Prime Minister Modi will meet Tamil Nadu BJP officials

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நாளை (19.01.2024) முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை சென்னை, கோயம்புத்தூர், மதுரை திருச்சி ஆகிய மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இதில், 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் மொத்தம் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து சுமார் 5500க்கும் மேற்பட்ட விளையாட்டு வீரர், வீராங்கனைகள், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்கள், 1000க்கும் மேற்பட்ட நடுவர்கள் மற்றும் 1200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

Advertisment

அதே சமயம் நேரு வெளிப்புற விளையாட்டு அரங்கில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு’ தொடக்க விழாவில் பிரதமர் மோடி பங்கேற்பதற்காக நாளை (19.01.2024) தனி விமானம் மூலம் சென்னை வரவுள்ளார். மேலும் 5:45 மணி அளவில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில், சென்னை ஆளுநர் மாளிகையில் நாளை 30க்கும் மேற்பட்ட தமிழக பாஜக நிர்வாகிகளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், மாநில நிர்வாகிகள் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் எனப் பலரையும் பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். அப்போது நாடாளுமன்ற தேர்தல் குறித்தும், தேர்தலுக்கு தமிழக பாஜக தயாராகி வருவது குறித்தும், கூட்டணி குறித்தும் விவாதிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.