Skip to main content

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! வேல்முருகன்

Published on 19/08/2018 | Edited on 19/08/2018
mo

 

நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் அடைமழை கொட்டியுள்ளது! எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி என்கிறார் அக்கட்சியின் தலைவர் தி.வேல்முருகன். இது குறித்த அவரது அறிக்கை:
 

’’கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்திருந்தபடி,  ”100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக மோசமான வெள்ள பாதிப்பை கேரளா எதிர்கொண்டுள்ளது. அணைகள் அனைத்தும் திறந்துவிடப்பட்டுள்ளன. இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளனர். 2,23,139 பேர் 1,500 நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.”

 

கேரளாவின் 14 மாவட்டங்களிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.

 

பல பகுதிகளில் வீடுகளின் மாடி வரை வெள்ளம் சூழந்துள்ளது. இதனால் பலரும் மொட்டை மாடியிலும் கூரைகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அவர்களை மீட்கும் பணிகளில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். மீட்கப்படுபவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்புப் பணியில் முப்படையும் இறக்கிவிடப்பட்டுள்ளது.

 

வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்ய பிரதமர் மோடி கேரளா வந்தார். திருவனந்தபுரத்தில் வந்திறங்கிய அவர், தனி விமானம் மூலம் கொச்சி சென்று, வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பார்வையிட ஹெலிகாப்டரில் புறப்பட்டார். ஆனால் கனமழை கொட்டத் தொடங்கியதாலும், மோசமான வானிலையாலும் ஹெலிகாப்டரை தொடர்ந்து இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதனால் பிரதமர் கொச்சிக்கே திரும்பிச் செல்லவேண்டியதாயிற்று.

 

கொச்சியில் ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் மற்றும் அதிகாரிகளுடன் வெள்ள பாதிப்புகள் குறித்து ஆலோசனை நடத்திய பிரதமர், கேரளத்திற்கு வெள்ள நிவாரண உடனடி நிதியாக ரூ.500கோடி ஒதுக்குவதாகவும், முழுமையான சேத மதிப்பீட்டு ஆய்வுகளுக்குப் பிறகு உரிய நிதி அளிப்பதாகவும் அறிவித்தார்.

 

பிதமரின் இந்த அறிவிப்பை வரவேற்கிறது, பாராட்டுகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி!நேரில் வந்த பிரதமரை, ஆய்வு செய்யவும்விடாமல் பெய்த இந்த அடைமழை-கனமழை என்பது முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்தபடி, கடந்த 100 ஆண்டுகளில் இல்லாதது!

 

இந்தப் பேய்மழை பற்றிச் சூழலியலாளர்கள் கூறுகையில், ”நவீனமயமாக்கத்தின் விளைவாக, உலகில் அதாவது இந்தப் புவிக்கோளத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றமும்; நவீனமயம், வளர்ச்சி என்ற பெயரில், மேற்குத்தொடர்ச்சிமலையின் கேரளப் பகுதிகளை ஆக்கிரமிப்பாளர்கள் கபளீகரம் செய்து இயற்கையை அழித்துவிட்டதும்தான் இதுபோன்ற பேரிடர்களுக்குக் காரணம்” என்கின்றனர்.

 

வரலாறு காணாத இந்தப் பெருமழையால் ஏற்பட்ட உயிரிழப்புகள்-உடமை இழப்புகளும் வரலாறு காணாததே! மீட்புப் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படை மட்டுமல்லாது, முப்படையையுமே இறக்கிவிட வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது!   எனவே இந்த கனமழை பாதிப்பை ”தேசிய பேரிடராக” அறிவித்து, தேவைப்படும் நிதியை கேரளாவுக்கு வழங்கவேண்டுமாய் ஒன்றிய அரசை வேண்டிக்கொள்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி! ’’

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.