Skip to main content

அரசியலில் கிழக்கும் மேற்கும் தெரியாத தமிழிசை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி போராட்டம்: ஜி.கே.மணி அறிவிப்பு

Published on 26/06/2018 | Edited on 26/06/2018
Tamilisai Soundararajan - anbumani


தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி  அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் (28.06.2018) வியாழக்கிழமை பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி அறிவித்துள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
 

தமிழ்நாட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள பாட்டாளி மக்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில்  இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி 30 ஆண்டுகளுக்கு முன் மருத்துவர் அய்யா தலைமையில் நடந்த சமூகநீதிப் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து கூறியதன் மூலம் தமிழகத்திலுள்ள இரண்டரை கோடி பாட்டாளி மக்களின் உணர்வுகளை காயப்படுத்தியுள்ளார்.

 

 

தமிழகத்தில் சமூக நீதியை பாதுகாப்பதற்காக 1950-ஆம் ஆண்டு தந்தை பெரியார் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டங்களுக்குப் பிறகு நடைபெற்ற மிகப்பெரிய போராட்டம் 1987-ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் தலைமையில் நடைபெற்ற தொடர் சாலை மறியல் போராட்டம் தான். அந்தப் போராட்டம் தான் தமிழகத்திலுள்ள 108 சமுதாய மக்களுக்கு 20% இட ஒதுக்கீடு என்ற மிகப்பெரிய உரிமையை பெற்றுக் கொடுத்தது. அந்தப் போராட்டத்தால் 108 சமுதாயங்கள் பயனடைந்தாலும் போராட்டத்தின் போது ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டதும், அதன் பாதிப்புகளை அனுபவித்ததும் வன்னியர் சமுதாய மக்கள் தான். அம்மக்களுக்கு போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட கொடுமைகளை உணர்ந்து தான் அதன்பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் சில தீர்வுகளை வழங்கினார்கள்.
 

இட ஒதுக்கீடு கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் தமிழகக் காவல்துறையினர் மட்டுமின்றி, இந்திய துணை இராணுவப் படைகளையும் துணிச்சலுடன் எதிர்கொண்டவர்கள் வன்னியர் சமுதாயத்தினர் தான். காவல்துறையின் துப்பாக்கித் தோட்டாக்களை மார்பில் வாங்கியும், கொடூரமான தாக்குதல் மற்றும் சித்திரவதைக்கு ஆளாகியும் 21  ஈகியர்கள் தங்களின் உயிர்களை தியாகம் செய்தனர். அவர்கள் செய்த தியாகத்தை அப்போது வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டால் பயனடைந்து வரும் மற்ற சமுதாயத்தினர் போற்றி வருகின்றனர். அத்தகையதொரு போராட்டத்தை நம்மால் முன்னெடுக்க முடியவில்லையே என்பது தாம் சமூகநீதி தழைக்க வேண்டும் என விரும்பும் சமுதாயங்களின் ஏக்கமாக இருந்து வருகிறது.
 

இந்த வரலாறும், தியாகங்களும் அரசியல் களத்தில் வேர்விட்டு மரமாகி நிற்கும் இயக்கங்களுக்கும், அவற்றின் தலைவர்களுக்கும் தெரியும். என்றோ பெய்த மழையில், எப்போதோ முளைத்த காளான்களுக்கு இந்த வரலாறு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கற்பூரத்தின் வாசனையை உணர்ந்து கொள்ள முடியாதது கழுதையின் குற்றமே தவிர, கற்பூரத்தின் குறைபாடு அல்ல. தமிழிசை சவுந்தரராஜனுக்கு அரசியலில் கிழக்கும் தெரியாது; மேற்கும் தெரியாது. மாறாக மற்ற கட்சிகளின் தலைவர்களை நாகரிகம் இல்லாமல் விமர்சித்து பேசுவதன் மூலம் மிகக்கேவலமான முறையில் அரசியல் நடத்துவதற்கு மட்டுமே தெரியும். தமிழக அரசியலில் மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு மோசமான தலைவராகியிருப்பவர் தமிழிசை மட்டுமே.

 

 

 

ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்து கடைசியில் மனிதனையும் கடித்த கதையாக தமிழகத்தில் மற்ற கட்சிகளையும், சமுதாயங்களையும் விமர்சித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் இப்போது ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைப் போராட்டத்தையும் விமர்சித்திருப்பது அரசியலில் அவருக்கு அழிவு காலம் தொடங்கி விட்டதையே காட்டுகிறது. சாக்கடையில் கல் வீசினால் அது நம் மீதும் பட்டுவிடும் என்ற எண்ணத்தில் சில நேரங்களில் சில விஷயங்களை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வது மனித இயல்பு. ஆனாலும், ஒரு கட்டத்தில் நாற்றத்தையும், நோய் பரப்புவதையும் சகித்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டால் சாக்கடையை அங்கிருந்து அகற்றுவதைத் தவிர வேறு வழியில்லை. தமிழ்நாட்டு அரசியலிலும் அத்தகைய தூய்மைப் பணியை மேற்கொள்ள வேண்டிய சரியான நேரம் வந்துவிட்டது.
 

தமிழகத்தின் பெரும்பான்மை சமுதாய மக்களின் சமூகநீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திவிட்டு, அதற்காக மன்னிப்புக் கேட்காத தமிழிசை தமது செயலை நியாயப்படுத்தி வருகிறார். மானமுள்ள  தீரத்திற்கு பெயர்போன மக்கள் இதை ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டார்கள்; மன்னிக்க மாட்டார்கள்.

 

 


சமூக நீதிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்திய தமிழிசை சவுந்தரராஜன் மருத்துவர் அய்யாவிடமும், வன்னிய சமுதாய மக்களிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையிலுள்ள பாரதிய ஜனதாக் கட்சி அலுவலகம் முன் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக  தமிழிசை மன்னிப்புக் கோர வலியுறுத்து தமிழகத்திலுள்ள அனைத்து மாவட்ட, வட்டத் தலைநகரங்களில் நாளை மறுநாள் (28.06.2018) வியாழக்கிழமை பா.ம.க. சார்பில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படும். இதில் பா.ம.க. நிர்வாகிகளும், கட்சி சார்பின்றி மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களும் கலந்து கொள்வார்கள். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“புதிய பேருந்துகளை அரசு வாங்க வேண்டும்” - அன்புமணி ராமதாஸ்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani Ramadoss says Government should buy new buses

புதிய அரசு பேருந்துகளையும், தமிழக அரசு வாங்க வேண்டும் என்றும், பழைய பேருந்துகளைப் பராமரிக்க, உதிரி பாகங்களை வாங்க அரசு போதிய நிதியை ஒதுக்க வேண்டும் என்றும் பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

இது குறித்து அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே. நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துனர் அமர்ந்திருந்த கடைசியில் இருந்து மூன்றாவது இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துனரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர் லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார். அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே திருச்சியில் பேருந்தின் இருக்கை கழன்று நடத்துநர் தூக்கி வீசப்பட்டுள்ளார். பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதைத்  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே ஒப்புக் கொண்டிருக்கிறார். 15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேருந்துகள் 12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில்தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும், அவற்றைப் பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாதது தான் இத்தகைய அவல நிலை ஏற்படுவதற்கு காரணம் ஆகும். இத்தகைய அவல நிலைக்கு தி.மு.க தலைமையிலான திராவிட மாடல் அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள் கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள் ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள் வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும் பேருந்துகள் மட்டும் 15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றுக்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும். பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும், உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு போதிய நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.