Advertisment

செய்தியாளர் படுகொலை! பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.க துணை நிற்கும்! மு.க.ஸ்டாலின் கண்டனம்!

mk stalin

"சமூகவிரோதக் கும்பலால் தனியார் தொலைக்காட்சிசெய்தியாளர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது; அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது உடனடி நடவடிக்கை தேவை" "சமூக விரோதிகளுக்கு பாதுகாப்பளிக்கும் எடப்பாடி அ.தி.மு.கஅரசும், அதன் காவல்துறையும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பது ஜனநாயகத்தின் மீது விழும் சம்மட்டி அடி; பத்திரிகைச் சுதந்திரம் காக்க தி.மு.கழகம் துணை நிற்கும்" என்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனப் போற்றப்பட்டுவரும் பத்திரிகை - ஊடகங்களின் கருத்துரிமையின் கழுத்தில், ‘அரசு கேபிள்’ என்ற கயிறு சுற்றப்பட்டு, ஆள்வோரின் தவறுகளை அம்பலப்படுத்தும் ஊடகங்களை நெரிப்பதும் நெருக்கடி தருவதும், ஆதரவாகக் குரல் கொடுத்தால் கயிறு தளர்வதும் கண்ஜாடை காட்டுவதும், தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக, சமூக விரோதக் கும்பலால் தொலைக்காட்சி செய்தியாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

தனியார் (தமிழன்) தொலைக்காட்சியைச் சேர்ந்த மோசஸ் என்ற செய்தியாளர், சென்னை - குன்றத்தூர் அருகே நடைபெறும் சமூக விரோதச் செயல்கள் - போதைப் பொருள் விற்பனை போன்றவற்றை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து பொதுமக்களின் கவனத்திற்கு வைத்ததால், தொடர் மிரட்டலுக்குள்ளாகியிருக்கிறார்.

இதுகுறித்து, காவல்நிலையத்தில் அவரது தந்தை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், இரவு நேரத்தில் அவரை அலைப்பேசியில் அழைத்து, வீட்டை விட்டு வெளியே வரச்செய்து, பேசிக்கொண்டிருக்கும்போதே அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். மோசஸின் அலறல் சப்தம் கேட்டு அவரது தந்தை வெளியே வந்தபோது, சமூக விரோதக் கும்பல் ஓடிவிட்டது. குற்றுயிராக இருந்த மோசஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் எனத் தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

cnc

இந்தப் பச்சைப் படுகொலைக்கு எனது மிகக் கடுமையான கண்டனத்தைத் தெரிவிக்கிறேன்; இந்தக் கொடூரத்தை நிகழ்த்தியவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். கஞ்சா வியாபாரம் செய்வது உள்ளிட்ட சமூக விரோத கும்பல்களுக்கு, எடப்பாடி அ.திமு.க. அரசும், அதன் காவல்துறையும் பாதுகாப்பளிப்பதும், பத்திரிகையாளர்கள் மற்றும் ஊடகத்தினரின் உயிர் பறிக்கப்படுவதைக் கண்டும் காணாமல் இருப்பதும், ஜனநாயகத்தின் மீது விழுகின்ற சம்மட்டி அடியாகும். தொலைக்காட்சிச் செய்தியாளர் மோசஸ் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து; பத்திரிகைச் சுதந்திரம் காப்பாற்றப்பட தி.மு.கழகம் என்றென்றும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கூறியுள்ளார்.

incident journalist mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe