Skip to main content

நமீதா பிரச்சாரத்தில் உளறிய ‘மச்சானுக்கு’ அடி! - விருதுநகர் வில்லங்கம்..!

Published on 28/03/2021 | Edited on 28/03/2021

 

Problem Actress Namitha's election campaign in virudhunagar

 

அவர் நமீதா ரசிகராகக்கூட இருக்கலாம். போதை ஏற்றிக்கொண்டு, தொடர் போதைக்காக பாட்டில்களையும் வாங்கிக்கொண்டு, விருதுநகர் டாஸ்மாக் கடையைவிட்டு வெளியே வந்தவருக்கு, இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அதுவே, துன்ப அதிர்ச்சியாக மாறும் என்பதை அறியாத நிலையில், படு உற்சாகமாகிவிட்டார்.

 

முதலில் இன்ப அதிர்ச்சி என்னவென்று பார்ப்போம்; தாமரை வேட்பாளர் பாண்டுரங்கனுக்கு வாக்கு சேகரிப்பதற்காக விருதுநகர் வந்திருந்த நடிகை நமீதா வாகனம், அந்த டாஸ்மாக் கடை பக்கத்திலா நிற்க வேண்டும்? வயது வித்தியாசம் பார்க்காமல் “மச்சான்ஸ்’ என்றழைக்கும் நமீதா, தாமரைக்கு ஓட்டு கேட்டு, அங்கு பிரச்சாரம் செய்துகொண்டிருந்தார். அந்த குடிமகனுக்கு என்ன தோன்றியதோ? மிதமிஞ்சிய போதையில் ரொம்பவும் குஷியாகிவிட்டார். வாகனத்தைச் சுற்றி நிற்கும் வாக்காளர்களிடம் மைக் பிடித்து நமீதா பேசும்போது, வாக்காளரான தானும் பதிலளிப்பதுதானே மரியாதை? என்று அவருடைய மனசாட்சி அநியாயத்துக்கு உந்தித்தள்ள, நமீதாவின் பிரச்சார பேச்சு ஒவ்வொன்றுக்கும் சுடச்சுட பதிலளித்தார்.

 

“தாமரைக்கு வாக்களியுங்கள். ஆறு சிலிண்டர் தருவோம்..” என்று நமீதா கூற, “அதெல்லாம் முடியாது..” என்று கூச்சலிட்டார் குடிமகன். அவருடைய மறுப்பை காதில் வாங்கிக்கொள்ளாமல் “இல்லத்தரசிகளுக்கு மாதம்தோறும் ரூ.1500 தருவோம்..” என்று நமீதா தொடர்ந்து பேச, “இதுவும் முடியாது..” என்று உரிமைக்குரல் எழுப்பினார் குடிமகன். 

 

குடிமகனுக்காக காத்திருந்த துன்ப அதிர்ச்சி இனிமேல்தான் வெளிப்பட்டது? ‘அது எப்படி நமீதா மேடம் பேசும்போது, குறுக்கே குறுக்கே பேசலாம். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என்று நமீதா முகத்துக்கு நேராக மறுத்து சத்தம்போடலாம்?’ என்று கொதிப்படைந்த தாமரைக் கட்சியினர், குடிமகனை அடித்து அப்புறப்படுத்தினர்.

  

Problem Actress Namitha's election campaign in virudhunagar


“சென்னை மாகாணத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டவேண்டும் என்று, விருதுநகரில் உள்ள தன் வீட்டின் முன்பாக  75 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து, தமிழுக்காக உயிரைவிட்ட சங்கரலிங்கனார் பிறந்த மண்ணில், பிரச்சாரம் என்ற பெயரில் ‘தமிழ்க்கொலை’ அல்லவா செய்திருக்கிறார் நமீதா?”  என்று தாக்குதலுக்கு ஆளான குடிமகனுக்கு ஆதரவாகப் பேசினார், விருதுநகர் பள்ளி ஒன்றின் தமிழாசிரியர். 

 

“தப்புத்தப்பாகவா தமிழில் பேசினார் நமீதா? அப்படி என்னதான் பேசினார்? வணக்கம். மச்சான் சௌக்கியமா? கொஞ்சம் சத்தமா சொல்லுங்க. சௌக்கியமா? எல்லாருக்கும் வணக்கம். ஸ்ரீ பாண்டுரங்கன் அவர்கள் இங்க வீட்ல இருக்ற.. இந்த டவுன்ல இருக்ற அவரு.. பெண்கள் எல்லாம் நல்ல வேலை செஞ்சிட்டு இருக்காங்க. கண்டிப்பா நம்பி அவருக்கு ஓட் கொடுங்க.

 

தாமரைக்கு எதுக்கு ஓட் கொடுக்கனும்? எனக்கென்ன லாபம்? பாண்டுரங்கனுக்கு எதுக்கு ஓட் கொடுக்கனும்? அதுக்கு பதில் நான் சொல்லப்போறேன். Central government schemes மற்றும் state government schemes. உங்க வீடு தேடி வரும். வருஷத்துக்கு ஆறு gas cylinder, வருஷத்துக்கு ஆறு gas cylinders குடுக்க போறேன். அதுகூட இலவசமா ஒரு வருஷத்துக்கு, அதுக்காக உங்களுக்கு எப்ப வேணும்? உங்க favourite பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க. சரியா? Vegetarian பிரியாணி செய்யும் போது எனக்கு கூட கூப்பிடுறீங்க. அப்புறம்  மாசத்துக்கு ஒரு குடும்பத்துக்கும் தலைவிக்கு, ஆயிரத்தி ஐநூறு ரூபாய் கொடுக்க போறேன். அது கூட இலவசமா ஆயிரத்தி ஐந்நூறு ரூபாயும், மாசத்துக்கு. நன்றி. அதுக்கப்புறம், இடமே இல்லாத வங்களுக்கு,  இடமே இல்லாதவங்களுக்கு இடம் கொடுத்து வீடும் கட்டி கொடுக்க போறேன் அது கூட இலவசமா. அது மட்டும் இல்ல..  உங்களுக்கு free வாஷிங் மிஷின் கொடுக்க போறேன்.  நீங்க கைல துவச்சு  கஷ்டப்பட வேணாம். பெண்கள் இல்ல இங்கு? காணோம்..

 

Hello மச்சான், அங்கே இருக்கு, நமஸ்தே, வணக்கம். வணக்கம், வணக்கம். ஆகா சகோகத்திரி, சகோதரி வாங்க. உங்களுக்கு cable line கூட free. உங்களுக்கு எப்ப வேணும்? உங்க பேவைரைட் serial பாருங்க. உங்க வேணும் அந்த free வீடு, உங்களுக்கு இலவசமா வரும். ஆறு gas cylinders உங்களுக்கு இலவசமா வரும். அப்புறம் உங்களுக்கு free washing machine வரும். சரியா? அப்புறம் cable  free..  எல்லாம் உங்களுக்கு free. அதுக்காக தாராளமா, தாமரைக்கு ஓட் குடுங்க..  விருத்தாநகர்ல தாமரை மலரும். தமிழ்நாடு வளரும்.” என்று நமீதா பேசி முடிக்க, ‘பாரத்மாதாகி ஜே!’ என்று கோஷம் எழுப்பி உணர்ச்சிவசப்பட்டார்கள் பா.ஜ.க.வினர். 

 

விருதுநகர்க்காரரான அசோக் “ரோட்டுக்கு வந்து நமீதா என்ன வேணும்னாலும் பேசுவார். வாக்காளர்கள் பதிலுக்கு பேசக்கூடாதா? வாஷிங் மெஷின்.. வீடெல்லாம் கவர்மெண்ட் தர்ற மாதிரியா பேசினாரு? என்னமோ, சொந்தப் பணத்துல நமீதாவே தர்ற மாதிரில்ல பேசிருக்காரு. இதையெல்லாம் காது கொடுத்து கேட்கணும். நியாயத்த சொன்னா அடி வாங்கணும்கிறது தமிழனோட தலைவிதி.” என்று தலையில் அடித்துக்கொண்டார். தமிழகத்தின் தலைவிதியை மாற்றுவது வாக்காள பெருமக்களின் கையில்தான் இருக்கிறது!


 

சார்ந்த செய்திகள்

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.