் ரூ.2,25,000/-, AGM -குருமூர்த்தி 5 மாதச் சம்பளம் ரூ.2,00,000/-, AGM-தினகரன் 5 மாதச் சம்பளம் ரூ.1,80,000/-, கம்பெனி செக்ரட்டரி ராஜம் 10 மாதம் சம்பளம் ரூ.5,00,000/-, ஆக மொத்தம் ரூ.32,90,000/- மேலும், மேலாண் இயக்குநருக்கு வேண்டப்பட்ட அலுவலக ஊழியர்கள் 27 நபர்களுக்கு 1 மாதச் சம்பளம் ரூ.6,17,196/- ஆக மொத்தம் ரூ.39,07,196/- சம்பளமாக வழங்கியுள்ளார். 


 
மேலாண் இயக்குநரின் இந்த நடவடிக்கை ஒரு மாதச் சம்பளம் கேட்டுப் போராடி வரும் 1,100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியையும், மன உளச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. 

 

தன்னிச்சையான மேலாண் இயக்குநரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும் சம்பளமாக எடுத்துக்கொண்ட ரூ.39,07,196/- தொகையை பாப்ஸ்கோ நிறுவனத்தின் கணக்கில் கொண்டு வந்து கரோனா பேரிடர் கால நிவாரண முன்தொகையாக செலுத்தவும் தொழிலாளர் ஒவ்வொருவருக்கும் ரூ.5,000/- வீதம் வழங்கிடவும் வலியுறுத்தியும் பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது.


 
ஏ.ஐ.டியு.சி மாநில பொதுச்செயலாளர் சேதுசெல்வம் தலைமையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தில் மாநில செயல்தலைவர் வி.எஸ்.அபிஷேகம், பாப்ஸ்கோ தொழிற்சங்க தலைவர் ராஜூ, செயலாளர் மாரியப்பன், பொருளாளர் முருகேசன் மற்றும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நீண்ட நேரம் போராட்டம் நடத்தினர். பின்னர் மேலான் இயக்குநர் தவிர்த்து மற்ற பாப்ஸ்கோ அதிகாரிகள் பணத்தைத் திரும்ப அளிப்பதாகக் கூறியதையடுத்துக் கலைந்து சென்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

உறுதியளித்த அமைச்சர்; தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Minister of Assurance; Tamil Nadu government action

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் செல்வநாதன். மார்க்கெட் கமிட்டி ஊழியராக பணிபுரிந்து வரும் செல்வநாதனுக்கு ஹேமச்சந்திரன், ஹேமராஜன் என இரண்டு மகன்கள் இருந்தனர். 26 வயதான ஹேமச்சந்திரன், தனியார் நிறுவனத்தில் டிசைனராக பணிபுரிந்து வந்தார். இத்தகைய சூழலில் உடல் பருமனாக இருந்த ஹேமச்சந்திரன், சுமார் 150 கிலோவுக்கு மேல் இருந்துள்ளார். இதனால், மன உளைச்சலில் இருந்த ஹேமச்சந்திரன் உடல் எடையை குறைக்க சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் மருத்துவ ஆலோசனை பெற்று வந்தார். அங்கு அவரது உடல் பருமனை குறைப்பதற்காக, அறுவை சிகிச்சை மூலம் கொழுப்பு நீக்க சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, ஹேமச்சந்திரன் கடந்த 22 ஆம் தேதி (22.04.2024) மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கிய 15 நிமிடங்களிலேயே, மாரடைப்பு ஏற்பட்டு நேற்று (24.04.2024) ஹேமச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, ஹேமச்சந்திரன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது பெற்றோர்கள் புதுச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இந்தப் புகாரின் பேரில், போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பருமனைக் குறைக்க சிகிச்சை மேற்கொண்ட 26 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. 

Minister of Assurance; Tamil Nadu government action
கோப்புப்படம்

இதனையடுத்து உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் மரணமடைந்ததை தமிழக மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உறுதி செய்தார். மேலும் இளைஞர் உயிரிழந்தது குறித்து குழு அமைத்து விசாரணை செய்யப்படும் என இளைஞரின் பெற்றோரிடம் தொலைபேசியில் பேசிய அமைச்சர் மா. சுப்ரமணியன் நேற்று உறுதியளித்திருந்தார். அதே சமயம் மகனை இழந்த பெற்றோருக்கு தனது ஆறுதலையும் அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்திருந்தார். 

Minister of Assurance; Tamil Nadu government action

இந்நிலையில் இது தொடர்பாக விசாரணை நடத்த 2 இணை இயக்குநர்கள் கொண்ட குழுவை அமைத்து தமிழக மருத்துவத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழு 2 நாட்களில் விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்கவும் அதிரடியாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த விசாரணைக் குழு விரைவில் இளைஞரின் மரணம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் விசாரணை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. விசாரணைக்குழு அமைக்கப்படும் என உயிரிழந்த இளைஞரின் பெற்றோருக்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் உறுதி அளித்திருந்த நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.