Skip to main content

“பிரதமர் மோடி நிச்சயம் அனுமதிக்கமாட்டார்” - கே.பி.முனுசாமி

Published on 07/04/2023 | Edited on 07/04/2023

 

"Prime Minister Modi will definitely not allow" KP Munusamy

 

இந்திய குடிமைப்பணி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்வு சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுடன் உரையாற்றினார். 

 

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, “ஸ்டெர்லைட் நாட்டின் 40 சதவீதம் காப்பர் தேவையை பூர்த்தி செய்தது. இதனை வெளிநாட்டு நிதியுதவியுடன் மக்களைத் தூண்டிவிட்டு மூடிவிட்டனர்” எனக் கூறியிருந்தார். மேலும் அவர், ஆளுநர் கிடப்பில் வைத்துள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும், நிறுத்தி வைக்கப்படும் மசோதாக்களை குறிப்பிடுவதற்கு வார்த்தை அலங்காரத்திற்காகவே நிறுத்திவைப்பு என்கிறோம் என்றும், நிறுத்தி வைத்தாலே அது நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். 

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி, “மக்களின் உணர்வுகளின் அடிப்படையில் தான் கடந்த கால அரசுகள் நடவடிக்கை எடுத்துள்ளன. ஒரு உயர்ந்த பதவியில் இருக்கின்ற ஒருவர் பொதுவெளியில் இதுபோன்ற கருத்துகளைச் சொல்வது அவருக்கு இது அழகல்ல. ஆட்சியாளர்கள் மக்களின் உணர்வுகளையும் நியாயமான கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்கள். அப்படி செயல்பட்டு முடிந்த நிகழ்வில் மீண்டும் இவ்வாறு கருத்து சொல்வது சற்று வேதனையான நிகழ்வாகவே கருதுகிறேன்.

 

இந்தியாவின் தலைமை அமைச்சராக உள்ள பிரதமர் இன்று தன்னுடைய கடுமையான உழைப்பாலும் நாட்டு மக்களைக் காப்பாற்ற வேண்டி எடுக்கும் நடவடிக்கைகளாலும் உலகத் தலைவராக உயர்ந்து கொண்டுள்ளார். அவ்வாறு இருக்கையில் அந்நியப்பணம் இங்கு வருவதற்கு நிச்சயம் அனுமதிக்கமாட்டார். அப்படி செய்பவர்களை நிச்சயம் சிறைக்கு அனுப்புவார். தலைசிறந்த பிரதமர் அவர். பல்வேறு வகைகளில் நாட்டை தலைநிமிர வைத்துள்ளார். இதுபோன்ற தவறு செய்பவர்கள், கழகம் விளைவிப்பவர்களை பிரதமர் அனுமதிக்கமாட்டார். தமிழகத்தில் இருக்கும் அரசு நிர்வாகம் மற்றும் அரசு அதிகாரிகளும் திறமைமிக்கவர்கள். இவர்களும் அதை கட்டுப்படுத்துவதற்கு சிறப்பாக செயல்படுவார்கள்.” என்று கூறியுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்